செளந்தர்யலஹரி 61 & 62


அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்

ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:


அம்மா!, முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்) நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும். அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.

மூங்கிலரிசி என்பது மூங்கில் கணுக்களிடையே இருப்பதாகப் படித்த நினைவு. மூங்கில் உள்ளே முத்துக்கள் இருப்பதாகச் சொல்லப்படுமாம். இங்கே ஆசார்யார் அன்னையின் மூக்கை மூங்கில் போன்று இருப்பதாகக் கூறுகிறார். மேலும், மூங்கில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போல அன்னையின் மூக்கினுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அன்னை ஸ்வாசத்தை வெளிவிடும் போது உள்ளிருக்கும் முத்தானது வெளிவந்துநமக்குத் மூக்குத்தியாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.


துஹிந கிர்வம்சத்வஜபடி - ஹிமவான் வம்சத்துத்திற்கு த்வஜத்தின் கொடி போன்றவளே; த்வதீய: அஸெள - உன்னுடைய நாசதண்டமானது; அஸ்மாகம் - எங்களுக்கு; உசிதம் - தகுந்தது; நேதீய: - சீக்கிரம் கிடைக்க; பலம் பலது - (உன் நாச தண்டமானது) பலத்தை தரட்டும்; அந்த: தன்னுள்; முக்தா: வஹதி - முத்துக்களை கொண்டுள்ள; யத்: எதனால்; தாஸாம் ஸம்ருத்யா - நிறைந்துள்ள; பஹிரபி ச - வெளியிலும் கூட; சிசிரகர நிச்வாஸகளிதம் - வாம நாடி என்று கூறப்படும் இடது பக்கத்து மூக்கு துவாரம்(சாதாரணமாக மூச்சினை வெளிவிடும் பகுதி); மூக்தா மணிதர - முத்து மூக்குத்தி (புல்லாக்கு?) அணிந்திருக்கிறதோ?

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

இமய மன்னன் மரபில் வெற்றி
இடுப தாகை அனையஎன்
அமலை யுன்றன் வதம துண்ட
அணிசி றந்த மணியையோ
விமலு மன்னு கவிஞர் முத்தை
வெற்பில் வல்லி யலர்வதோர்
கமல மன்னு குமிழ ளித்தல்
கண்ட தல்ல என்பதே

-------------------------------------------------------------------------------------



ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா


அம்பிகே!, இயற்கையாகவே சிவந்த் உன்னுடைய அதரங்களுக்கு சமமாக ஒரு பொருள் ஏதாவது இருக்குமானால், அது பவழக்கொடியில் பழுத்த பழமாக இருக்கலாம். கோவைப் பழமோ உன்னிடௌய அதரத்தினது ஒளியால் உண்டான சிவப்பு நிறமுடையதாக இருப்பதால், அது உனது அதரகாந்தியின் முன் வெட்கப்படும்படியாக இருக்கிறது.

பவழக்கொடிக்கு பழம் கிடையாது, ஆகையால் அம்பாளுடைய அதரங்களுக்கு இணை ஏதுமில்லை என்று கூறுகிறார். கவிஞர்கள் சாதாரணமாக பெண்களின் அதரத்திற்குச் சமமாகக் கோவைப்பழத்தையும், பவழத்தையும் சொல்வது வழக்கம். கோவைப் பழத்திற்கு சம்ஸ்கிருதத்தில் பிம்ப-பலம் என்று பெயர். அன்னையின் அதர பிம்பத்தின் சிகப்பு நிறமானது கோவைக்கனியில் பிரதிபலிப்பதாலேயே அப்பழம் அந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார். ஆக, பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர். இதுவே சஹஸ்ரநாமத்தில், "நவவித்ரும பிம்ப ஸ்ரீந்யக்கார் தசனச்சதா" என்று கூறப்படுகிறது.

ஸுததி - அழகிய பல்வரிசை உடையவளே; ப்ரக்ருத்யா - இயற்கையாக; ஆரக்தாயா: - சிவந்திருக்கும்; தவ - உன்னுடைய; தந்தச் சதருசே: அதரத்தின் அழகானது; ஸாத்ருச்யம் -உபமானமாகும்; ப்ரவ்க்ஷ்யே - சொல்லுகிறேன்; வித்ருமலதா - பவழக்கொடி; பலம் - பழம்; ஜயநது - உண்டாக்கும்; பிம்ப பலம் - கோவைப் பழம்; தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் - உதட்டின் பிரதி பிம்பத்தால் ஏற்பட்ட நிறத்தில்; அருணிதம் - சிவப்பாக; கலயா - சிறிதளவு; துலாம் - சமமாக இருக்கும் தன்மை; அத்யாரோடும் - அடைவதற்கு; கதம் ந விலஜ்ஜேந - ஏன் வெட்கப்படாது?

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


இறைவி நின் இதழ் சிவப்பு
இயற்கை ஒத்து இணைச்சொன்னால்
நிறைகொள் கொவ்வை இந்த நிறத்தின்
நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும் மற்றோர்
உவமை இல்லை உண்டென்றால்
அறைகடல் துகிர்ப்ப ழுக்கின்
அன்று சொல்வன் அளியனே.

6 comments:

Kavinaya said...

//பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர்.//

ஆஹா, அருமை! நன்றி மௌலி.

Anonymous said...

//பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர்.//

தேவீ மகாத்மியத்தில் ரகசியத்ரயத்தில் "ரக்தாக்ஷி,ரக்த வர்ணா என்று தொடைங்கி முழுவதும் சிவப்பு நிறமாக வர்ணனை நீண்டு செல்லும். அருமை மதுரையம்பதிஅண்ணா!

தம்பி

குமரன் (Kumaran) said...

இமய மன்னன் மரபில் வெற்றி இடு பதாகை அனைய என்
அமலை உன்றன் வதமது உண்ட அணி சிறந்த மணியையோ
விமலும் மன்னும் கவிஞர் முத்தை வெற்பில் வல்லி அலர்வதோர்
கமல மன்னும் குமிழ் அளித்தல் கண்டதல்ல என்பதே

பாடலின் பொருள் முழுவதும் புரியவில்லை.

இறைவி நின் இதழ் சிவப்பு இயற்கை ஒத்து இணைச் சொன்னால்
நிறைகொள் கொவ்வை இந்த நிறத்தின் நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும்; மற்றோர் உவமை இல்லை; உண்டென்றால்
அறைகடல் துகிர்ப் பழுக்கின் அன்று சொல்வன் அளியனே.

இதுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். படித்துக் கொண்டே வந்தாலே புரிகிறது. அளியன் என்றால் எளியவன் என்று பொருள். துகிப் பழுக்கு என்றால் பவழம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா....

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கணேசன்....அருணவர்ணத்துக்கும் அன்னைக்கும் இருக்கும் தொடர்புகள் அன்னையின் புகழ் பாடும் எல்லாவற்றிலும் இருக்கு போல...நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் குமரன், நீங்களே புரியல்லன்னா அப்பறம் என்ன செய்யறது?.