செளந்தர்யலஹரி 51 & 52


சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா


தாயே! உனது கண்கள் பரமசிவனிடத்து சிருங்கார பாவத்துடனும், ஸபத்னியான கங்கையிடம் கோபத்துடனும், சிவனின் லீலைகளின் போது ஆச்சர்யத்துடனும், அவரால் அணியப்பட்ட ஸர்ப்பங்களிடம் பயத்துடனும், நெற்றிக் கண் தாமர புஷ்பம் போல் சிவப்பாக வீர ரசத்துடனும், தன்னை சந்தோஷிக்கச் செய்த ஜனங்களின் வார்த்தைகளால் ஏற்பட்ட ஹாஸ்ய ரஸத்துடனுமும், என்னிடத்தில் கருணையுடனும் ஸர்வ ரஸத்துடன் விளங்குகின்றன.

இந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார். எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார். பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையும் தெரிகிறதாம். அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

ஸகருணா - கருணையுடன் கூடிய; ஸகீக்ஷு - ஸக தோழியர்களிடத்தே; ஸ்மேரா - சிரிப்புடன் மலர்ந்த; ஸரஸிருஹ செளபாக்ய ஜனனீ - தாமர புஷ்பம் போன்ற சிவந்த; ஹராஹிப்ய - ஹரனால் அணியப்பட்ட ஸர்பங்களால்; பீதா - பயத்துடன்; கிரிச சரிதே - ஈசன் லீலைகளால்; விஸ்வமயவதீ - ஆச்சர்யத்தோடும்; ஸ்ரோஷா - கோபத்துடன்; கங்காயாம் - கங்கையினிடத்தே; குத்ஸனபரா - வெறுப்புடனும்; சிவே - பரமசிவனிடத்து சிருங்காரார்த்ரா - சிருங்கார ரஸத்துடன்; தே த்ருஷ்டி: உன் பார்வை;

அடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:

அரனிடத்திற் பேரின்ப அருளும் அவனல்லார்பால்
அருவருக்கும் அவன்முடிமேலணிந்த நதியைச்சீறும்
பரவுநுதல்விழி அழல்முன் பார்த்தில போலதிசயிக்கும்
பணியாய பணிவெகுளப் பயந்தன போலொடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து வீரரதம் படைக்கும்
வினவுதுணைச் சேடியற்கு விருந்துநகை விளைக்கும்
இரவுபகலடி பரவும் எளியனைக்கண்டு அருள்புரியும்
இத்தனையோ படித்தன-உன் இணைவிழிகள் தாயே!.

---------------------------------------------------------------------------------------


கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ
புராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:

அம்மா!, காதுவரையில் நீண்டு, அம்பிலிருக்கும் இறகுகள் போன்று இமை மயிர்களைக் கொண்ட உனது கண்களானது, த்ரிபுராந்தகனான பரமசிவனது மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் காதுவரையில் இழுத்துப் பிரயோகம் செய்யப்பட்ட பாணங்கள் போன்று இருக்கின்றன.

அம்பிகையின் கண்களையும், இமையிலிருக்கும் முடிகளையும் மன்மதனது பாணங்களுக்கும், அப்பாணங்களின் இறகுகளுக்கும் உவமைசெய்திருக்கிறார் பகவத்பாதர். பாணங்களை ஏவும் சமயத்தில் அவற்றை வில்லின் நாண் கயிற்றுடன் சேர்த்து காதுவரை இழுப்பது என்பது அம்பிகையின் கண்கள் காதுவரை நீண்டிருப்பதற்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகர்ணாக்ருஷ்ட ஸ்மர-சர விலாஸம் - காதுவரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தின் அழகு; கலயத: - உடைத்தாயிருக்கின்ற; தததீ - தரித்துக் கொண்டு; புராம் பேத்து: - புரங்களையழித்த பரமனின்; சித்த ப்ரசமரஸ - மனதின் நிராசையைப் போக்கும்படியான; தவ - உன்னுடைய; இமே நேத்ரே - இந்த கண்களிரண்டும்; கர்ணாப்யர்ணம் கதே - காதுகளுக்கு ஸமீபம் போய்; பக்ஷ்மாணி - இமை மயிர்களை; கருதவ இவ - அம்பிலிருக்கும் இறகுகள் போன்ற; கோத்ராதரபதி - மலைகளின் பதியான ஹிமவான்; குலோத்தம்ஸகலிகே - குலத்தின் மொட்டு (குலவிளக்கு?) போன்றவளே.

அடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:

இகல்பொரக் குழையை முட்டும்
இமைமயிர் ஒழுங்கிற் றூவல்
நிகரறு நித்தர் யோக
நீக்கிவெம் போக நல்கும்
சிகரவெற் பரசன் தொல்லைத்
திருமர பென்னுமந் தெய்வ
மகுடமா மணிநின் கண்கள்
வயமதன் வாளிதானே.