செளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை -2

ஆதி சங்கரர் பல ஊர்களுக்கும் சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்து பல்வாறாக போற்றியவாறு கைலாயத்தை அடைகிறார். அங்கு ஈசன் உமையவள் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் 5 ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்கு வழங்குகிறார். அப்போது அன்னையவள் ஒரு சுவடுக் கட்டினைத் தன் சார்பாகத் தருகிறார். [அந்த பஞ்சலிங்கங்கள் அனைத்துக்கும் பெயர் சந்திர மெளலி என்றே பெயர். இந்த 5 லிங்கங்கள் இன்று இருக்கும் இடம் பின்வருமாறு. 1 காமகோடி மடத்தில் இருக்கும் யோக லிங்கம், 2 கேதாரத்தில் இருக்கும் முக்தி லிங்கம், 3 நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்தில் இருக்கும் வரலிங்கம், 4 சிருங்கேரியில் இருக்கும் போகலிங்கம், 5 சிதம்பரத்தில் இருக்கும் மோக்ஷலிங்கம்.] ஈசன் தந்த லிங்கங்கள் அருவ-ருபமான ஈஸ்வரன் என்றால், சுவடியில் இருந்ததோ தேவி குறித்த மந்திர சாஸ்திரங்கள். இவற்றைப் பெற்றுக் கொண்ட சங்கரர் கையிலாயத்தை விட்டு வெளிவருகிறார்.



அங்கு அதிகார நந்தி சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன், கையிலையின் மிகப்பெரிய புதையலான மந்திர சாஸ்த்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்றுசினம் கொள்கிறார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கவில்லை என்பது போல நந்தி தனது கோபத்துடன் சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டை பிடித்து இழுக்கிறார். ஆனால் ஆச்சாரியரோ அதனை கவனியாது வந்து நகர்ந்து விடுகிறார். நந்திகேஸ்வரன் இழுத்ததால் சில சுவடிகள் மட்டுமே சங்கரர் கையில் மீந்துவிட, மற்றதெல்லாம் கையிலை வாயிலில் விழுந்து விடுகிறது. [இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேயபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது]


இவ்வாறாக ஆதிசங்கரரிடம் கிடைத்த சுவடிகளே முதல் 41 ஸ்லோகங்கள். இதனை உணர்ந்த தேவி, சங்கரர் முன் பிரத்யஷமாகி மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் புதிதாகச் செய்ய சங்கரரைப் பணிக்கிறார். உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல அவர் 59 ஸ்லோகங்களில் அன்னையின் ரூப லாவண்யத்தைப் பாடுகிறார். இவ்வாறாக பாடப்பட்ட 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும், கையிலையில் அன்னை தந்த சுவடியில் மிஞ்சிய 41 ஆனந்த லஹரி என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மொத்தமாக செளந்தர்யலஹரிஎன்பது 41+59 சேர்ந்த 100 ஸ்லோகங்களே. இதனால்தான் முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரமும், குண்டலினி சக்தியும், ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப் பட்டுள்ளது. இந்த 41 சாதகர்களுக்காக என்று கொண்டால், பின் வந்த 59 பக்தி மார்கத்தவருக்காக என்று எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறாக உலகில் உள்ள இலக்கியங்களில் அதிசயமாக ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரத்தையும், கவித்துவமான வர்ணனைகளையும் சேர்த்த படைப்பினை வேறெங்கும் காண முடியாது.


சரி, செளந்தர்ய லஹரி என்ற பெயர் ஏன்?. செளந்தர்யம் என்றால் அழகு. சுந்தரமாக இருப்பது செளந்தர்யம். லஹரி என்றால் பிரவாஹம் (அ) அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தியை ஸ்ரீமாதா உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம்-அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதிக்கு செளந்தர்யலஹரி என்ற பெயர் கொடுத்தது மிகச் சரியல்லவா?. இதில் முதல் 41 ஸ்துதிகள் ஈசனே செய்து அன்னையை ஆனந்திக்கச் செய்ததால் ஆனந்த லஹரி என்பதாகச் சொல்வார்கள். எப்படி அழகென்றால் அது அன்னையை மட்டும் குறிக்குமோ அதே போல ஆனந்தம் என்பதும் அவளை அடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது, அதனால்தான் அது ஆனந்த பிரவாஹம் என்று பெயர்.



பரமாச்சாரியார் ஆனந்தலஹரி பற்றிச் சொல்லும் போது பின்வருமாறு சொல்வார். ஸத் ஆக இருக்கும் பரமேஸ்வரனின் 'சித்' (அறிவு) ஆன அம்பிகையிடத்தே தான் ஆனந்த அனுபவம் கிடைக்கிறது. எனவே இந்த சித்தால் நமக்குக் கிடைக்கும்ஆனந்தத்தின் முடிவு ஞானமயமான அத்வைத ஆனந்தம். அம்பிகை அந்த ஆனந்தமயத்தில் நிலைத்தவள். எனவேதான் இந்தபூர்வபாகத்திற்கு, கையிலையில் கிடைத்த ஈஸ்வரன் துதித்த பகுதிக்கு ஆனந்த லஹரி என்று பெயரிட்டார்.