செளந்தர்யலஹரி 77 & 78

யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்


மங்கள ஸ்வரூபியே! அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.

காளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.

சிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முளரி மாதுன் முலையி னோடு
முலைநெ ருக்க இடையில்வான்
வெளியில் நீல மோடி யுந்தி
வியன்மு ழைக்குள் நுழையவெ
தெளியு நீரில் யமுனை நீவு
சிறுத ரங்க மனையபெ
ரொளியின் ஞால மருளு மீது
ரோம ரேகை யென்னவெ
---------------------------------------------------------------------------------------------

ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா
கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே

மலையரசன் பெண்ணே!, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா? இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா?, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா?, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது.

நாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது "நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.

நாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.

கிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தூய கங்கை நிலைப டைத்த
சுழித னத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆல வாலம் விரகவேள்
தீய ரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்க ணிடைவிடா
மேய கஞ்ச மடுவி னுந்தி
வேறு ரைத்தென் விமலையே.

2 comments:

குமரன் (Kumaran) said...

கவிராசரின் பாடல்களும் விளக்கங்களும்:

முளரி மாது உன் முலையினோடு
முலை நெருக்க இடையில் வான்
வெளியில் நீலம் ஓடி உந்தி
வியன் முழைக்குள் நுழையவே
தெளியும் நீரில் யமுனை நீவு
சிறு தரங்கம் அனைய பேர்
ஒளியின் ஞாலம் அருளும் ஈது
ரோம ரேகை என்னவே.

பாடலின் பொருள் நேரிடையாகப் புரிகிறது என்று நினைக்கிறேன்.

தூய கங்கை நிலை படைத்த
சுழி தனத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆலவாலம் விரக வேள்
தீ அரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்கண் இடைவிடா
மேய கஞ்ச மடுவின் உந்தி
வேறு உரைத்தென் விமலையே.

மூலத்தின் பொருளை மௌலி விளக்கியதைக் கொண்டு இதற்கும் பொருள் புரிகின்றது.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் பிரித்தளித்தமைக்கும் நன்றி குமரன்.