செளந்தர்யலஹரி 95 & 96


புராராதே ரந்த்த:புரமஸி ததஸ் த்வச்சரண்யோ:
ஸபர்யா மர்யாதா தரளக்ரணாநாம் அஸுலபா
ததா ஹ்யேதே நீதா: சத மக முகாஸ் ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி-பிரணிமாத்யாபிரமா


அம்மா!, நீ த்ரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்ககூடியதில்லை. இதனால்தான் இந்திராதி தேவர்கள்கூட உன்னுடைய க்ருஹத்தின் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு அவர்களிருக்கும் வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத மனோரத சித்தியை பெறுகிறார்கள்.

அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள். இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும், அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசிக்கக் கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியிருக்கிறார் ஆசார்யார்.

த்வம் - நீ; புராராதே - த்ரிபுர சம்ஹாரியான பரமசிவனது; அந்த:புரம் அஸி - பட்டமகிஷியாக இருப்பது; அத: அக்காரணத்தால்; த்வச் சரணயோ - உன் பாதங்களுக்கு; ஸபர்யா மர்யாதா - பூஜை செய்வது; தரள கரணானாம் - சஞ்சலமான சித்தத்தை உடையவர்களுக்கு; அஸுலபா - சுலபமில்லை;ததா ஹி - ஆகவே; ஏதே சதமகமுகா: அமரா: - இந்திரன் முதலான தேவர்கள்; தவ - உனது; த்வாரோபாந்த ஸ்திதிபி: - வாசற்படியருகில் இருக்கும்; அணிமாத்யாபி: - அணிமா முதலிய அஷ்டசித்திகளுடன்; அதுலாம் ஸித்திம் - நிகரற்ற ஸித்தியை; நீதா: அடைய முடிகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

தேவியும் இல்லஞ் சிவனுறை அந்தப் புரமானால்
யாவ ருனைக்கண் டெய்துவ ரிமையோர் முதலானோர்
ஆவல்கொ டெய்த்துன் வாயிலில் அணிமா திகளாலே
மேவிய சித்திப் பேறோடு மீள்வா ரானாரே.
*******************************************************************************


களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸ்தீநாம் அசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரகதரோரப்யஸுலப:


சதிதேவி என்றழைக்கப்படும் பதிவிரதைகளின் தெய்வமே!, பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதா விலாசத்தால் அடைவதில்லையா?, சிறிதளவே செல்வத்தை கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட லக்ஷ்மி-பதி என்று கூறப்படுவதில்லையா?. பதிவிரதைகளில் முதன்மையானவளே!, உனது நகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்ததில்லயே!.

மஹா கவிஞர்கள் மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷ்த்தைப் பெற்றவர்களை 'சரஸ்வதி வல்லபர்கள்' என்றும், இதேபோல தன-தான்ய செல்வங்களை வசமாக்கிக் கொண்டிருப்பவர்களை 'லக்ஷ்மி-பதி' என்றும் கூறுவது வழக்கம். ஆனால் பார்வதீ பதி என்றோ, ஸதி-பதி என்றோ யாரையும் கூறுவதில்லை. வித்தையையும், செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்திக் கொண்டாலும், மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்த இயலாது. அவள் பரமசிவனுக்கே வசப்பட்டவள் என்று கூறுகிறார் லக்ஷ்மீதரர்.

குரவகதரோ: என்றால் மருதோன்றி (மருதாணி) மரம். முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டப்படவேண்டும் என்று 85 ஆம் ஸ்லோகத்தைல் இங்கே சொன்னது போல, மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம். ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யப்படுபது ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருவனே என்றுகூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறியிருக்கிறார் பகவத்பாதர்.

வைதாத்ரம் களத்ரம் - பிரம்மாவின் பத்னியாகிய சரஸ்வதி; கதிகதி கவய: எத்தனை கவிகள்; ந பஜ்ந்தே - அடையவில்லை; கோ வா - எவன் தான்; கைரபி தநை: - கொஞ்சம் செல்வம்; ச்ரியோ தேவ்யா: - லக்ஷ்மிதேவிக்கு; பதி: - புருஷனாக; ந பவதி - ஆகிறதில்லை; ஸதீநாம் அசரமே - பதிவிரதைகளுள் முதன்மையானவளே; மஹாதேவம் ஹித்வா - மஹா தேவரைத் தவிர;தவ - உன்னுடைய; குசாப்யாம் ஆஸங்க: ஆலிங்கனமானது; குரவகதரோ: அபி - குரவக வ்ருக்ஷத்திற்குக் கூட; அஸுலப: கிடைப்பதரிது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே

கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற் றவளே
மலைமகள் நீ கற்புடைய வனிதையெனப் பகருங்
குலமறைக ளெதிர்கொடுநின் குரவினையும் அணையா
முலைகுழையப் புணர்வதுநின் முதல்வரல திலையால்.

5 comments:

Kavinaya said...

ரெண்டு ஸ்லோகங்களுமே ரொம்ப பிடிச்சிருக்கு :) படங்களும் அழகு! நன்றி மௌலி.

தி. ரா. ச.(T.R.C.) said...

அழகான நடையில் செல்லுகிறது தங்களது பதிவு. இந்த நவராத்திரிக்கு சௌந்தர்யலகிரி பாராயணம் செய்யலாம் என்ற எண்ணம் வந்துள்ளது.நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச சார்.

//இந்த நவராத்திரிக்கு சௌந்தர்யலகிரி பாராயணம் செய்யலாம் என்ற எண்ணம் வந்துள்ளது//

மிக்க சந்தோஷம், தினம் 10 பாராயணம் செய்தாலும், நாளை ஆரம்பிச்சு பண்ணிடலாம். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா. படங்கள் எப்போதும் போல கூகிளார் உபயம். :)

குமரன் (Kumaran) said...

கவிராசரது மொழிபெயர்ப்பும் பொருளும்:

தேவியுன் இல்லம் சிவன் உறை அந்தப்புரம் ஆனால்
யாவர் உனைக் கண்டு எய்துவர் இமையோர் முதலானோர்
ஆவல் கொடு எய்த்து உன் வாயிலில் அணிமாதிகளாலே
மேவிய சித்திப் பேறோடு மீள்வர் ஆனாரே.

தேவி உன் இல்லம் சிவன் உறையும் அந்தப்புரம்; ஆனால் யாவர் உனைக் கண்டு எய்துவார்கள்? தேவர்கள் முதலானோர் மிகுந்த ஆவலுடன் வந்து உன் வாயிலில் இருக்கும் அணிமாதிகளாலே வேண்டியவற்றைப் பெற்று மீள்வார்கள்.

கலைமகளும் பொது மடந்தை கமலையும் மற்றவளே
மலைமகள் நீ கற்புடைய வனிதையெனப் பகரும்
குலமறைகள் எதிர் கொடும் நின் குரவினையும் அணையா
முலை குழையப் புணர்வது நின் முதல்வர் அலது இலையால்.

கலைமகளும் தாமரையாளும் பொதுமாதர்களே; மலைமகள் நீ மட்டுமே கற்புடைய வனிதையென குலமகளிரது வேதங்கள் கூறும். ஒன்றுடன் ஒன்று போரிடும் உனது, குரா மரத்தையும் அணைக்காத, திருமுலைகள் குழையும் படி நீ புணர்வது உன் தலைவருடன் அன்றி வேறு ஒருவருடன் இல்லாமையால்.