ஆனந்த லஹரி - 39 & 40



தவ ஸ்வாதிஷ்டானே ஹுத்வஹ்மதிஷ்டாய நிரதம்
தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிரமுபசாரம் ரசயதி

தாயே! உங்களிருவரையும் (சிவ-சக்தி) என்னுடைய அக்னி தத்வ ஸ்தானமாகிய ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் காலாக்னி ருத்ரராகவ்ய்ம், அந்த காலாக்னியின் ஜ்வாலா ரூபிணியாகவும் த்யானம் செய்து நமஸ்கரிக்கிறேன். ருத்ரனின் கோபத்தோடு கூடிய காலாக்னியானது ஸமஸ்த லோகங்களையும் தஹிக்கும் போது, கருணையால் நனைந்த சந்திரகலாத்மகமான உன்னுடைய பார்வையானது லோகங்களுக்கு சீதளத்தை தருகிறது.

ஸ்வாதிஷ்டான சக்ரத்தை அக்னிஸ்தானம் என்பர். அங்கே இருக்கும் அக்னியை ப்ரளயகால அக்னியாக பாவித்து, சிவ-தம்பதியினரை ப்ரளயகால ருத்ரனாகவும், ருத்ராணியாகவும் உபாசனை செய்கிறார் இங்கே. ப்ரளயகால அக்னிக்கு ஸம்வர்த்தாக்னி என்று பெயர். அந்த ஸம்வர்த்தாக்னியின் ஜ்வாலையை ருத்ராணி என்று அம்பாளாகச் சொல்கிறார். அம்பாளை ஜ்வாலையாகச் சொன்னாலும் அவளது பார்வை கருணையோடு கூடிய குளிர்ச்சி தருகிறதாம்.

ஹுதவஹம் - அக்னிதத்துவத்தை; தம் ஸம்வர்த்தம் - பிரசித்தியான ப்ரளயாக்னி; அதிஷ்டாய - பாவித்து/ஆச்ரயித்து; நிரதம் - இடைவிடாது; ஈடே - ஸ்துதிக்கிறேன்; ஸமயாம் - ஸமயா என்னும் சக்தியை; மஹதி க்ரோத கலிதே - மிகவும் கோபத்துடன் கூடிய; யத் ஆலோகே - யாருடைய பார்வையானது; தஹதி - கொளுத்துகிறதோ; தயார்த்ரா - கருணையால் நனைந்த; யா த்ருஷ்டி: - எவருடைய பார்வையானது; சிசிரமுபசாரம் - சிசிரம்+உபசாரம் - சைத்ரோபசாரம்; ரசயதி - செய்கிறது.




தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்

அம்மா!, என்னுடைய ஜலாத்மகமான மணிபூரக சக்ரத்தில் சிவனை வர்ஷா-காலத்து மேகமாகவும், உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன். அங்கிருக்கும் தமஸாகிய இருட்டைப் போக்கும் மின்னல் ஒளியாக நீ இருக்கிறாய். நீ அணிந்திருக்கும் நானாவித ஆபரணங்களுடைய ஒளியில் அந்த கருமேகமானது இந்திர தனுஸுடன் கூடியது போல் இருக்கிறது. ப்ரளயகால ருத்ரனால் தஹிக்கப்பட்ட லோகங்களை தனது மேகங்களைக் கொண்டு வரிஷித்து குளிரச் செய்கிறது.


மணிபூரக சக்ரமானது இருள்சூழ்ந்த இடம், தாமிஸ்ர லோகம். இங்கு அன்னையை மின்னல் கொடி போன்றவள் என்றாலும், அவள் ஷண மாத்திரம் வந்து போகும் மின்னலைப் போல் இல்லாது, ஸ்திர செளதாமினி ரூபமாக இருக்கிறாள் என்று சஹஸ்ர நாமத்தில் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; மணிபூரைக சரணம் - மணிபூரக சக்ரத்திலே முக்யமான நிலையாக உடையது; திமிரபரிபந்தி ஸ்புரணயா - அங்கேயிருக்கும் இருட்டுக்கு சத்ருவாகும்; சக்த்யா - சக்தியினால்; தடிந்வந்தம் - மின்னலுடன் கூடியதுமான; ஸ்புரந் நாநாரத்ந பரண பரிணத்த இந்த்ர தனுஷம் - ப்ரகாசிக்கின்ற நானாவிதமான ரத்னாபரணங்களாகிய இந்த்ர தனுசுடன் கூடியதான; ச்யாமம் - கருப்பு வர்ணமுடையதும்; ஹர மிஹிர தப்தம் - ருத்ரனாகிய ப்ரளயகால ஸுர்யனால் தஹிக்கப்பட்ட; வர்ஷந்தம் - வர்ஷிக்கிற; நிஷேவே - நமஸ்கரிக்கிறேன்.


அடுத்த இடுகையுடன் (41ஆம் ஸ்லோகம்) ஆனந்த லஹரி முடிவு பெற்று செளந்தர்ய லஹரி அதற்கடுத்த இடுகைகளில் வர ஆரம்பிக்கும்...

6 comments:

Kavinaya said...

//கருணையால் நனைந்த சந்திரகலாத்மகமான உன்னுடைய பார்வையானது லோகங்களுக்கு சீதளத்தை தருகிறது.//

எப்படி இப்படில்லாம் எழுதறீங்க! அருமை. படங்களெல்லாமும் வித்யாசமா அழகா போடறீங்க.

//அவள் ஷண மாத்திரம் வந்து போகும் மின்னலைப் போல் இல்லாது, ஸ்திர செளதாமினி ரூபமாக இருக்கிறாள்//

ஆஹா. அன்னையின் அருமையும் பெருமையும் படிக்கப் படிக்க ஆனந்தம்.

ஆனந்தலஹரியை அழகாக முடிச்சதுக்கு வாழ்த்துகள். சௌந்தர்யலஹரி விளக்கமும் அவள் அருளுடன் இனிதாய் தொடரட்டும்.

jeevagv said...

பெற்றேன் பெற்றேன் படிதறியும் பேறினை!
கண்டேன் கண்டேன் அதில் ஆனந்தமதனை!

குமரன் (Kumaran) said...

ஐயன் கொளுத்தும் செந்தீ என்றால் அம்மை கண்ணுக்குக் குளிர்ச்சியான நீலத்தீ போலும். ஆனால் நீலத்தீக்குத் தான் அதிக வெப்பம் என்று சொல்லுவார்கள். :-)

படத்தில் இருப்பது சோட்டாணிக்கரை பகவதியம்மனா?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...நன்றி.

அடுத்த இடுகையுடன் தான் ஆனந்த லஹரி முடிவுக்கு வருகிறது :)

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி ஜிவா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//ஐயன் கொளுத்தும் செந்தீ என்றால் அம்மை கண்ணுக்குக் குளிர்ச்சியான நீலத்தீ போலும். ஆனால் நீலத்தீக்குத் தான் அதிக வெப்பம் என்று சொல்லுவார்கள். :-) //

குமரன், அன்னையை அக்னி ஜ்வாலையாகவும், அப்பனை தணலாகவும் (ஜ்வாலையை உருவாக்கும் அக்னி கங்குகள்) கிழேசொல்லியிருக்காங்க.

//படத்தில் இருப்பது சோட்டாணிக்கரை பகவதியம்மனா?//

இல்லை கோட்டக்கல் பகவதியம்மன். ந்ன்றி கூகுளாண்டவர்.