ஆனந்த லஹரி - 5 & 6


ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன ஸெளபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயந-லேஹ்யேந வபுஷா
முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்


(ப்ரணத-ஜன-ஸெளபாக்ய-ஜனனீம்) வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸெளபாக்கியத்தையும் தரும் உன்னை (ஹரி:) விஷ்ணு பூஜித்து (புரா) முன்னொரு சமயம் (நாரீ பூத்வா) பெண் உருவம் கொண்டு (புரரிபும் அபி) முப்புரம் எரித்த பரமசிவனையுங் கூட (க்ஷோபம்) மனம் சலிக்கும்படி(அனயத்) கவர்ந்தார். (ஸ்மர: அபி) மன்மதனும் (த்வாம்) உன்னை (நத்வா) வணங்கி (ரதி-நயன-லேஹ்யேன-வபுஷா) ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங்கொண்டு (மஹதாம்) மகான்களான (முனீனாம் அபி) முனிவர்களும் கூட (அந்த:) அந்தரங்கத்தில் (மோஹாய) மதிமயக்கம் உண்டாகும்படி (ப்ரபவதி ஹி) செய்கிற சக்தி பெறுகிறான் என்பது நிச்சயம்.

பரமசிவனால் எரிக்கப்பட்ட மன்மதன், தேவியின் கடாஷத்தால் மற்றவர்களுடைய கண்ணுக்குப் புலப்படாமல், தன் மனைவியான ரதியின் கண்களூக்கு மட்டும் புலப்படும்படியான ஸீக்ஷ்ம சரீரத்தை அடைந்ததாக காஞ்சீ மகாத்மீயம் கூறுகிறது. "ஹர-நேத்ராக்னி-ஸ்ந்தக்த-காம-ஸஞ்ஜீவ-நெளஷதி:" என்பது லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 84ஆவது நாமாவளி, அதாவது சிவபெருமானால் எரிக்கப்பட்ட மன்மதனை பிழைக்கவைத்த சஞ்சீவினி மருந்தே என்று அன்னையை விளிப்பதாகப் பொருள்.


தனு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸிதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே


மன்மதன் தன் கையில் வைத்திருக்கும் வில் புஷ்பத்தால் ஆனது. அந்த வில்லின் நாண் வண்டுகளால் ஆனது. வில்லினால் செலுத்தும் பாணங்கள் எல்லாமும் புஷ்பங்களே (ஐந்து பாணங்கள்). மன்மதனின் மந்திரி வசந்த ருது. மன்மதனின் ரதம் மலைய மாருதம் எனப்படும்தென்றல் காற்று. இவ்வாறாக மன்மதனின் ஆயுதங்கள் எல்லாம் வலிவில்லாதவைதாம், ஆனாலும் மலையரசன் பெண்ணே, உனது கடைக்கண் பார்வையால் பெற்ற அருளால் அன்றோ மன்மதன் தனித்து நின்று இவ்வுலகனைத்தையும் வெற்றி கொள்கின்றான்!.

ஹிமகிரிஸீதே - மலையரசன் பெண்ணே; (தனு:) வில் (பெளஷ்பம்) மலர்களாலானது (விசிகா:) பாணங்கள் (பஞ்ச) ஐந்தும் பூக்களே; (ஸாமந்த:)மந்திரி (வஸந்த) வஸந்த ருது; (ஆயோதனரத:) போர் செய்ய ஏறிவரும் தேர்; (மலயமருத்) மலயத்திலிருந்து வீசும் தென்றல் காற்று (ததா அபி)அப்படியிருந்தும் (அனங்க:) உடலில்லாத மன்மதன் (ஏக:) ஒருவனாகவே (தே) உன்னுடைய (அபாங்காத்) கடைக்கண் பார்வையால் (காம் அபி க்ருபாம்) ஏதோ ஒரு கிருபையை (லப்த்வா) அடைந்து (இதம்) இந்த (ஜகத்) உலகம் (ஸர்வம்) அனைத்தையும் (விஜயதே) ஜெயிக்கிறான்.

மன்மதன் ரூபமற்றவனாக இருந்தாலும், அவன் மிகச் சிறந்த ஸ்ரீவித்யா உபாசகன். இப்படிப்பட்ட மந்த்ரத்ஷ்டாவான ரிஷி (மன்மதன்) பற்றியஞானம் இல்லாதவன் ஸ்ரீசக்கர பூஜையில் ப்ரவேசிக்கக் கூடாது என்று யஜீர்வேதமும் கூறுகிறது.

1 comments:

குமரன் (Kumaran) said...

காமனார் தாதையான ஹரியின் மோகினி ரூபத்தைப் பற்றியும் காமனின் மோஹன ரூபத்தைப் பற்றியும் அவற்றில் அன்னையின் அருள் எப்படி உருவெடுத்தது என்பதைப் பற்றியும் இன்று அறிந்தேன்.

ப்ரணத ஜன சௌபாக்ய ஜனனீம் - படிப்பதற்கும் நினைத்துப் பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது.

மன்மதனின் உபகரணங்கள் எல்லாமும் அவன் உருவமும் கூட வலிவில்லாததாக இருக்க அன்னையின் கடைக்கண் பார்வையின் அருளால் அவன் எல்லோரையும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' எனும்படி வெல்கிறான் ஆகா. அற்புதம். அனங்கன் ஒரு சிறந்த சாக்தன் என்பதை இன்று தான் அறிந்தேன்.