செளந்தர்யலஹரி 51 & 52


சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா


தாயே! உனது கண்கள் பரமசிவனிடத்து சிருங்கார பாவத்துடனும், ஸபத்னியான கங்கையிடம் கோபத்துடனும், சிவனின் லீலைகளின் போது ஆச்சர்யத்துடனும், அவரால் அணியப்பட்ட ஸர்ப்பங்களிடம் பயத்துடனும், நெற்றிக் கண் தாமர புஷ்பம் போல் சிவப்பாக வீர ரசத்துடனும், தன்னை சந்தோஷிக்கச் செய்த ஜனங்களின் வார்த்தைகளால் ஏற்பட்ட ஹாஸ்ய ரஸத்துடனுமும், என்னிடத்தில் கருணையுடனும் ஸர்வ ரஸத்துடன் விளங்குகின்றன.

இந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார். எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார். பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையும் தெரிகிறதாம். அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

ஸகருணா - கருணையுடன் கூடிய; ஸகீக்ஷு - ஸக தோழியர்களிடத்தே; ஸ்மேரா - சிரிப்புடன் மலர்ந்த; ஸரஸிருஹ செளபாக்ய ஜனனீ - தாமர புஷ்பம் போன்ற சிவந்த; ஹராஹிப்ய - ஹரனால் அணியப்பட்ட ஸர்பங்களால்; பீதா - பயத்துடன்; கிரிச சரிதே - ஈசன் லீலைகளால்; விஸ்வமயவதீ - ஆச்சர்யத்தோடும்; ஸ்ரோஷா - கோபத்துடன்; கங்காயாம் - கங்கையினிடத்தே; குத்ஸனபரா - வெறுப்புடனும்; சிவே - பரமசிவனிடத்து சிருங்காரார்த்ரா - சிருங்கார ரஸத்துடன்; தே த்ருஷ்டி: உன் பார்வை;

அடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:

அரனிடத்திற் பேரின்ப அருளும் அவனல்லார்பால்
அருவருக்கும் அவன்முடிமேலணிந்த நதியைச்சீறும்
பரவுநுதல்விழி அழல்முன் பார்த்தில போலதிசயிக்கும்
பணியாய பணிவெகுளப் பயந்தன போலொடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து வீரரதம் படைக்கும்
வினவுதுணைச் சேடியற்கு விருந்துநகை விளைக்கும்
இரவுபகலடி பரவும் எளியனைக்கண்டு அருள்புரியும்
இத்தனையோ படித்தன-உன் இணைவிழிகள் தாயே!.

---------------------------------------------------------------------------------------


கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ
புராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:

அம்மா!, காதுவரையில் நீண்டு, அம்பிலிருக்கும் இறகுகள் போன்று இமை மயிர்களைக் கொண்ட உனது கண்களானது, த்ரிபுராந்தகனான பரமசிவனது மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் காதுவரையில் இழுத்துப் பிரயோகம் செய்யப்பட்ட பாணங்கள் போன்று இருக்கின்றன.

அம்பிகையின் கண்களையும், இமையிலிருக்கும் முடிகளையும் மன்மதனது பாணங்களுக்கும், அப்பாணங்களின் இறகுகளுக்கும் உவமைசெய்திருக்கிறார் பகவத்பாதர். பாணங்களை ஏவும் சமயத்தில் அவற்றை வில்லின் நாண் கயிற்றுடன் சேர்த்து காதுவரை இழுப்பது என்பது அம்பிகையின் கண்கள் காதுவரை நீண்டிருப்பதற்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகர்ணாக்ருஷ்ட ஸ்மர-சர விலாஸம் - காதுவரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தின் அழகு; கலயத: - உடைத்தாயிருக்கின்ற; தததீ - தரித்துக் கொண்டு; புராம் பேத்து: - புரங்களையழித்த பரமனின்; சித்த ப்ரசமரஸ - மனதின் நிராசையைப் போக்கும்படியான; தவ - உன்னுடைய; இமே நேத்ரே - இந்த கண்களிரண்டும்; கர்ணாப்யர்ணம் கதே - காதுகளுக்கு ஸமீபம் போய்; பக்ஷ்மாணி - இமை மயிர்களை; கருதவ இவ - அம்பிலிருக்கும் இறகுகள் போன்ற; கோத்ராதரபதி - மலைகளின் பதியான ஹிமவான்; குலோத்தம்ஸகலிகே - குலத்தின் மொட்டு (குலவிளக்கு?) போன்றவளே.

அடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:

இகல்பொரக் குழையை முட்டும்
இமைமயிர் ஒழுங்கிற் றூவல்
நிகரறு நித்தர் யோக
நீக்கிவெம் போக நல்கும்
சிகரவெற் பரசன் தொல்லைத்
திருமர பென்னுமந் தெய்வ
மகுடமா மணிநின் கண்கள்
வயமதன் வாளிதானே.

செளந்தர்யலஹரி 49 & 50


விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே


அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் விசாலா என்றும், மங்களகரமானதால் கல்யாணி என்றும், இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா என்றும், கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் தாரா என்றும், வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் மதுரா என்றும், ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் போகவதீ என்றும், சகல உலகங்களையும் காப்பதால் அவந்தீ என்றும் கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.


இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கமாம். இந்த 8 விதமான பார்வைகளாவன; உள்ளார்ந்த, ஆச்சர்யமான, முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய, சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய, மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம். இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது, ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

ஸம்க்ஷோபணம் - குழப்பம்; த்ருவம் விஜயதே - நிச்சயமாக விளங்குகிறது; தத் தத் - அந்தந்த; நாம வ்யவஹரண யோக்யா - பெயர்களால் அழைக்கும் யோக்கியதை உடைய; பஹுநகர - அநேக நகரங்கள்; விஸ்தார விஜயா - விஸ்தாரமாக விஜயம் செய்ய; அவந்தீ - காப்பாற்றுகின்ற; ஆபோகவதிகா - ஆழ்ந்த; கிமபி மதுரா - வர்ணிக்க முடியாத மாதூர்யமான; க்ருபா - கருணை; தாராதாரா - ப்ரவாஹத்துக்கு ஆதாரமான; குவலையை: - இந்தீவர புஷ்பம்; அயோத்யா - ஜெயிக்க முடியாத; ஸ்புடருசி - விரிந்த காந்தியுடையது; கல்யாணி - மங்களமான; தே திருஷ்டி - உன் பார்வை.

கோலநகர் விசாலையாய் நிரந்தரக் கல்யாணியாய்க்
குவலயத்தால் அயோத்தியாய்க் குலமதிரை தானாய்
சாலஒளிர் போகவதியாய் அமுத தாரையாய்த்
தண்ணளியால் அவந்தியாய்ச் சகவிசையை எனலாய்
நிலவிழி புடைபரந்து நெடுநகரப் பெயர்கவர்ந்து
நீண்டு சேந்தரிபரந்து நிகரொழிக்கும் என்றால்
ஆலவிடம் அமுதெனக்கொண்டு அருந்திய உன்மத்தர் புரம்
அதனில் ஒருபுறம் கவர்தல் அதிசயமோ தாயே!

-------------------------------------------------------------------------------------------------
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்

கவிஞர்களது க்ரந்தங்களான புஷ்பங்களில் இருக்கும் மகரந்தத்தை பருகுவது போல உனது காதுகள் அமைந்திருக்கிறது. அந்த க்ரந்தங்களில் சொல்லப்பட்ட நவரசங்களையும் பார்க்க உனது இரு கண்களும் தேனிக்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றது. உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்.

அதாவது, அன்னையின் காதுகள் நீண்டு இருப்பதும், அவளை துதிக்கும் பக்தர்களது கோரிக்கைகளை எப்போதும் அக்காதுகள் கேட்டுக் கொண்டு இருப்பதையும், அவளது கண்கள் பக்தர்களுக்கு கருணை மழை பொழிந்த வண்ணம் இருப்பதாகவும், அக்னி ரூபமான நெற்றிக் கண் தூர்-மதியுடையவர்களை சுட்டெரிக்க ஏதுவாக சிவந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிஞ்சித் அருணம் - கொஞ்சம் சிவப்பாக; அளிக நயனம் - நெற்றிக்கண்; அஸுயாஸம்ஸ்ர்காத் - பொறாமையால்; கடாக்ஷ வ்யக்ஷேப - கடாக்ஷிக்கும் கண்களாகிய; ப்ரமர கலபெள - தேனிக் குஞ்சுகள்; தவ கர்ணயுகளம் - உன்னிரு காதுகளும்; மகரந்தைக ரஸிகம் - மகரந்தத்திலிருக்கும் தேனைப் பருக விரும்பும்; ஸந்தர்பஸ்தபக - மலர்ச் செண்டினைப் போன்ற கர்ந்தங்கள்; கவீனாம் - கவிகள்

அடுத்து வருவது கவிராஜர் சொன்னது.

இருசெவியுண் பலகவிதை
இரரொழுகு பசுந்தேனிற்
பெருகுநவ ரதமருந்திப்
பிறழ்ந்திடுமுன் பிணைவிழியாங்
கருநிறவண்டினைக் களிப்பக்
கண்டு பொறாதென்னையோ
வரிநுதற்கண் அளிசிவந்த
வளம்பாராய் மலர்க்கொடியே.

செளந்தர்யலஹரி 47 & 48



ப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்
தநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே


ஸகல புவனங்களுக்கும் அபயம் கொடுத்திருக்கும் உமையவளே!, கொஞ்சம் வளைந்திருக்கும் உன்னுடைய புருவங்கள் வில்லாகவும், உனது கண்களாகிய வண்டுகளை வில்லின் நாணாகவும் (வில்லில் இருக்கும் கயறு), அந்த வில்லை மன்மதன் தனது வலது கையில் பிடித்திருப்பது போன்று உனது நாச தண்டமும் (மூக்கு), மன்மதனது வில் பிடித்த கையின் முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும், அவனது விரல்களும் உள்ளங்கையும் வில்லின் நடுப்பகுதியையும் மறைத்ததுபோல தோன்றத்தை தருகிறது.

இந்தப் பாடலில் அம்பிகையின் புருவங்கள் மன்மதனுடைய வில்லுக்கு சமமாகக் கூறப்பட்டுள்ளது. மன்மதனது வில்லில் 'மெளர்வி மதுகரமயீ'' என்பதாக (இங்கே) அதாவது வண்டுகளே நாணாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் அந்த வண்டுகளாக அன்னையின் கண்விழியசைவினைச் சொல்கிறார். காதுவரை நீண்ட மீன் போன்ற கண்களில் (மீனாக்ஷி) கருவண்டு போன்ற கருவிழிகள் ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வருவது நாண் போன்ற தோற்றத்தை தருகிறதாம். அன்னையின் நாஸதண்டம் (மூக்கு) மன்மதனுடைய முழங்கைக்கும், அவனது முஷ்டி (மடங்கிய விரல்கள் உடைய கைப் பகுதி) அன்னையின் புருவங்களூக்கு மத்தியில் இருக்கும் பகுதிக்கும் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாக வில்லில் இருந்து அம்பு எய்வதற்கு முயலும் போது இடது கரத்தில் வில்லும், அம்பினை வலது கரத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே தெளிவாக வலது (ஸ்வயேதர) கரத்தில் வில்லை வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். வில்லை வலதுகையினால் பிடித்தால்தான் அதன் நாண்கள் முழங்கைகளால் மறைக்கப்படும், இடதுகையில் அம்பெய்யும் விதமாகப் பிடித்தால் நாண்கள் மறைந்திருக்காது, அப்படியே மறைந்திருப்பதைக் காண முயன்றாலும் புருவ மத்தியானது விரல்களால் ஏற்படும் சுருங்கிய தோற்றம் தராது, புறங்கையினையொத்த இடைவெளி போன்றே தோன்றும். சகல உலகங்களுக்கும் பயத்தினைப் போக்கும் விதமாக புருவங்களை சற்றே நெரிப்பதால் தோற்றம் தருவதானது, நாணேற்றிய வில்லுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

புவன-பய-பங்க-வ்யஸ்நிநி - சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடையவளே; த்வதீயே-உன்னுடைய;கிஞ்சித் புக்னே-கீழ் நோக்கிபடி கொஞ்சம் வளைந்த; ப்ருவெள - புருவங்கள்; மதுகர ருசிப்யாம் - வண்டுகள் போல அழகுடன் கூடிய; நேத்ராப்யாம் - கண்களால்; த்ருத குணம் - நாண் ஏற்றியதான; ஸ்வ்யேதர கர க்ருஹீதம் - வலதுகையால் பிடிக்கப்பட்ட; ப்ரகோஷ்டே - முழங்கையின் முடிவுப் பகுதி; முஷ்டெள் ச - விரல்கள் மடக்கிப் பிடித்த; ஸ்தகயதி - மறைக்கப்பட்டதால்; நிகூடாந்த்ரம் - மறைந்த நடுப்பகுதி; ரதிபதே: - ரதியின் பதி-மன்மதன்; தனுர் - வில்; மந்யே - நினைக்கிறேன்.

உமா என்று இங்கே அன்னையை விளித்திருக்கிறார். உமா என்பதற்கான விளக்கத்தை பிறகு ஒரு தனிப் பதிவில் பார்க்கலாம். இப்போ கவிராஜர் சொன்னதைப் பார்க்கலாமா?

கருவிழிச் சுருப்பு நாண் உன்
கண் மலரம்பு கன்னற்
புருவவில் நடு ஒழித்தல்
போன்றத்ய் வளைத்துப் போர்மேல்
வருமதன் பிடித்த கைக்குள்
மறைந்தது போலும் என்றால்
திருமகள் பரவும் அம்மே
சிலையிது புருவம் அன்றே


------------------------------------------------------------------------------------------------


அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்


அம்மா, சூர்ய ரூபமான உன்னுடைய வலதுகண்களால் பகலையும், சந்திர ரூபமான இடது கண்களால் இரவையும் உண்டுபண்ணுகிறாய். கொஞ்சமாக மலர்ந்ததும், தங்கத் தாமரைபோன்ற காந்தி/ஒளி உடையதும், அக்னி ரூபமானதுமான உனது நெற்றிக்கண்ணானது இரு சந்தியா காலங்களையும் உண்டு பண்ணுகிறது.




அம்பாளுடைய கண்களாலேயே பகல்-இரவு மற்றும் ஸந்தியாகாலம் ஆகியவை உருவாகிறது என்று கூறப்படுவதால் தான் காலாதீதமானவள் என்று அம்பிக்கை கூறப்படுகிறாள். பரமசிவன் போன்றே அன்னைக்கும் நெற்றிக் கண் உண்டு. பரமசிவனைப் போலவே இவளது நெற்றிக் கண்ணும் அக்னி ஸ்வரூபம். அந்த நெற்றிக் கண்ணானது, அக்னியின் நிறமும், ஹேம-அம்புஜத்தின் (தங்க தாமரை) ஒளியும், சூரிய உதய/அஸ்தமன நேரத்தில் உருவாகும் சிவப்பு நிறமும் கொண்டதாக, மலர்ந்தும்-மலராத தங்கத்தாமரை போல இருக்கிறதாம்


தவ ஸவ்யம் நயனம் - உன் வலது கண்ணானது; அர்க்காத்மகதயா - ஸூர்யனாக; அஹஸ் ஸூதே - பகலை உண்டுபண்ணுகிறது; தே வாமம் நயனம் - உன் இடது கண்ணானது; ரஜனீ நாயகதயா - சந்த்ரனாக இருந்து கொண்டு; த்ரியாமாம் ஸ்ருஜதி - ராத்ரியை உண்டுபண்ணுகிறது; தே த்ருதீயா த்ருஷ்டி: நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணானது; தர தனித ஹேமாம்புஜ ருசி: - கொஞ்சம் மலர்ந்த தங்கத் தாமரையின் ஒளியுடன்; திவஸ நிசயோ: அந்தர சரீம் - பகல்-இரவுக்கு இடைப்பட்ட; ஸந்தியா - சந்தியாகால; ஸாமாதத்தே - உருவாக்குகிறது.


ஒருமலர்க்கண் இரவி-வலத்து
உதித்தருளும் நண்பகலும்
ஒருமலர்க்கண் மதியின் இடத்து
உதித்தருளும் பேரிரவும்
திருநுதற்கட் பொற்கமலச்
செந்நிறத்தீ விளைத்தருளும்,
விரவுசெக்கர் மாலையும்
உன்விழைவு அகலா விழுப்பொருளே

செளந்தர்யலஹரி 45 & 46



அராளை: ஸ்வாபாவ்யாத் அளிகளப ஸஸ்ரீபிரளகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தசநருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தெள மாத்யந்தி ஸ்மரதஹந சக்ஷுர் மதுலிஹ:

தாயே, இயற்கையாகவே சுருண்ட முடியால் சூழப்பட்ட உனது நெற்றியானது, வண்டுகளால் சூழப்பட்ட தாமரை மலரை தோற்கடிப்பதாக இருக்கிறது. அந்த முகத்தில் தவழும் உனது புன்சிரிப்பினால், பல்வரிசைகளின் மூலமான காந்தியை பிரதிபலிக்கும் இதழ்கள், மற்றும் பரிமளமுடைய அந்த முகாரவிந்தத்தால் காமனை வென்ற பரமசிவனின் கண்களான தேனிக்கள் மயங்கியிருக்கின்றன. மன்மதனை எரித்த பரமசிவனது கண்கள், இப்போது அம்பிகையின் முக லாவண்யத்தினால் காமவிகாரத்தை அடைந்ததாம்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் முகம் தாமரைப் புஷ்பமாகவும், அவளது முன்னுச்சியில் இருக்கும் சுருண்ட முடியானது தாமரையை மொய்க்கும் வண்டுகளாகவும் சொல்கிறார். அம்பிகையின் சிரிப்பினால் வெளிப்படும் பல்வரிசை மூலம் வெளிவரும் காந்தியுடன் கூடிய அந்த முகத்தைக் கண்ட பரமசிவன் மயங்கிவிடுகிறார். பரமசிவனைச் சொல்லும் போது, என்னதான் காமனை ஜெயித்தவரானாலும் அன்னையின் முகலாவண்யத்தின் முன் மயங்கி விடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.


ஸ்வபாயாத் - இயற்கையாகவே; அராளை - சுருட்டையான; ப்ரீதம் - சூழப்பட்ட; அளகை - முன்னுச்சி மையிர்கள்; அளிகளப - சிறு வண்டுகள்; ஸஸ்ரீபி: - காந்தியுடைய; தே வக்த்ரம் - உன் முகமானது; தரஸ்மேரே - புன்சிரிப்புடன் கூடியது; தசனருசி - பல் வரிசைகளுடைய; கிஞ்ஜல்க - இதழ்களால்; ஸுகந்தெள - நல்ல மணமுள்ள; யஸ்மிந் - முகத்தில்; ஸ்மரதஹந - மன்மதனை எரித்த; சக்ஷுர் மதுலிஹ: - கண்களான தேனீக்கள்; மாத்யந்தி - மயங்குகின்ற

கூரெயிற்றின் அகஇதழுங் கொண்கர்விழி வரிவண்டும்
குழற்படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்
பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரல் முகையவிழப்
பிறழுமுன் தருணமுக கமல மென்றால்
ஒறியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது
மற்றோர்-இயற்கை செயற்கைமணம் போதுசெய்யும்
நீரியற்கை மலர்க்கமல மிதற்குடைந்து பங்கமுறல்
நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே

--------------------------------------------------------------------------------------

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.


அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். (இது பற்றி பெரியவர் திராச ஒரு பதிவு போட்டிருக்கிறார், அது இங்கே). பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.


யத் லலாடம் - உன் நெற்றியானது; லாவண்யத்யுதி - நிர்மலமான நிலவு; ஆபாதி - ப்ரகாசிக்கிறதோ; மகுடகடிதம் - கீரிடத்தில் இருக்கும்; த்விதீயம் - இரண்டாவதான; சந்த்ர சகலம் - அந்த சந்த்ர பிம்பம்; மந்யே - நினைக்கிறேன்; உபயமபி - சிரசில் இருக்கும் அர்த்த சந்திரனும், நெற்றியாக இருக்கும் அர்த்த சந்திரனும் ஆகிய இரண்டும்; விபர்யாஸந்யாஸாத் - வித்தியாசமான வளைவுகளைக் கொண்டிருக்கும்; மத: ஸ்ம்பூயச - சரியாக பொருந்துவதால்; ஸுதாலேபஸ்யூதி: - அம்ருதத்தால் பூசப்பட்ட/நிறப்பப்பட்ட; ராகா ஹிமகர: - பூர்ண சந்திரனாக; பரிணமதி - ஆகின்றது.


கோதை நீண்முடி கொண்டொளிர் திங்கள்சேர்
பாதி வாள்நுத லென்று படிந்ததோ
ஈது கூடி யிரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே

செளந்தர்யலஹரி 43 & 44



துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்


ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும்.

அன்னையின் கரிய கூந்தலானது நமது மனத்தில் இருக்கும் அஞ்ஞான இருட்டுக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்களது கேசத்தில் மணம் சேர்வதற்கு பூ முடிப்பார்கள், ஆனால் அன்னையின் கூந்தலில் இருப்பதால்தான் இந்திரனது உத்யான வனத்துப் புஷ்பங்கள் கூட மணம் பெற்றது என்பது வர்ணனை. இவ்வாறாக, முந்திய பாடலில் பார்த்த கிரீட வர்ணனை முடிந்து இப்போது கூந்தல் வர்ணனை பண்ணியிருக்கார். இதற்கு தகுந்த சஹஸ்ர நாமம் 'புன்னாக செளந்திக லஸ்த்கசா' என்பது. இதற்கு பாஷ்யம் பண்ணின பாஸ்கர ராயர் இயற்கையான மணமுள்ள கூந்தலில் இம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமேயன்றி, சாதாரண மனிதர்கள் போல் கேசத்திற்கு மணம் சேர்க்க அல்ல என்று கூறுகிறார்.

துலித தளிதேந்தீவர - மலர்ந்த புஷ்பங்களீன் வனத்திற்குச் சமமான; கந ஸ்நிக்த ச்லக்ஷ்ணம் - அடர்த்தியான, வழவழப்பான; தவ- உன்னுடைய; சிருர நிருகும்பம் - கேச அலங்காரம்; த்வாந்தம் - அஞ்ஞானம்; துனோது - போக்கடிக்கும்; யதீயம் - எவற்றின்; ஸஹஜம் - இயற்கையான; ஸெளரப்யம் - வாசனை; உபலப்தும் - அடைவதற்காக; வலமதந - வலன் என்ற அசுரனை வதைத்த இந்திரன்; வாடீ விடபினாம் - உத்தியான வனத்தில்; ஸுமநஸ: - புஷ்பங்கள்; மந்யே - நினைக்கிறேன்.

கிழே இருப்பது இதன் தமிழாக்கம் வீரை கவிராஜர் செய்தது:


அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்று
அறநெய்த் திருண்டு செறிவோடு
இலங்குறு மியற்கைமணம் எண்திசை யளப்பவதில்
இதழ்மூழ்கு நறைவி ழைவினாற்
பொலன்கொண்முடி யாகண்ட லேசற்பொற் றுணர்விரி
பொதும்பர்மது மலர்ப் டிவதோர்
சிலம்பளி பரந்தஉன் தோதியென் மனத்திருட்
செறிவுதெற அருள்க மலையே!

----------------------------------------------------------------------------------------

தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்

அம்மா!, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.

பெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது] இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர். இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.

வதந - முகத்தின்; செளந்தர்ய - அழகிய; லஹரி - வெள்ளம்; பரீவாஹ - ப்ரவாஹம்; ஸ்ரோத: - வழியும்; ஸரணிரவ - கால்வாய் போன்ற; ஸீமந்த ஸரணி - வகிடாக இருக்கும் ரேகை; கபரீபார - கேச பாரம்; திமிர - கருப்பான; த்விஷாம் ப்ருந்தை: எதிரிக் கூட்டம்; பந்தீக்ருதம் - சிறை செய்யும்; நவிநார்க்க கிரணமிவ - இளஞ்சூரியனது கதிர்கள் போல்; சிந்தூரம் - குங்குமம்; வஹந்தி - தரித்த; தனோது - கொடுக்கட்டும்.

அடுத்து கவிராஜர் சொன்னது;

மோதிய வெங்கதிர் மீளவெ ருண்டிருள்
மூடஓ துங்கிய வாறேயோ
சோதிமு கங்கவி னேறி வழிந்தன
சோரவி டுங்கவர் காலேயோ
ஒதிபி ணைந்து பின்வீழவ கிர்ந்ததன்
ஊடெழு தும்பரப்பை யாதேயோ
கோதறு சிந்துர ரேகைவ ளம்பிறர்
கூறுவ தன்றிது மாதாவே

செளந்தர்ய லஹரி - 42

போன இடுகையில் சாக்த உபாஸனையில் இருக்கும் இரு பெரும் பிரிவுகளைப் பற்றிய சில விஷயங்களைக் கண்டோம். இவ்விடுகையில் செளந்தர்ய லஹரி பகுதிக்குச் செல்லும் முன் தமிழில் செளந்தர்ய லஹரியை மொழியாக்கம் செய்த கவிராஜ பண்டிதர் என்பவரைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

இவர் பாண்டிய நாட்டில் வீரை [இப்போது என்ன பெயர் என தெரியவில்லல] என்ற ஊரில் வசித்தவர். சிறு-பிராயம் முதலே அம்பிகையின் உபாசனையில் ஈடுபட்டு அவளுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றவர் என்று தெரிகிறது. தக்ஷிணம், வாமம் என்கிற இரண்டு வித உபாசனைகளில், இவர் வாம மார்க்கத்தை அவலம்பித்தவர்/உபாசித்தவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பிகையின் திருவருளால் விசேஷமான கவித்துவம் வாய்க்கப் பெற்று விளங்கியிருக்கிறார். இவர் வராஹி-மாலை, ஆனந்த-மாலை போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

இவருடைய செளந்தர்ய லஹரி மொழியாக்கமானது ஏற்கனவே இருக்கும் ஆனந்தலஹரி-செளந்தர்ய லஹரி என்னும் பிரிவினை அனுசரித்தே இருக்கிறது. இம்- மொழியாக்கம் சம்ஸ்கிருதத்தின் மூலத்தை அப்படியே ஒட்டி இருப்பது விசேஷம். இது மிக எளிதாகவும், படிக்கப்படிக்க இன்பமும், அன்னையின் அருளையும் உணரச்செய்கிறது என்றால் மிகையல்ல. இந்த மொழிப் பெயர்ப்புக்கு சைவ எல்லப்ப நாவலர் என்பவர் உரையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இனி ஒவ்வொரு செளந்தர்ய லஹரி இடுகையின் முடிவிலும் இந்த தமிழாக்க பாடல்களும் இடம் பெறும். இடுகையின் முடிவில் இந்த தமிழாக்கத்தைச் சொல்வதால் தமிழை பின் தள்ளுவதாக அர்த்தம் கற்பிக்காது, மூலத்தைச் சொல்லி அதன் மொழிப் பெயர்ப்பைச் சொல்லும் மரபாக மட்டுமே பார்க்க வேண்டுமென வேண்டுகிறேன்.

41ஆம் ஸ்லோகம் தனி இடுகையாக இருப்பதால் இவ்விடுகையில் 42ஆம் ஸ்லோகத்தை மட்டும் பார்க்கலாம்.



கதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி
தம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்
தநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம்

மலையரசன் மகளே!, த்வாதச ஆதித்யர்களே மாணிக்கங்களாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எந்த பக்தனாவது வர்ணிக்கையில், உன் கிரீடத்தில் பதிந்திருக்கும் ரத்னங்களின் காந்தியால், [அந்த கிரீடத்தில் இருக்கும்] சந்திரன் பல நிறமுடையதாக தோன்றுவதைக் காணும் போது சந்த்ரனை இந்திர தனுஸோ என்று சந்தேகித்து அப்படியே வர்ணிக்கக்கூடும்.

ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள். ஆக அம்பாளும் சந்த்ரமெளலி தான். அன்னைக்கு "அஷ்டமிச் சந்த்ர விப்ரபா" என்ற நாமம் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக அன்னையின் கிரீடத்தில் உள்ள சந்த்ரன் வெண்மையாக இருந்தாலும், அவளது கிரீடத்தில் இழைக்கப்பட்டிருக்கும் மற்ற நவரத்னங்களான பன்னிரு ஆதித்யர்களது ஒளியால் பல வர்ணங்களில் ஜகஜ்வலிக்கும் இந்திர தனுசு போன்று காக்ஷியளிக்கிறதாம். இதுவே "ஐந்த்ரஸ்யேவ சராஸனஸ்ய தததீ மத்யேலலாடம் ப்ரபாம்" என்று லகுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே த்வாதச ஆதித்யர்கள் அம்பாளுக்கு அருகில் இருந்து சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பு.


ஹிமகிரிஸுதே - மலையரசன் மகளே; மாணிக்யத்வம் - மாணிக்கங்களாக; கதை: - இருக்கும்; ககநமணிபி: - ஆதித்யர்களால்; சாந்த்ர கடிதம் - நெருக்கமாக இழைத்த; தே - உன்னுடைய; ஹைமம் - தங்கம்; நீடேயே - கிரீடத்துக் குவளைப்பகுதியில் இருக்கும் ரத்னக்கள்; ச்சாயா - காந்தி/ஒளி; ச்சுரண - வ்யாபிக்கிறது/பரவுகிறது; சபளம் - பல நிறங்களாக தெரிதல்; சந்த்ர சகலம் - சந்த்ர பிரபை/ரேகை; செளநாஸிரம் தனு: - இந்த்ர வில்; திஷணாம் - யூகம்; ந நிபத்னாதி கிம் - கொள்ளமாட்டானா?.

இனி வருவது கவிராயரது செய்யுள்,

அந்தர மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்
தமருமுன் தம்பொன் முடிமேல்
இந்துகலை நவமணியி னொழுகுபல நிறமடைந்து
இலகுமதி சயவ டிவினாற்
சந்த்ரகலை நன்றுநன் றென்பர்சிலர் அன்றன்று
சந்த்ரகலை இந்த நிறமோ
இந்த்ரசிலை இந்த்ரசிலை யென்பர்சில ராதலால்
யாதென வழுத்த உமையே.

ஆனந்த லஹரி - 41

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மாநம் மந்யே நவரஸமஹாதாண்டவநடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதயவிதிமுத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

தாயே!, லாஸ்யத்தில் ப்ரியமுடைய மஹா பைரவியாகிய உன்னுடன் நவரஸங்களுடன் கூடிய மஹாதாண்டவத்தைச் செய்யும் நவாத்மகனான ஆனந்த பைரவராகிய ஸதாசிவனை என்னுடைய மூலாதார சக்ரத்தில் வைத்து தியானித்து நமஸ்கரிக்கிறேன். ப்ரளயகாலத்தில் நாசமடைந்த லோகங்களை உஜ்ஜீவிக்க வேண்டும் என்ற கருணையுடன் நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவம் செய்வதால் இந்த உலகானது உங்களிருவரையும் மாதா-பிதாவாக கொண்டது.

ஷட்சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஆஜ்ஞா வரையிகிருப்பதை சொல்வது க்ரமம், ஆனால் இங்கே கடந்த ஆறு ஸ்லோகங்களில் அவற்றைச் சொல்கையில் ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஆரம்பித்து மூலாதாரத்தில் முடித்ததன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்த சக்ரங்களின் தத்வங்கள் ஆஜ்ஞாவில் ஆரம்பித்துச் சொல்லுகையில் மனஸ், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருதிவி என்று வரிசை வருகிறது. இந்த வரிசையானது "ஆத்மன ஆகாஸ் ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவி" என்ற ச்ருதி வாக்கியத்தை ஒட்டி வருகிறது என்பர். அதாவது ப்ருதிவியானது ஜலத்திலிருந்தும், ஜலமானது அக்னியிலிருந்தும், அக்னி வாயுவிலிருந்தும், வாயு ஆகாசத்திலிருந்தும், ஆகாசம் ஆத்ம தத்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பஞ்சவிம்சதிகள் ப்ருதிவியிருந்து செல்கையில் ஸ்தூலமாகவும் பின்னர் ஸுக்ஷ்மத்திலும் மாறுகிறது. இதனால்தான் மயிம் மூலாதாரே என்ற 9ஆம் ஸ்லோகத்திலும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் மூலாதாரத்தில் அம்பிகையை பரமசிவனுடன் சேர்த்து உபாசிக்கும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. அம்மூலாதாரத்தில் இருக்கும் சக்திக்கு குண்டலினீ என்று பெயர். அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும். இவை முறையே ஸமயமார்க்கம், கெளல மார்க்கம் என்றும் வழங்கப்படுகிறது. கெளல மார்க்கத்தில் பூர்வ கெளலம், உத்தர கெளலம் என்று இருமுறைகள் உண்டு. அம்பாளது பூஜையானது அந்தர்முகமாகவே செய்யப்பட வேண்டும் என்றும், அதிலும் அம்பாளை சஹஸ்ராரகமலத்துக்கு அழைத்து வந்து அங்கே பூஜிக்க வேண்டும் என்றும் ஸமயிகள் கூறுவர். இவ்வாறு செய்ய இயலாதோர், பஹிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றில் பாவனையாக பூஜிப்பர்.

கெளல மார்க்கத்தில் ஸ்ரீசக்ரத்தில் த்ரிகோணத்தை மட்டுமே பூஜிப்பர். கெளல மார்கத்தவர் மூலாதாரத்தில் இருக்கும் த்ரிகோணத்தையே பிந்து ஸ்தானமாக பூஜிப்பதால் அங்கிருக்கும் குண்டலினீ சக்தியே ப்ராதான்யம், இதனால்தான் இச்சக்திக்கு கெளலினீ என்றொரு பெயர். குண்டலினீ தனது நித்திரையை விட்டு எழும்பினாலே கெளலர்களுக்கு முக்தி. இதிலிருக்கும் பூர்வ-உத்தர கெளலம் பற்றி பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.

இவை எல்லாமே ஸ்ரீவித்யை என்று சொல்லப்பட்டாலும் இதனை உணர்ந்து, உபாசித்து உயர்வினை எய்தியவர்கள் 12 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் மஹிமை வாய்ந்த இவ்வித்யை வேதங்களின் வேவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து உபாசித்துள்ளதால் இவ்வித்யை 12 மந்த்ர த்ரஷ்டாகளால்/ரிஷிகளால் வழங்கப்படுகிறது. அவர்கள் அகஸ்தியர், லோபாமுத்ரா, துர்வாசர், மனு, சந்திரன், மன்மதன், குபேரன், அக்னி, சூர்யன், இந்திரன், ஸ்கந்தன், சிவன் ஆகியவர்கள். இவர்கள் சொல்லிய வித்தைகள் இதுவரை வந்த ஸ்லோகங்களில் (32 முதல்) ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னர் சொல்லியபடி இதுவரையில் சொல்லப்பட்ட 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் இனி வரும் 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் சொல்லப்பட்டது மந்த்ர சாஸ்திரம், உபாசனா-க்ரமம் போன்றவற்றைச் சொல்லியது. இனி வருவது அம்பாளின் விசேஷ செளந்தர்யத்தை அழகாகச் சொல்லும். இந்த க்ரந்தத்திற்கு செளந்தர்ய லஹரி என்ற பெயர் இனிவரும் பகுதியாலேயே எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் (59 ஸ்லோகங்கள்) தான் ஆதிசங்கர பகவத் பாதாள் பண்ணினது. இந்த பகுதியினை நவராத்திரியில் ஆரம்பிக்கலாம்.

ஆனந்த லஹரி - 39 & 40



தவ ஸ்வாதிஷ்டானே ஹுத்வஹ்மதிஷ்டாய நிரதம்
தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிரமுபசாரம் ரசயதி

தாயே! உங்களிருவரையும் (சிவ-சக்தி) என்னுடைய அக்னி தத்வ ஸ்தானமாகிய ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் காலாக்னி ருத்ரராகவ்ய்ம், அந்த காலாக்னியின் ஜ்வாலா ரூபிணியாகவும் த்யானம் செய்து நமஸ்கரிக்கிறேன். ருத்ரனின் கோபத்தோடு கூடிய காலாக்னியானது ஸமஸ்த லோகங்களையும் தஹிக்கும் போது, கருணையால் நனைந்த சந்திரகலாத்மகமான உன்னுடைய பார்வையானது லோகங்களுக்கு சீதளத்தை தருகிறது.

ஸ்வாதிஷ்டான சக்ரத்தை அக்னிஸ்தானம் என்பர். அங்கே இருக்கும் அக்னியை ப்ரளயகால அக்னியாக பாவித்து, சிவ-தம்பதியினரை ப்ரளயகால ருத்ரனாகவும், ருத்ராணியாகவும் உபாசனை செய்கிறார் இங்கே. ப்ரளயகால அக்னிக்கு ஸம்வர்த்தாக்னி என்று பெயர். அந்த ஸம்வர்த்தாக்னியின் ஜ்வாலையை ருத்ராணி என்று அம்பாளாகச் சொல்கிறார். அம்பாளை ஜ்வாலையாகச் சொன்னாலும் அவளது பார்வை கருணையோடு கூடிய குளிர்ச்சி தருகிறதாம்.

ஹுதவஹம் - அக்னிதத்துவத்தை; தம் ஸம்வர்த்தம் - பிரசித்தியான ப்ரளயாக்னி; அதிஷ்டாய - பாவித்து/ஆச்ரயித்து; நிரதம் - இடைவிடாது; ஈடே - ஸ்துதிக்கிறேன்; ஸமயாம் - ஸமயா என்னும் சக்தியை; மஹதி க்ரோத கலிதே - மிகவும் கோபத்துடன் கூடிய; யத் ஆலோகே - யாருடைய பார்வையானது; தஹதி - கொளுத்துகிறதோ; தயார்த்ரா - கருணையால் நனைந்த; யா த்ருஷ்டி: - எவருடைய பார்வையானது; சிசிரமுபசாரம் - சிசிரம்+உபசாரம் - சைத்ரோபசாரம்; ரசயதி - செய்கிறது.




தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்

அம்மா!, என்னுடைய ஜலாத்மகமான மணிபூரக சக்ரத்தில் சிவனை வர்ஷா-காலத்து மேகமாகவும், உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன். அங்கிருக்கும் தமஸாகிய இருட்டைப் போக்கும் மின்னல் ஒளியாக நீ இருக்கிறாய். நீ அணிந்திருக்கும் நானாவித ஆபரணங்களுடைய ஒளியில் அந்த கருமேகமானது இந்திர தனுஸுடன் கூடியது போல் இருக்கிறது. ப்ரளயகால ருத்ரனால் தஹிக்கப்பட்ட லோகங்களை தனது மேகங்களைக் கொண்டு வரிஷித்து குளிரச் செய்கிறது.


மணிபூரக சக்ரமானது இருள்சூழ்ந்த இடம், தாமிஸ்ர லோகம். இங்கு அன்னையை மின்னல் கொடி போன்றவள் என்றாலும், அவள் ஷண மாத்திரம் வந்து போகும் மின்னலைப் போல் இல்லாது, ஸ்திர செளதாமினி ரூபமாக இருக்கிறாள் என்று சஹஸ்ர நாமத்தில் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; மணிபூரைக சரணம் - மணிபூரக சக்ரத்திலே முக்யமான நிலையாக உடையது; திமிரபரிபந்தி ஸ்புரணயா - அங்கேயிருக்கும் இருட்டுக்கு சத்ருவாகும்; சக்த்யா - சக்தியினால்; தடிந்வந்தம் - மின்னலுடன் கூடியதுமான; ஸ்புரந் நாநாரத்ந பரண பரிணத்த இந்த்ர தனுஷம் - ப்ரகாசிக்கின்ற நானாவிதமான ரத்னாபரணங்களாகிய இந்த்ர தனுசுடன் கூடியதான; ச்யாமம் - கருப்பு வர்ணமுடையதும்; ஹர மிஹிர தப்தம் - ருத்ரனாகிய ப்ரளயகால ஸுர்யனால் தஹிக்கப்பட்ட; வர்ஷந்தம் - வர்ஷிக்கிற; நிஷேவே - நமஸ்கரிக்கிறேன்.


அடுத்த இடுகையுடன் (41ஆம் ஸ்லோகம்) ஆனந்த லஹரி முடிவு பெற்று செளந்தர்ய லஹரி அதற்கடுத்த இடுகைகளில் வர ஆரம்பிக்கும்...

ஆனந்த லஹரி - 37 & 38






விசுத்தெள தே சுத்தஸ்படிக விசதம் வ்யோமஜநகம்
சிவம் ஸேவே தேவீமபி சிவஸமாநவ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்யஸரணே:
விதூதாந்தர்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ




அம்மா!, சுத்த ஸ்படிகம் போன்ற நிர்மலமானவரும், ஆகாச தத்துவத்தின் மூலமானவருமான பரமசிவனையும், அவரைப் போன்ற ரூப, தத்துவங்களையுடைய உன்னையும் என்னுடைய விசுத்தி சக்ரத்தில் தியானித்து வணங்குகிறேன். உங்களிருவரிடத்திருந்தும் வரும் வெண்ணிலா போன்ற ஒளியினால் அஜ்ஞான இருட்டானது அகன்று உலகம் சகோரபக்ஷி போன்று மகிழ்வுடன் இருக்கிறது.


சகோர பக்ஷி என்பது ஒரு உவமை, அந்த பறவையானது நிலவின் ஒளியினை அருந்தி, அதில் மகிழ்ந்து உயிர் வாழ்வதாம். அதைப் போன்று, அன்னையை வணங்குபவர்கள், அம்மை-அப்பனிடமிருந்து ப்ரகாசிக்கும் நிலவொளி போன்ற குளிர்ந்த காந்தியால் அஜ்ஞானத்தை விலக்கி ஆனந்தம் அடைவராம்.


தே விசுத்தெள - உன்னுடையதான விசுத்தி சக்ரத்தில்; சுத்தஸ்படிக விசதம் - சுத்தமான ஸ்படிகம் போன்ற நிர்மல ரூபமுடைய; வ்யோமஜநகம் சிவம் - ஆகாசதத்துவத்தை உண்டுபண்ணூம் சிவன்; சிவஸமாந வ்யவஸிதாம் - சிவனுக்கு சமமான; தேவீம் அபி ஸேவே- தேவியையும் வணங்குகிறேன்; யயோ: - எவரிடமிருந்து; சசி கிரண ஸாரூப்யஸரணே - சந்திர ஒளிக்கு சமமான; யாந்த்யா: காந்த்யா - வெளிவரும் காந்தி/ஒளி; ஜகதீ - ஜகம்/உலகம் முழுவதும்; விதூதாந்தர்த்வாந்தா - போக்கடிக்கும் அஜ்ஞானம் என்னும் உள்ளிருட்டு; சகோரீவ = சகோரீ இவ - சகோர பக்ஷி போல்; விலஸதி - விளங்குகிற


ஸமுந்மீலத் ஸம்வித்கமல மகரந்தைகரஸிகம்
பஜே ஹாம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபாத் அஷ்டாதசகுணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குணமகிலம் அத்ப்ய: பய இவ:



இந்த ஸ்லோகத்தில் சிவ தம்பதிகளை ஹம்ஸ தம்பதிகளாக வர்ணித்திருக்கிறார் பகவத் பாதர். எந்த ஹம்ஸ ஜோடியானது அஷ்டாதச வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறதோ, அவை எப்படி நீரை விலக்கி பாலை மட்டும் குடிப்பது போல தோஷங்களை விலக்கி நல்ல குணங்களை ஏற்கிறதோ, அந்த ஹம்ஸ ஜோடி எப்படி மலர்ந்த (அனாஹத சக்ரம்) தாமரையின் மகரந்தத்தில் அதிக நாட்டமுடையதாக இருக்கிறதோ, அவை எப்படி மஹான்களுடைய மனதில் எப்போதும் சஞ்சரிக்கிறத்தோ, அந்த வர்ணிக்க முடியாத ஹம்ஸ தம்பதிகளான உங்கள் இருவரையும் எனது அனாஹதத்தில் வைத்து தியானிக்கிறேன்.



ஹம்ஸ பக்ஷிகள் வசிக்குமிடத்தை மானஸ ஸரஸ் என்பர், அவ்விடத்துக்கு ஒப்பாக மஹான்களின் மனதையும் சிவதம்பதிகளை அங்கு வசிக்கும் ஹம்ஸ பக்ஷிகளாகவும் சொல்லியிருக்கிறார். ஹம்ஸ பக்ஷிகளின் கூவுதலுக்கு இணையாக அஷ்டாதச வித்தைகளை குறிப்பிட்டுள்ளார். "நீர் ஒழிய பால் உண் குருகின் தெரிந்து" என்று அன்னம் பாலை மட்டும் பிரித்து உண்ணுவது பற்றிச் சொல்வது போல, நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தவரானவற்றை தள்ளுவது சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டாதச வித்தைகள் என்பது, 4 வேதங்கள், 6 வேதாங்கங்கள், 8 சாஸ்திரங்கள் ஆக பதினெட்டும் சேர்ந்தது அஷ்டாதச வித்தைகள், இவை எல்லாம் ஹம்ஸ தம்பதிகளான சிவ-சக்திகளின் ஆலாபத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.

மந்திரார்த்தமாகப் பார்த்தால் "ஹம்ஸ:" என்பதில் ஹம் என்பது புருஷனாகிய சிவனையும், ஸ: என்பது அம்பாளையும் குறிக்கும். எனவே ஹம்ஸ: என்பதே சிவசக்தி ஐக்கியத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், ஹம்ஸத்வந்த்வம் என்பதில் ஜோடி ஹம்ஸங்கள் என்று தனித்தனியாக கூறியிருக்கிறார்.



ஆதத்தே - கிரஹிக்கின்ற; அத்ப்ய: பய இவ - நீரிலிருந்து பாலை போல்; குணமகிலம் - அகிலத்தின் குணம்; தோஷாத் - தோஷங்களை; யத் எந்த ஹம்ஸ ஜோடியானது; கிமபி - வர்ணிக்க முடியாத; அஷ்டாதசருணித வித்யாபரிணதி: - 18 வித வித்தைகளை குறிக்கும்; யதாலாபாத் - யதா+ ஆலாபாத் - எந்த ஹம்ஸ ஜோடியின் ஆலாபத்திலிருந்து; பஜே - நமஸ்கரிக்கிறேன்.

ஆனந்த லஹரி - 35 & 36


மநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே

அம்மா!, நீயே மனம், நீயே ஆகாசம், நீயே, சூர்யன், வாயு, அக்னி, பூமி, நீர் போன்றவற்றின் தத்வமாகிறாய். நீயே பிரபஞ்சமாக இருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லை. நீயே உனது ரூபத்தை பிரபஞ்சமாக காண்பிப்பதற்காக பரமசிவனுடைய பத்னி என்பதான ஆனந்த சித் ரூபத்தை ஏற்கிறாய்.


இந்த ஸ்லோகத்தில் அன்னையின் அஷ்ட மூர்த்தி தத்வம் சொல்லப்படுகிறது. அதாவது மனத்தின் (மநஸ்த்வம்) அதிதேவதையான சந்திரனும், மருத்ஸாரதி: என்பதில் சூரியன் மற்றும் அக்னியும், பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய எட்டு வடிவம்.


த்வயி பரிணதாயாம் - நீயே பிரபஞ்சமாக பரிணமிக்கிறதால்; ந ஹி பரம் - வேறு பரம்பொருள் இல்லை; சிவ-யுவதி - சிவனது பத்னி; சிவானந்த ஆகாரம் - ஆன்ந்த சித்ருபத்தை; பிப்ருஷே - ஏற்கிறாய்.



தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா
யமாராத்த்யன் பக்த்யா ரவி-ஸசி-ஸுசீநா-மவிஷயே
நிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

அம்பிகே!, உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன்
சூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஞ்ய பதவியில் வசிப்பான்.


இங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை என்பது குறிக்கப்படுவதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஞ்யா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.


இந்த இடத்தில் "ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள்.


தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான்.

ஆனந்த லஹரி - 33 & 34



ஸ்மரம் யோனீம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதெள தவமனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னெள ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:

அம்பிகே!, புண்யவான்களாகிய யோகிகள், தமது கைகளில் தாமரை மணிமாலையைக் கையில் கொண்டு, முறையே காம, யோனி, மற்றும் லக்ஷ்மி பீஜாக்ஷரங்களை முன்னர் சொன்ன15 அக்ஷரங்களுடன் சேர்த்து த்ரிகோணாகாரமாகிய சிதக்னியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னை திருப்தி செய்விக்கிறார்கள்.

பஞ்சதசீ என்னும் மந்திரம் பற்றி 32ஆம் ஸ்லோகத்தில் பார்த்தோம். பஞ்சதசீயில் வரும் அக்ஷரங்களுக்கான தேவதைகள் என்னென்ன என்று அங்கு பார்த்தோம். அவற்றுடன் காம, யோனி, மற்றும் லக்ஷ்மி அக்ஷரங்களை இணைத்து இங்கு சொல்கிறார். இவ்வாறாக இந்த மூன்றும் இணைத்தபின் வருவதை செளபாக்ய பஞ்சதசீ என்பர். அந்த மந்த்ரம் இங்கே மறைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தையே கைவல்யர் காதி வித்தை என்றும் முந்தைய ஸ்லோகத்தை ஹாதி வித்தை என்றும் கூறுகிறார்.

நிரவதி மஹாபோக-ரஸிகா - இடைவிடாது மந்திர ஜபம் செய்து ரசிக்கிறவர்கள்; ஏகே - சிலர்; சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா: - தொடர்ந்து சிந்தனையையே ஜபமாலையாக கொண்டு; சிவாக்னெள - சிவாக்னி எனப்படும் முக்கோண ஹோம-குண்டத்தில்; ஸுரபிக்ருத-தாரா - காமதேனு அளித்த நெய் தாரையை; ஆஹுதி - (அக்னிக்கு) அளித்தல்; ஜுஹ்வந்த: - செய்பவர்களாக; பஜந்தி - ஆராதித்தல்

வீட்டில் செய்யப்படும் ஹோமங்கள் சதுரமான குண்டத்தில் செய்யப்பட்டாலும், கோவில்களில் பல ரூபங்களில் ஹோம குண்டங்கள் அமைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு ரூபத்தில் ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் சிவனுக்கானது முக்கோண அமைப்பில் இருக்கும். இங்கே சிவோஹம் என்று பாவனையாக சிதக்னியில் ஹோமம் செய்ய வேண்டும் என்கிறார்.


சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:

பராம்பிகே!, சந்திர-சூரியர்களை நிகில்களாக கொண்ட நீ பரமசிவனுக்கு உடலாகவும், மாசற்ற ஒன்பது வ்யூக ஸ்வரூபியான சிவனது உடலானது உன்னுடையதாகவும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகவே உடமை, உடையவர் என்ற பாகுபாடில்லாது உங்களது உறவு ஸமநிலையில், சேஷ-சேஷி பாவமாக (ஒருவர் சரீரமாகவும், இன்னொருவர் ஆன்மாவாகவும்) இருப்பது ஒப்புயர்வற்ற ஸச்சிதானந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.

ஸமரஸ பரானந்த பரயோ - சிவனும் சக்தியும் சமமாக இருப்பதால் சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயருண்டு. நாம் சாதாரணமாக சிவ-சிவா என்று சொல்லும் போது முதலில் வரும் சிவ என்பது ஈசனையும் இரண்டாவதாக வரும் சிவா: அம்பிகையையும் குறிக்கும் என்பர். 32, 33 ஆகிய ஸ்லோகங்களில் மறைந்திருக்கும் மந்திரத்தின் ரிஷி ஈசன், அதனால் தான் இங்கே சம்போ என்று கூறி அவரை தியானிக்கும்படி அமைக்கப்படிருக்கிறதாக லக்ஷ்மிதரர் சொல்கிறார்.


சசி-மிஹிர - சந்திர-சூர்யர்களை; வக்ஷோருஹ-யுகம் - நிகில்களாக கொண்ட; த்வம் - நீ; சரீரம் - உடல்; சம்போ - பரமசிவன்; நவாத்மானம் - (காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன்) ஆகிய 9 விதமான வியூஹங்களை உடையவன். மன்யே - மனக்கண்; அத: -ஆகையால்; உபய ஸாதரணதயா - இருவருக்கும் ஸமமான; ஸ்தித: - நிலை பெற்ற;

ஆனந்த லஹரி - 31 & 32

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸ்ந்தர்ய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸ்வ-பரதந்த்ரை: பசுபதி:
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவதீதர-திதம்


அம்மா!, பரமசிவன் பலவிதமான ஸித்திகளைத் தரக்கூடிய 64 தந்திர சாஸ்திரங்களை உலகிற்கு காண்பித்துவிட்டு விட்டுவிட்டார். ஆனால் உனது நிர்பந்தத்தால் அவரே அந்த 64 தந்திரங்களாலும் அடையக் கூடிய பிறவிப் பயன்களை ஒருங்கே தரவல்ல பஞ்சதசீ என்னும் உன்னுடைய மந்திர-தந்திர சாஸ்திரத்தையும், உபாசனா முறையையும் இவ்வுலகிற்கு அளித்தார்.

இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் பஞ்சதசாக்ஷரீ என்னும் ஸ்ரீவித்யா மூல மந்திரத்தை பற்றிச் சொல்கிறார். அதாவது 64 தந்திர சாஸ்திரங்களையும் ஒருங்கே தரவல்லது அம்பிகையின் பஞ்சதசாக்ஷரீ மந்திரம் என்பதாக பொருள். 64 என்பது மிகுந்த சிறப்பானது. இந்த எண்ணானது ஈசனின் திருவிளையாடல்களையும், ஆய-கலைகளையுன் நினைவுக்கு கொண்டு வருவதும். இவை எல்லாம் சமயாசாரத்தில் சொல்லப்பட்ட 64 தந்திரங்களை குறிப்பிடுபவையே!. இவை 8-8 (!!!) ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சுபாகம பஞ்சகம் என்று வசிஷ்ட்டர்,சுகர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐந்து பேரும் எழுதிய முறை ஒன்றும் இருக்கிறது, இதுவே க்ருஹஸ்தர்கள் அனுஷ்டிக்கத் தகுந்தது.

சது: ஷஷ்ட்யா - 64; தந்த்ரை - தந்திர சாஸ்திரம்; புவனம் - உலகம்; ஸகல - எல்லா; அதிஸ்ந்தாய - நிரப்பிவிட்டு; புன: மேலும்; த்வத்-நிர்ப்பந்தாத் - உன் கட்டாயத்தால்; அகில-புருஷார்த்த-ஏக-கடனா - எல்லா புருஷார்த்தங்களையும் (அறம்-பொருள்-இன்பம்-வீடு); ஸ்வதந்த்ரம்- தரவல்ல; தே தந்த்ரம் - உன் தந்திரம்; இதம் - இந்த; க்ஷிதிதலம் -பூவுலகில்; அவாதீதர - அவதரிக்க


சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ என்று கூறப்படும் மந்த்ரத்தின் அக்ஷரங்களை ரகஸியமாக விளக்குகிறார். எப்படி காயத்ரி மந்திரம் போன்றவை குரு முகமாக உபதேசம் செய்து கொள்ளல் அவசியமோ அது போன்றே இந்த மந்திரங்களும் குருமுகமாகவே உபதேசம் பெற்ற பின்னரே ஜபிக்க வேண்டும். இந்த பதினைந்தில் இருக்கும் அக்ஷரங்களாவது, சிவன், சக்தி, பிருத்வீ, சூர்ய, சந்திர, ஆகாச, இந்த்ர, ஹரி, பரா என்றவற்றுக்கான 9 பீஜங்களும், மன்மதனுக்கான 3 பீஜாக்ஷரங்களும், ஒவ்வொரு கூடத்தின் முடிவில் ஒரு புவனேஸ்வரி பீஜமாக மூன்று பீஜங்களைச் சேர்த்து வரும் 15 கலைகள்/அக்ஷரங்களே பஞ்சதசாக்ஷரீ. இவ்வாறாக மூன்று கூடங்களைக் கொண்டதாக இருந்தாலும் இத்துடன் ரமா பீஜத்தையும் சேர்த்து சொல்வதாலேயே மந்திரம் பரிபூர்ணம் அடைகிறது என்று லக்ஷ்மீதரர் சொல்லியிருக்கிறார்.

இந்த மந்திரமானது, ஹாதி வித்யா, மஹாவித்யா, துர்வாச வித்யா, லோபாமுத்ரா வித்யா, காதி வித்யா என்று பல ரிஷிகளின் பிரயோக முறையினை வைத்து சற்றே வேறுபடும். குருமுகமாக எது நமக்கு கிடைக்கிறதோ அதுவே தொடர்ந்து ஜபிக்க உகந்தது. ஆனந்த லஹரி பகுதியில் மிக முக்கியமான இரண்டு மந்த்ரார்த்தமான ஸ்லோகங்கள் என்றால் அது இந்த ஸ்லோகமும் அடுத்து வரும் ஸ்லோகமும் தான். பின்னர் செளந்தர்ய லஹரியில் நாம் பார்க்க இருக்கும் அன்னையின் செளந்தர்ய ரூபத்தை ப்ரத்யக்ஷமாக உணரச் செய்வது இந்த இரு ஸ்லோகங்களே என்று பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.

ஆனந்த லஹரி - 29 & 30




கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம் ரேஷ்வேதேக்ஷுப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே


சகல தேவதேவர்களுக்கும் தலைவியாக விளங்குபவள் பராசக்தி என்பதை குறிப்பதான ஸ்லோகம் இது. அன்னை தனது இருப்பிடத்தை நோக்கி வரும் பரமசிவனை எதிர் கொண்டழைப்பதற்காக தனது ஆசனத்தில் இருந்து எழுகிறாளாம். அப்போது அன்னையின் சேடிப் பெண்கள் சொல்வதை கவனித்தது போன்று அமைந்த பாடலின் பொருள் பின்வருமாறு. அம்மா, எதிரில் வைரிஞ்சம் என்னும் பிரும்மாவின் கிரீடம் இருக்கிறது அதில் இடித்துக் கொள்ளாமல், அதன் பக்கத்தில் இருக்கும் கைடபாசுரனைக் கொன்ற கடினமான கோடீரம் என்னும் மஹாவிஷ்ணுவின் கிரீடத்தை கடந்து, இந்திரனின் மகுடத்தை கடந்து வாருங்கள். என்பதன் மூலமாக ப்ரம்மா முதலிய தேவர்கள் அனைவரும் அன்னையை நமஸ்காரம் செய்யும் நேரத்தில் அவளை நோக்கி வரும் பரமசிவனை வரவேற்க்க எழும் போது உனது சேடிப் பெண்கள் கூறும் சிறப்பான வார்த்தைக்கள் ஒலிக்கிறது என்கிறார் சங்கரர்.

ஆச்சார்யாள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்தோத்திரம் என்று ஒன்று பண்ணியிருக்கிறார். அதில் ஒரு மஹாவிஷ்ணுவின் கிரீடம் பற்றி சொல்கையில் 'க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே' அப்படின்னு வரும். அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக, விஷ்ணு, சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்.

தேவர்கள் அன்னையை எப்போதும் வணங்குபவர்கள் என்று 25ஆம் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். அதனை மறுக்கும்படியாக இங்கு தேவர்கள் வணங்கும் நேரத்தில் (ப்ரஸப முப்யாதஸ்ய) என்று வருகிறதே என்று நினைக்கலாம். இதைத்தான் அடுத்த வரியில் தெளிவாக்குகிறார். 'பவநம் பவஸ்யாப்யுத்தாநே - அதாவது பவன் என்கிற சிவன் உங்கள் க்ருஹத்திற்கு வரும்போது என்பதாக. உபயாதம் என்றால் திரும்பி வருதல். அதாவது அன்னையிடமிருந்து சென்ற சிவன் திரும்பி வரும் காலத்தில் என்று பொருள்.

இந்த ஸ்லோகத்தைப் பற்றி சொல்கையில் பரமாச்சார்யார் பின்வரும் செய்தியினையும் தொட்டு விளக்கியிருக்கிறார். 'பவஸ்யாப்யுத்தாநே' என்ற சொல்லை கவனிக்கையில் "அப்யுத்தாநம் அதர்மஸ்ய" என்கிற பதம் பலருக்கும் நினைவுக்கு வரலாம். கீதையில் 'யதா யதா ஹி.." என்கிற ஸ்லோகத்தில் வருவது. எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மத்திற்கு அப்யுத்தானம் நடக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று பொருள். அதாவது இந்த 29ஆம் ஸ்லோகத்தில் அப்யுத்தானம் என்றால் எழுந்து எதிர் கொண்டு அழைத்தல் என்பது பொருள். ஆனால் மேற்ச் சொன்ன கீதை ஸ்லோகத்தில் இந்த வார்த்தைக்கு இப்பொருளைக் கொண்டால், எப்போதெல்லாம் நாம் அதர்மத்தில் போகிறோமோ அப்போதெல்லாம் க்ருஷ்ணன் மீண்டும், மீண்டும் அவதாரம் பண்ணி, நம்மை எதிர் கொண்டு நல்-வழிப்படுத்துகிறான் என்று கொள்ளலாம். அதாவது தர்மத்தின் பக்கத்தில் இருந்து வருபவர்களை இறைவன் கவனிப்பதில்லையாம், ஆனால் அதர்மத்தின் பக்கம் இருந்து வருபவர்களை எதிர் கொண்டு அழைத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறானாம். ராவணன், ஹிரண்யகசிபு, கம்ஸன் போன்றோரின் அதர்மத்தால் தானே நமக்கு நாராயணனின் கோலாகலமான திரு அவதாரங்கள் கிடைத்தன.

வைரிஞ்சம் - பிரம்மாவின் கிரீடம்; பரிஹர - விலக்கிவிட்டு; கைடபபித: - கைடபனைக் கொன்ற; கடோரே - கடினமான; கோடீரே- கிரீடத்தில்; ஜம்பாரி - இந்திரனது கிரீடம்; ஜஹி - ஒதுக்கிவிட்டு; ப்ரணம்ரேஷு - நமஸ்காரம் செய்கையில்; உபயாதஸ்ய - திரும்பி வருதல்; பவஸ்ய - பரமசிவன்; ப்ரஸபம் - அவசரமாக; தவ- உன்; பரிஜன-உக்தி - சேடிப் பெண்கள்;


ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.


அம்மா! ஆதியந்தமில்லாத பரம்பொருளே, உன்னிடத்தின்று தோன்றிய அணிமா போன்ற சக்திகளால் சூழப்பட்டவளாக சேவிக்கப்படுபவளே. உன்னை தனது ஆத்மாவாக பாவித்து சிந்திப்பவனுக்கு சிவ ஸாயுஜ்ய பதவிகூட துரும்பென தோன்றுவதால் தானே உன்னை ஆத்மாவாக சிந்திப்பவனை ஊழித்தீ கூட மங்கள ஹாரத்தி காட்டி பூஜிக்கிறது. இதில் வியப்பென்ன?.

ஸ்வதேஹ-உத்பூதாபி - உடலில் இருந்து தோன்றிய; க்ருணிபி - கிரணங்கள்; அணிமாத்யாபி: - அணிமா போன்ற தேவதைகள்; நிஷேவ்யே- வணங்கத்தக்க; த்வம் - உன்னை; அஹம் இதி - தனது ஆத்மா என; பாவயதி - பாவிப்பவன்; த்ரிநயன ஸ்ம்ருத்திம் - சிவசாயுஜ்யம்; த்ருணயத - துரும்பென; மஹாஸம்வர்த்தாக்னி: - ப்ரளய/ஊழித் தீ; நீராஜன விதிம் - மங்கள ஹாரத்தி; விரசயதி - அனுஷ்டித்தல்; கிம் ஆச்சர்யம் - என்ன ஆச்சர்யம்.

ஆனந்த லஹரி - 27 & 28




ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும், என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும், என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும். இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும்.


அம்பிகைக்கு "தசமுத்ரா சமாராத்யா" அப்படின்னு சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் இருக்கு. அதாவது, ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா என்னும் பத்து முத்ரைகளால் வணங்கப்படுபவள் அப்படின்னு அர்த்தம். ஸமயாசார்த்தை பின்பற்றும் ஞானிகள் அம்பிகையின் பிம்பத்திலோ அல்லது சக்ர ராஜத்திலோ இந்த முத்ரைகளை வெளிப்படையாக காண்பித்து பூஜை செய்வதில்லை. அவர்களது இயற்கையான செயல்களே இம்முத்ரைகளாக ஆகிவிடுமாம்.
ஆச்சார்யார் இதை சிவமானச பூஜா ஸ்தோத்திரத்திலும் (5ஆம் ஸ்லோகமாக) இங்கே சொல்லியிருக்கார்.


ஜல்ப: - பேச்சு; ஸில்பம் ஸ்கலமபி - கைத்தொழில் அனைத்தும்; முத்ரா விரசனா - முத்ரைகளின் விளக்கமாக; ப்ராதக்ஷிண்ய-க்ரமணம் - பிரதக்ஷணமாகவும்; அசனாதி- உணவு வகைகள்; ஆஹுதிவிதி - ஹோமமாக; ஸம்வேஸ - படுத்துக் கொள்ளுதல்; ப்ரணாம: - நமஸ்காரம்; யத் விலஸிதம் - கார்யம் எல்லாம்; அகிலமபி - அதெல்லாம்; ஸபர்யா-பர்யாய: - பூஜை முறை.

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

அம்பிகே! ப்ரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் தமது கிழத்தன்மை/மரணம் பீடிக்காதிருக்க அம்ருதம் பருகியவர்களாக இருந்தாலும் ப்ரளயகாலத்தில் அழிந்துவிடுகிறார்கள். ஆனால் உனது பதி பரமசிவனோ ஆலகால விஷத்தை பருகிய பின்னரோ அல்லது ப்ரளயகாலத்திலோ கூட அழிவதில்லை. இதற்கான காரணம் பரம பதிவ்விரதையான நீ, உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.


அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது. அதுபோல அன்னை அணிந்த தாடங்கத்தின் மஹிமையைத்தான் ஆச்சார்யார் இங்கே குறிப்பிடுகிறார். இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார். அதாவது தாலீ என்பது பனை மரத்தைக் குறிக்கும். இலைகளை சாதாரணமாக பலாசம் எனக் கூறுவார்கள்.சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.

ருத்ரத்தில் "யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ: சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவசே" என்று வருகிற வரியும் இந்த அர்த்தத்தில் தான். பொருளாவது, "பரமசிவனே, உனது சரீரத்தில் பாதியான பராசக்தியே உலகிற்கு மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவளே மருந்து. அவளருளால்தான் நீ ஆலகாலத்தை உண்ட பிறகும் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய்.


ப்ரதிபய-ஜராம்ருத்யு - பயங்கரமான மூப்பு-மரணம்; ஸுதா - அம்ருதம்; ஆஸ்வாத்ய அபி - சாப்பிட்டும் கூட; விதி-சதமக - ப்ரம்மா, இந்திரன்; ஆத்யா - முதலிய; திவிஷத - தேவர்களும்; விபத்யந்தே - பிரளய காலத்தில்; க்ஷ்வேலம் - விஷம்; கபலிதவத: - சாப்பிட்ட; காலகலனா - காலத்தை வென்ற

ஆனந்த லஹரி - 25 & 26


த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-க்ரோத்தம்ஸ மகுடா

அம்பிகே! உன் பாதத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணினால் போதும், அதுவே த்ரிமூர்த்திகளுக்கும் பண்ணியதாகிறது. அது எப்படி என்றால், த்ரிமூர்த்திகளும் உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகையின் அருகில் அவர்களது சிரஸை வைத்து, சிரஸின் மேலே கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி செய்கிறார்கள். ஆகையால் உன் பாதத்தில் செய்யும் அர்ச்சனையானது அவர்களது சிரசுக்கும் சேர்த்து பண்ணியதாகிறது . இங்கு ருத்ரனுக்கும், சிவனுக்கும் வித்தியாசம் காண்பிக்கும் விதமாக த்ரிகுணத்தின் மூர்த்திகளில் அன்னையின் தமஸில் ஜனித்த ருத்ரன் அன்னையை வணங்குவதாக கூறியுள்ளார். அதாவது அன்னையின் தமஸிலிருந்து ஜனித்ததால் ருத்ரன் அன்னையின் குழந்தையாகிறார். குழந்தை தாயை வணங்குவது சரிதானே?.

த்ரிகுணங்கள் அப்படின்னு இங்கு ஆச்சார்யார் சொல்வது முத்தொழில்களையே. சிவம் சதுர்த்தம் என்பார்கள். த்ரிகுணங்களுக்கு மேலே இருக்கும் துரீயம் என்ற ப்ரஹ்ம நிலைதான் சதுர்த்தம். சாதாரணமாக ப்ரம்ஹம் கார்ய நிலைகளில் அதாவது த்ரிகுண நிலைகளில் இல்லாமல் தனித்து இருக்கும் அதுவே துரீயம். அதன் சித்சக்திதான் காமேஸ்வரி அப்படின்னு முதல் 10 ஸ்லோகங்களிலேயே சொல்லியிருக்கார். இந்த சித்-சக்திதான் த்ரிமூர்த்திகளை த்ரிகுணங்களுக்கான செயல்களுக்காக உருவாக்கியிருக்கிறாள். எனவே 'த்ரிகுண-ஜநிதானாம்'. அவள் ஜனனி, ஜனித்தவர்கள் மும்மூர்த்திகள் அப்படின்னு சொல்வது சரிதானே. 'தவ சிவே' துரீய நிலையில் இருக்கும் சிவன் என்பதாக செயலில்லாமல் ப்ரம்ஹ நிலையில் இருக்கும் சிவனே ஸதாசிவன். இதுவே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும்போது, "ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணிஸம்ஹாரிணி ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரி" என்பதாக சொல்லப்படுகிறது.

சரீரத்தில் உள்ள ஆராதாரங்களை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை ப்ரம்மக்கிரந்தி, விஷ்ணுக்கிரந்தி, மற்றூம் ருத்ரக்ரந்தி என்பதாகச் சொல்லப்படும். ஆறாதாரங்களில் அம்பிகையை அந்தர்முகமாக பூஜிக்கப்படும் போது மும்மூர்த்திகளையும் சேர்த்துப் பூஜிக்கப்பட்டதாகும்.
பவேத் - ஆகும்; நிகடே - சமீபத்தில்; சச்வத் - எப்போதும்; முகுலித கரோ - குவித்த கரங்கள்;

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா ஸம்ஸாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸெள


மஹா ப்ரளய காலத்தில் அம்பாளோடு விஹாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனை தவிர ஸகலமும், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் போன்றோர் கூட இல்லாமல் போகிறார்களாம். அதாவது பிர்ம்மா அழிவடைகிறார்; விஷ்ணு அப்படியே செயலின்றி சிலையாகிறார். எல்லோருக்கும் விநாசத்தை தரும் யமனும் நாசமடைக்கிறான். (கீனாசன் என்பதும் யமனது பெயரே). செல்வத்துக்கெல்லாம் அதிபனான குபேரனுக்கும் அச்செல்வத்தால் பயனின்றி முடிந்து போகிறான். (தநதன் என்பது குபேரனுக்கான பெயர்). ஒரு இந்திரன் மட்டுமல்லாது இந்திரப் பட்டாளமே அழிவுக்குள்ளாகிறது. அதென்ன இந்திரப் பட்டாளம்?. ஸ்ருஷ்டி ஆரம்பித்ததில் இருந்து மஹா ப்ரளயம் வரை பல மன்வந்திரங்கள் வந்திருக்குமல்லவா, அவற்றில் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் இருந்திருப்பானல்லவா, அதனால் தான் மாஹேந்த்ரீ விததி என்கிறார் போலும். இந்தமாதிரி மூம்மூர்த்திகளும், தேவர்களும், முனிவர்களும் கூட மீளாத்துயிர் கொள்ளூம் அந்த மஹாப்ரளய காலத்திலும் (மஹா ஸம்ஹாரே) உன் பதி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆச்சார்யார்.

இங்கு அம்பாளை குறிப்பிடுகையில் ஸதி என்றே கூறுகிறார். அன்னை பரம பதிவ்ரதை. பதிக்கு மரியாதை இல்லாத இடத்தில் தான் இருப்பது சரியல்ல என்றும் அப்படி மதிக்காத பிறந்தகத்தால் உருவான உடலே வேண்டாம் என்று தனது ஜீவனையே விட்டவள் தாக்ஷாயினி. அவளது இன்னொரு பெயரே ஸதி. இவளோ ப்ரம்ஹ சக்தி, அச்சக்திக்கு ஏது அழிவு?. அப்படி அப்பட்ட சக்தி பதிவ்ரதை என்றால் அவளது பதியும் அழிவில்லாதவன் தானே?. ஆகையால்தான் அவன் மட்டும் ப்ரளய காலத்தில் அழிவில்லாது இருக்கிறான் என்கிறார். இப்பாடலில் தநன, நிதந, விநாச, கீநாச என்று வார்த்தை ஜாலங்களைச் செய்திருக்கிறார் பகவத் பாதர்.

ஆனந்த லஹரி - 23 & 24


த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்

அர்த்தநாரிஸ்வர ரூபத்தை சொல்வது போல ஆரம்பித்து சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. ஈஸ்வரனைப்போல முக்கண்ணும், கிரீடத்தில் சந்த்ர கலையும், கொண்டிருக்கும் அன்னையை விளித்து சொல்லப்படுகிறது....ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே). ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து அருண நிறம் வந்து விடுகிறாதாம். பாதி உடலாக இருக்கும் அன்னைக்கு அந்த பாதியில் த்ருப்தியில்லாமல் இன்னொரு பாதியினையும் தனதாக்கிக் கொண்டாளாம். ஆகையால் ஈசனின் சந்திரனும், மூன்றாம் கண்ணும் அன்னை கொண்டிருப்பதாகவும், இரண்டு ஸ்தனங்களால் சற்றே வளைந்தும் இருப்பதால் இந்த சந்தேகம் கொண்டதாக சொல்கிறார் ஆச்சார்யார். இந்த ஸ்லோகமானது ருண விமோசனத்திற்கு பாராயணம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.


ஏதத் - என்னுடைய; த்வத் ரூபம் - உன் ரூபம்; ஸகலம் அருணபம் - முழுவதும் சிவப்பான நிறத்துடன்; த்ரிநயனம் - முக்கண்களுடன்; குசாப்யாம்- ஸ்தனங்கள்; அநம்ரம் - வளைந்த; குடில-சசி-சூடால மகுடம் - பிறைச் சந்த்ரனை சூடிய மகுடம்; வாமம் வபு: சரீரத்தின் இடது பகுதி; அபரி த்ருப்தேன - முழுமையான த்ருப்தியில்லாத; அபரம் சரீரார்த்தம் அபி - சரீரத்தின் இன்னொரு பாதியும்; ஹ்ருதம் அபூத் - கவர்ந்து கொள்ளப்பட்டது; சங்கே - சந்தேகம்


ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசத்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ


இதன் ஆரம்பமே 'பஞ்ச க்ருத்ய பராயணா' என்னும் நாமம் தான். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம் (மாயை/மறைத்தல்), அனுக்ரஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள் அம்பாள். இதை இந்த ஸ்லோகத்தில் பின்வருமாறு சொல்கிறார் ஆச்சார்யார். ஹே பராசக்தி!, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களை செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் தன்னுள் மறைத்துக் கொண்டு தன்னையும் மறைத்துக்கொள்கிறான் ஈசானன். ஸதாசிவன் என்னும் பரபிரம்ஹமானது கொடி போன்ற உன் புருவ அசைவினை ஆதாரமாகக் கொண்டு ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரன், மஹேசன் ஆகியோரது செயல்கள் செய்விக்கிறான்.


தா(4)தா - ப்ரம்மா; ஜகத்-ஸுதே - உலகை படைக்கும்; ஹரி-ரவதி = ஹரி-அவதி - அதாவது ஹரி ரக்ஷிக்கும்; க்ஷபயதே - அழிக்கும்; திரஸ்குர்வன் ஏதத் - திரோதானத்தால் இவற்றை மறைக்கும் (மாஹேசன்); ஸதா பூர்வ: சர்வம் - ஸதா என்னும் அடைமொழியினை கொண்ட சிவனான ஸதாசிவன்; க்ஷண-சலிதயோ: - நொடி நேர அசைவினால்; ப்ரூலதிகயோ - புருவங்கள் என்னும் கொடிகள் (ப்ரூ - அப்படின்னா புருவங்கள் ("ப்ரூவோர் மத்யே சகஸ்ராக்ஷி" அப்படிங்கறது தெரிந்திருக்கும்); லதை-லத்திகா அப்படிங்கறதெல்லாம் கொடிங்கற அர்த்தத்தில் வரும்); ஆஜ்ஞாம் - ஆணை; ஆலம்ப்ய - அனுசரித்து; அனுக்ருஹ்ணாதி - அனுக்கிரஹம்

ஆனந்த லஹரி - 21 & 22


தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

இந்த ஸ்லோகத்தில் குண்டலினீ யோகத்தில் ஸித்தி அடைந்தவர்களது நிலை சொல்லப்பட்டிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மேலெழும்பிய குண்டலினீ சக்தியானது ஆக்ஞா சக்ரத்தில் மட்டும் அதிக நேரம் நிலைகொள்ளாது மின்னல் கொடி போல தோன்றி உடனடியாக க்ஷண நேரத்தில் மேலெழும்பி ஸஹஸ்ரார கமலத்தை அடைகிறதாம். காமம், மாயை போன்ற மலங்களை நீக்கி, சூர்ய சந்திரர்கள் போலவும் அக்னி, போன்றதுமான உனது கலையை சஹஸ்ராரத்தில் தியானிப்பவர்கள் பேராந்தமான அலைகளில் மூழ்கித் திளைப்பர் என்கிறார்.

இவ்வாறாக குண்டலினீ சஹஸ்ராரத்தில் சிவனுடன் சேர்ந்து ஐக்ய ஸ்வருபத்தில் நிலையாக குளிர்ந்து ப்ரகாசிப்பதை "ஸ்திர செளதாமினி" என்றும் க்ஷண நேரமே ஆக்ஞா சக்ரத்தில் இருப்பதால் "க்ஷண செளதாமினி" என்றும் இரு நாமங்களாக சஹஸ்ர நாமத்தில் கூறப்பட்டிருக்கிறது

தடித்-லேகா-தன்வீம் - மின்னல் போன்ற சூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும்; தபன-சசி-வைச்வானர மயீம் - சூர்ய-சந்த்ர, அக்னி ஆகியவற்றில் ப்ரகாசிப்பதும். ஷண்ணாம் கமலானாம் அபி - ஆறு ஆராதாரங்களுக்கு மேலே; மஹாபத்ம அடவ்யாம் - தாமரை மலர்களாலான காடு போன்ற சஹஸ்ராரத்தில்; நிஷண்ணாம் - நிலையான;

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஈஸ்வரனுக்கு 'பவன்' என்று ஒரு பெயரிருக்கிறது, ஸ்ரீ ருத்ரத்தில் ''பவாயச ருத்ராயச' என்று வருகிறதே அதுதான். சிவனின் 8 பெயர்களில் முதல் பெயர் பவன். அந்த 8 பெயர்களாவன, பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மாஹாதேவன். இதில் ஸ்ருஷ்டிக்கு மூலமாக இருப்பவன் பவன். பவனுடைய சக்தி பவானி.

த்வம் - நீ; தாஸே மயி - தாஸனான என்னிடத்தில்; ஸகருணாம் - கருணையுடன் கூடிய; த்ருஷ்டிம் விதர - பார்வையைச் செலுத்துவாயாக. ஸ்தோதும் வாஞ்சன் - ப்ரார்த்தித்துக் கொள்ள ஆசைப்பட்டு; ததைவ - அப்போதே / உடனேயே; த்வம் - நீ; தஸ்மை - அவனுக்கு; நிஜ ஸாயுஜ்ய பதவி - நீயே ஆன சாயுஜ்ய பதவியினை (அதாவது அன்னையே சாயுஜ்யம் எனப்படுவதாம்); திசஸி - கொடுக்கிறாய்; முகுந்தன் என்றால் திருமால். ப்ரஹ்மேந்த்ர = ப்ரம்ஹ + இந்தர; ஸ்புட மகுட - ப்ரகாசமான க்ரீடம்; நீராஜனம் என்றால் நமக்கு தெரியும் கர்பூர நீராஜனம், புனர் நீராஜனம் என்றெல்லாம் சொல்கிறோமே, அதுதான்.

"பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்" என்று சொல்லி அவள் கடாக்ஷத்தை ப்ரார்த்திக்க ஆசைப்பட்ட ஒருவன் இதில் முதல் இரண்டு சொற்களான 'பவானி த்வம்' என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே நீ அவனுக்கு, விஷ்ணு, ப்ரம்ஹா, இந்திரன் ஆகியோரின் க்ரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களைப் பெறும்படியான, உனதேயான ஸாயுஜ்ய பதவியைக் ஸாயுஜ்ய பதவியினை தந்தருளுகிறாய்" என்கிறார் இந்த ஸ்லோகத்தில்.

பரமாச்சார்யார் இது பற்றி சொல்லுகையில், இங்கே ஆச்சார்யார் சொல்லியிருப்பது ஞான வழியில் போய் நிர்குண ப்ரம்ஹத்தோடு ஐக்யமாகும் அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்று கூறுகிறார். ஏனென்றால், அடுத்த வரி 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்' என்பதை காரணமாகச் சொல்கிறார். அம்பாளுடன் அவன் ஐக்ய சாயுஜ்யம் பெற்றுவிட்டால் அப்போது அவனுக்கே 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர' என்பதான தன்மை அவனுக்கே கிடைத்து விடுகிறது. ஆனால் அத்வைதத்தில் ஸாயுஜ்யம் அடையும் போது அங்கு மூர்த்தியே கிடையாது, பிறகு ஏது பாதங்கள், மகுடங்கள்?. நிர்குண தத்வம் என்பது மேலே சொன்ன பாடலில் இல்லை. எனவே இங்கே ஆதிசங்கரர் சொல்லியிருப்பது அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்பார். இந்த ஸ்லோகமானது சர்வ ஸித்திகளையும் தரும் மந்த்ரம் என்றால் மிகையாகாது.

ஆனந்த லஹரி - 19 & 20



முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்


பரமசிவனின் பட்டமஹிஷியே!, ஸ்ரீ சக்ர மத்தியிலுள்ள பிந்துவில் காமகலா ரூபிணியான உனது முகத்தையும், அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு காம கலையாகிய 'க்லீம்' என்னும் பீஜத்தை எவன் அவ்வயவங்களில் தியானம் செய்கிறானோ அவன் தனது காம சக்திகளைவசப்படும்படி செய்கிறான். இவ்வாறு காமகலா பீஜத்தை உபாசிப்பவன் சூர்ய-சந்திரர்களைப் போன்ற ஸ்தனங்களைக் கொண்ட முவுலகிலும் சிறந்த மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்திரீ வசியம் நிச்சயம். ஏனென்றால் ஹரார்த்தம் என்பதில் 'ஹ' என்பது ஹம்ஸ: என்பதைக் குறிக்கிறது. ஹம்ஸ: என்பது மூன்று பிந்துக்களைக் குறிக்கும் மன்மதகலையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு காமகலா த்யானம் செய்பவர் தேவியின் ஸ்வருபமாகவே ஆகிவிடுகிறான். இவனுக்கு முக்தி நிச்சயம் என்கிறது அருணா மோதினீ.

தஸ்ய அத: - அதற்கும் கீழே; குசயுகம் - ஸ்தனங்கள்; ததத: - அதற்கும் கீழே; வனிதா: - காம சக்தியின் ஒரு பெயர்; அதிலகு - மிக எளிது; ரவி-இந்து ஸ்தன-யுகாம் - சூர்ய சந்திரர்கள் போன்ற ஸ்தனங்கள்; த்ரிலோகீம் அபி - மூவ்வுலகத்திலும்.

கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா

அங்கங்களிலிருந்து கிரணக் கூட்டங்களாக அமுதச் சாற்றினை பெருக்குகின்ற சந்த்ரகாந்தக் கல்போன்ற உன்னை எவன் இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறானோ அவன் புள்ளரசனைப்போல பாம்புகளின் வீர்யத்தை அடக்குகின்றான். அமுதமயமான நாடியுடன் அவன் பார்க்கும் பார்வையானது நோயுற்று ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனை நலமடையச் செய்யும்.

முன்னே 17ஆம் ஸ்லோகத்தில் அன்னையை சசிமணிசிலா என்று சந்த்ரகாந்த கல்லை உடைத்தாற்போல என்பதாக வர்ணித்தார். இங்கே 20ஆம் ஸ்லோகத்திலோ ஹிமகரசிலா என்கிறார். சசம் என்றால் முயல். சந்திரனில் தெரியும் கருப்பு நிறத்திட்டானது முயல் ரூபத்தில் இருக்கிறபடியால் சந்திரனுக்கே 'சசி' என்று பெயர். சாதாரணமாக சந்திரனிலிருந்துதான் அம்ருதமும் பனி ஜலமும் உருவாவதாக சொல்லப்படும். இந்த பனி ஜலத்தை உருவாக்குவதால் சந்த்ரனுக்கு ஸுதாகரன் என்ற நாமம் உண்டு. இன்றைய ஸுதாகர் என்னும் பெயர் இவ்வாறு வந்ததுதான். இந்த சந்திரன் பனி மலையினை உருவாக்குவதால் ஹிமகரன் என்றும் பெயர். ஹிமயமலை என்றால் பனிமலை என்றே பொருள். பனிமலை நிறத்தில் அன்னை என்பதை ஹிமகர-சிலா என்று கூறி அவளிடத்துப் பெருகும் அம்ருதரஸம் என்று ஆரம்பித்து ஸ்லோகத்தின் முடிவில் அவளை வழிபடுவதால் உபாசகனும் அம்ருதத்தை பெருக்குவதாக சொல்லி முடிக்கிறார். அதாவது சஹஸ்ராரத்தில் அன்னையை நிலை நிறுத்தி ஜபம் செய்கையில் உபாசகனுக்கு ஏற்படும் உணர்வினை அம்ருத ஊற்றாக உருவகப்படுத்துவது வழக்கம். அதை குறிப்பால் உணர்த்திச் செல்கிறார் ஆச்சார்யார்.

ரோக நிவாரணத்திற்காகச் சொல்லும் ஸ்லோகம் இது. முன்பு சொன்னது போல செளந்தர்ய லஹரி முழுவதுமே மந்த்ர சாஸ்த்ரமாகும். இதில் ஒவ்வொரு ச்லோகத்தையும் மந்த்ரமாக நினைத்து ஜபித்தால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த ஸ்லோகங்களுக்கான தனி-தனி சக்ரங்கள், த்யான, பாராயணாதி முறைகளை அறிந்து குருமுலமாக செய்ய வேண்டியது.

ஆனந்த லஹரி - 17 & 18




ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்

வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பன்கிருசிபிர்

வசோபிர்-வாக்தேவீ-வதன கமலா மோத மதுரை:

அன்னையே!, நீ வசினி முதலிய எண்வகையான சக்திகளுடன் கூடியவள். அந்த சக்தி தேவிகள் நவரசஸங்கள் நிரம்பிய சொல் நயத்தை அளிப்பவர்கள். உடைந்த சந்திர காந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்தவர்கள். அவர்களையும், உன்னையும் உபாசிப்பவன், மிகுந்த மணமுள்ள தாமரை போன்ற முகமுடைய உன் முகம் போன்ற இனிமையான வார்த்தைகளமைத்து, மஹாகவிகளின் படைப்புக்களைப்போல் காவியங்கள் எழுத வல்லவனாவான்.


இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர். ஆகவேதான் ஸவித்ரீபி: வாசாம் என ஆரம்பிக்கிறார். இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் உள்புறம் போன்ற வெண்மை நிறைந்தவர்களாம். ஒரு இடத்தில் 'சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்' என்பதாகவும், இன்னொரு இடத்தில் அருணா என்றும் கூறியவர் இப்போது சரத் ஜ்யோத்ஸ்நா போன்ற வாக்தேவதைகள் சூழ அருணாவாக வீற்றிருக்கிறாள் அன்னை என்கிறார். இந்த முறையில் அன்னையை உபாசிப்பவர்கள் சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாக விளங்குவார்கள் என்பதற்கு காளிதாஸனே உதாரணம்.


வாசாம் - வாக்கு/வாக்கின்; ஸவித்ரீபி: - பிரவர்த்தகர்களும்; சசி-மணி-சிலா-பங்க-ருசிபி: - சந்திரகாந்த கல்லை உடைத்தாற்போன்ற காந்தி உடைய ; வாக்தேவி-வதன-கமலா-மோத-மதுரை: - சரஸ்வதி தேவியின் முககமலத்தின் பரிமளம் போன்ற மதுரமான ; காவ்யானாம் - காவியங்கள்; கர்தா - உடையவன்; பவதி - ஆகிறான்; மஹதாம் - மகான்களுடைய ;



தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபிர்

திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:

பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா

ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:


எவன் ஒருவன் இளஞ்சூரியனுடைய வெயிலைப்போன்ற வர்ணமுள்ள அன்னை ஜகன்மாதாவின் உடலின் ஒளியில் ஈரேழு உலகங்களும் மூழ்கியதாக தியானிக்கிறானோ அவனுக்கு மானின் கண்கள் போன்ற மருண்ட கண்களையுடைய ஊர்வசி போன்ற தேவகன்னிகளும் வசியமாவார்களாம்.


தருண-தரணி - உதய சூரியன் (உதிக்கின்ற செங்கதிர்?); ஸ்ரீ-ஸ்ரணிபி: - அழகு வெள்ளம் போன்ற; தனு-ச்சாயாபி - தேக ஒளி; திவம் - தேவலோகம்; உர்வீம் - பூலோகம்; அருணிமனி - இளஞ்சிவப்பு; மக்னாம் - மூழ்கிய; ஸ்மரதி - தியானிக்கிறவன்; வன-ஹரிண - காட்டு மான்; சாலீன நயனா - அழகிய கண்கள்; கீர்வாண கணிகா - அப்ஸ்ரஸ்திரீகள்; கதி கதி - எத்தனை எத்தனை; வச்யா - வசப்பட்டவர்கள்; ந பவந்தி - ஆக மாட்டார்கள்.

ஆனந்த லஹரி - 15 & 16



சரஜ்-ஜ்யோத்ஸ்னா-ஸுத்தாம் சசியுத ஜடாஜுட மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக குடிகா-புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷிர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதயா


அன்னையே! நீ சரத்காலத்துச் சந்திரனைப் போல் வெளுப்பானவள். பிறைச்சந்திரனையும், நவரத்ன கிரீடத்தையும் முடியில் தரிப்பவள். அபய-வரத முத்திரைகளையும், ஸ்படிகமணி மாலையினையும், புஸ்தகத்தையும் கைகளில் தாங்கியவள். இவ்வாறாக இருக்கும் உன்னை ஒருதரம் வணங்கும் பக்தர்களுக்கும் தேன், பால், திராக்ஷை போன்றவற்றை விட அதிகமாக இனிக்கும் சொல் நயங்கள் எப்படி வராது போகும்?.


இந்த பாடலில் தேவியின் (சரஸ்வதி ரூபம்) சுத்த சத்வ வடிவினைப் பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர். சரத்-ஜ்யோத்ஸ்னா சுத்தாம் - ரஜோ மற்றும் தமோகுணம் அற்ற சுத்த ஸ்த்வத்தை குறிக்கும் நிறம் வெண்மை. இதனால் தான் சரஸ்வதிக்கு ஏற்ற நிறமாக வெள்ளை சொல்லப்பட்டு இருக்கிறது. சசியுத ஜடாஜுட மகுடாம் - சந்திர கலையினை முடியில் சூட்டியிருப்பதால் பராசக்தியின் வடிவிலிருந்து இது வேறு அல்ல என்பது தெரிகிறது. இது மஹா சரஸ்வதியின் வடிவம். வர-த்ராஸ-த்ராண - அபய, வரத முத்திரைகள்; ஸ்படிக-குடிகா - ஸ்படிகமணி மாலை; ஸக்ருத் - ஒரு முறை; நத்வா - நமஸ்கரித்தல்; பணிதய: - சொற்றோடர்கள்; கதமிவ - எப்படி; ஸ்ந்நித ததே - சித்திக்காமல் போகும்?.



அன்னை லலிதா மாஹா த்ரிபுர சுந்தரி தன்னிலிருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள். அவை முறையே மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி. இந்த மூன்று வடிவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு வடிவங்கள் தோன்றியதாம். மஹாலஷ்மியிடமிருந்து ப்ரம்மாவும், லஷ்மியும் (சிவப்பு வர்ணம்), மஹாசரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் (நீல வர்ணம், இப்போது தெரிகிறதா விஷ்ணுவும், பார்வதியும் ஏன் சகோதர-சகோதரி பாவம் என்று?), மஹாகாளியிடமிருந்து சிவனும் சரஸ்வதியும் (வெண்மை நிறம்) கொண்டு தோன்றினர் என்று தேவீ மஹாத்மீயம் கூறுகிறது. 'ஸர்வ வர்ணாத்மிகே'ன்னு காளிதாசர் ச்யாமளா தண்டகத்தில் சொல்வது இதனால்தான்.



லக்ஷ்மி அஷ்டோத்திரமாகட்டும், சரஸ்வதி அஷ்டோத்திரமாகட்டும், 'ப்ரம்ம-விஷ்ணு சிவாத்மிகாயை'என்று ஒரு நாமாவளி வருவதை கவனித்து இருக்கலாம். அன்னை லலிதாவே ப்ரம்ம ரூபமாக ஸ்ருஷ்டி கார்த்தாவாகவும், விஷ்ணு ரூபமாக கோப்த்ரியாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹார மூர்த்தியாகவும் விளங்குகிறாள். இதனால்தான் ப்ரம்ம-விஷ்ணு-சிவாத்மிகா.




கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ


அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும்
எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யெளவன சிருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள்.


முந்தைய ஸ்லோகத்தில் வெண்மை நிறத்தினளாக அன்னையை கூறிய ஆச்சார்யார், இங்கு சிவப்பு நிறத்தவள் என்கிறார். அதுவும் எப்படி அருணோதய சூர்யன் போன்ற, அதாவது சூரியன் உதிக்கும் போது வரும் சிவந்த நிறமாம். இதைத்தான் 'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' என்கிறார் அபிராமி பட்டர். வெண்மை எப்படி சத்வ குணமோ அது போல சிவப்பு ரஜோ குணத்தை குறிப்பது. ஏன் சிவப்பு என்பது இங்கு ரஜோ குணத்தை குறிக்க வேண்டும்?. ஏனென்றால் பின்வரும் வரியில் அன்னை சிருங்கார ரஸத்தை தருவதாக கூறுவதால். சிருங்கார ரஸம் என்பதும் ரஜோகுணத்தை குறிப்பதுதான். 'அருணாம் கருணா-தரங்கிதாஷாம்' என்றுதான் அன்னையின் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கிறது.



ஆமாம்! இப்படி லலிதையின் வர்ணமான சிவப்பினை கூறி, உடனேயே விரிஞ்சி-ப்ரேயாஸ் என்று சரஸ்வதியை குறிக்க காரணம்?. அருண சரஸ்வதி
என்று அன்னைக்கு ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தில் அன்னை காமாக்ஷி போல பாசாங்குசமும், தனுர்-பாணமும் நான்கு கைகளில் ஏந்தி, இன்னும் நாலு கைகளில் ஸரஸ்வதிக்கு உரிய அஷமாலை, புஸ்தகம், வர-அபயம் கொண்டும் இருக்கிறாளாம். அந்த ரூபத்தையே இங்கு மறை பொருளாக சொல்லியிருக்கிறார்.



கவீந்த்ராணாம் - கவியரசர்களின்; சேத: கமல வன-பால ஆதப ருசிம் - சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியனாய் பிரகாப்பதால்; அருணாம் ஏவ (அருணா மேவ) - அருணா என்று பெயர் பெற்றவளும்; பவதீம் - உன்னை; பஜந்தே - பூஜிக்கிறவர்கள்; விரிஞ்சி ப்ரேயஸ்யா: - ப்ரம்ம பத்னியான சரஸ்வதியின்; தருண-தர - செழிப்பான; ச்ருங்கார லஹரி - சிருங்கார ரஸ பிரவாஹம்; கபீராபி: - கம்பீரமான; வாக்பீ - வாக்குகளால்; ரஞ்ஜனம் - மகிழ்ச்சி; விதததி - அளித்தல்