செளந்தர்யலஹரி 45 & 46



அராளை: ஸ்வாபாவ்யாத் அளிகளப ஸஸ்ரீபிரளகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தசநருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தெள மாத்யந்தி ஸ்மரதஹந சக்ஷுர் மதுலிஹ:

தாயே, இயற்கையாகவே சுருண்ட முடியால் சூழப்பட்ட உனது நெற்றியானது, வண்டுகளால் சூழப்பட்ட தாமரை மலரை தோற்கடிப்பதாக இருக்கிறது. அந்த முகத்தில் தவழும் உனது புன்சிரிப்பினால், பல்வரிசைகளின் மூலமான காந்தியை பிரதிபலிக்கும் இதழ்கள், மற்றும் பரிமளமுடைய அந்த முகாரவிந்தத்தால் காமனை வென்ற பரமசிவனின் கண்களான தேனிக்கள் மயங்கியிருக்கின்றன. மன்மதனை எரித்த பரமசிவனது கண்கள், இப்போது அம்பிகையின் முக லாவண்யத்தினால் காமவிகாரத்தை அடைந்ததாம்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் முகம் தாமரைப் புஷ்பமாகவும், அவளது முன்னுச்சியில் இருக்கும் சுருண்ட முடியானது தாமரையை மொய்க்கும் வண்டுகளாகவும் சொல்கிறார். அம்பிகையின் சிரிப்பினால் வெளிப்படும் பல்வரிசை மூலம் வெளிவரும் காந்தியுடன் கூடிய அந்த முகத்தைக் கண்ட பரமசிவன் மயங்கிவிடுகிறார். பரமசிவனைச் சொல்லும் போது, என்னதான் காமனை ஜெயித்தவரானாலும் அன்னையின் முகலாவண்யத்தின் முன் மயங்கி விடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.


ஸ்வபாயாத் - இயற்கையாகவே; அராளை - சுருட்டையான; ப்ரீதம் - சூழப்பட்ட; அளகை - முன்னுச்சி மையிர்கள்; அளிகளப - சிறு வண்டுகள்; ஸஸ்ரீபி: - காந்தியுடைய; தே வக்த்ரம் - உன் முகமானது; தரஸ்மேரே - புன்சிரிப்புடன் கூடியது; தசனருசி - பல் வரிசைகளுடைய; கிஞ்ஜல்க - இதழ்களால்; ஸுகந்தெள - நல்ல மணமுள்ள; யஸ்மிந் - முகத்தில்; ஸ்மரதஹந - மன்மதனை எரித்த; சக்ஷுர் மதுலிஹ: - கண்களான தேனீக்கள்; மாத்யந்தி - மயங்குகின்ற

கூரெயிற்றின் அகஇதழுங் கொண்கர்விழி வரிவண்டும்
குழற்படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்
பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரல் முகையவிழப்
பிறழுமுன் தருணமுக கமல மென்றால்
ஒறியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது
மற்றோர்-இயற்கை செயற்கைமணம் போதுசெய்யும்
நீரியற்கை மலர்க்கமல மிதற்குடைந்து பங்கமுறல்
நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே

--------------------------------------------------------------------------------------

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.


அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். (இது பற்றி பெரியவர் திராச ஒரு பதிவு போட்டிருக்கிறார், அது இங்கே). பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.


யத் லலாடம் - உன் நெற்றியானது; லாவண்யத்யுதி - நிர்மலமான நிலவு; ஆபாதி - ப்ரகாசிக்கிறதோ; மகுடகடிதம் - கீரிடத்தில் இருக்கும்; த்விதீயம் - இரண்டாவதான; சந்த்ர சகலம் - அந்த சந்த்ர பிம்பம்; மந்யே - நினைக்கிறேன்; உபயமபி - சிரசில் இருக்கும் அர்த்த சந்திரனும், நெற்றியாக இருக்கும் அர்த்த சந்திரனும் ஆகிய இரண்டும்; விபர்யாஸந்யாஸாத் - வித்தியாசமான வளைவுகளைக் கொண்டிருக்கும்; மத: ஸ்ம்பூயச - சரியாக பொருந்துவதால்; ஸுதாலேபஸ்யூதி: - அம்ருதத்தால் பூசப்பட்ட/நிறப்பப்பட்ட; ராகா ஹிமகர: - பூர்ண சந்திரனாக; பரிணமதி - ஆகின்றது.


கோதை நீண்முடி கொண்டொளிர் திங்கள்சேர்
பாதி வாள்நுத லென்று படிந்ததோ
ஈது கூடி யிரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே

செளந்தர்யலஹரி 43 & 44



துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்


ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும்.

அன்னையின் கரிய கூந்தலானது நமது மனத்தில் இருக்கும் அஞ்ஞான இருட்டுக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்களது கேசத்தில் மணம் சேர்வதற்கு பூ முடிப்பார்கள், ஆனால் அன்னையின் கூந்தலில் இருப்பதால்தான் இந்திரனது உத்யான வனத்துப் புஷ்பங்கள் கூட மணம் பெற்றது என்பது வர்ணனை. இவ்வாறாக, முந்திய பாடலில் பார்த்த கிரீட வர்ணனை முடிந்து இப்போது கூந்தல் வர்ணனை பண்ணியிருக்கார். இதற்கு தகுந்த சஹஸ்ர நாமம் 'புன்னாக செளந்திக லஸ்த்கசா' என்பது. இதற்கு பாஷ்யம் பண்ணின பாஸ்கர ராயர் இயற்கையான மணமுள்ள கூந்தலில் இம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமேயன்றி, சாதாரண மனிதர்கள் போல் கேசத்திற்கு மணம் சேர்க்க அல்ல என்று கூறுகிறார்.

துலித தளிதேந்தீவர - மலர்ந்த புஷ்பங்களீன் வனத்திற்குச் சமமான; கந ஸ்நிக்த ச்லக்ஷ்ணம் - அடர்த்தியான, வழவழப்பான; தவ- உன்னுடைய; சிருர நிருகும்பம் - கேச அலங்காரம்; த்வாந்தம் - அஞ்ஞானம்; துனோது - போக்கடிக்கும்; யதீயம் - எவற்றின்; ஸஹஜம் - இயற்கையான; ஸெளரப்யம் - வாசனை; உபலப்தும் - அடைவதற்காக; வலமதந - வலன் என்ற அசுரனை வதைத்த இந்திரன்; வாடீ விடபினாம் - உத்தியான வனத்தில்; ஸுமநஸ: - புஷ்பங்கள்; மந்யே - நினைக்கிறேன்.

கிழே இருப்பது இதன் தமிழாக்கம் வீரை கவிராஜர் செய்தது:


அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்று
அறநெய்த் திருண்டு செறிவோடு
இலங்குறு மியற்கைமணம் எண்திசை யளப்பவதில்
இதழ்மூழ்கு நறைவி ழைவினாற்
பொலன்கொண்முடி யாகண்ட லேசற்பொற் றுணர்விரி
பொதும்பர்மது மலர்ப் டிவதோர்
சிலம்பளி பரந்தஉன் தோதியென் மனத்திருட்
செறிவுதெற அருள்க மலையே!

----------------------------------------------------------------------------------------

தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்

அம்மா!, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.

பெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது] இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர். இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.

வதந - முகத்தின்; செளந்தர்ய - அழகிய; லஹரி - வெள்ளம்; பரீவாஹ - ப்ரவாஹம்; ஸ்ரோத: - வழியும்; ஸரணிரவ - கால்வாய் போன்ற; ஸீமந்த ஸரணி - வகிடாக இருக்கும் ரேகை; கபரீபார - கேச பாரம்; திமிர - கருப்பான; த்விஷாம் ப்ருந்தை: எதிரிக் கூட்டம்; பந்தீக்ருதம் - சிறை செய்யும்; நவிநார்க்க கிரணமிவ - இளஞ்சூரியனது கதிர்கள் போல்; சிந்தூரம் - குங்குமம்; வஹந்தி - தரித்த; தனோது - கொடுக்கட்டும்.

அடுத்து கவிராஜர் சொன்னது;

மோதிய வெங்கதிர் மீளவெ ருண்டிருள்
மூடஓ துங்கிய வாறேயோ
சோதிமு கங்கவி னேறி வழிந்தன
சோரவி டுங்கவர் காலேயோ
ஒதிபி ணைந்து பின்வீழவ கிர்ந்ததன்
ஊடெழு தும்பரப்பை யாதேயோ
கோதறு சிந்துர ரேகைவ ளம்பிறர்
கூறுவ தன்றிது மாதாவே