ஆனந்த லஹரி - 15 & 16



சரஜ்-ஜ்யோத்ஸ்னா-ஸுத்தாம் சசியுத ஜடாஜுட மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக குடிகா-புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷிர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதயா


அன்னையே! நீ சரத்காலத்துச் சந்திரனைப் போல் வெளுப்பானவள். பிறைச்சந்திரனையும், நவரத்ன கிரீடத்தையும் முடியில் தரிப்பவள். அபய-வரத முத்திரைகளையும், ஸ்படிகமணி மாலையினையும், புஸ்தகத்தையும் கைகளில் தாங்கியவள். இவ்வாறாக இருக்கும் உன்னை ஒருதரம் வணங்கும் பக்தர்களுக்கும் தேன், பால், திராக்ஷை போன்றவற்றை விட அதிகமாக இனிக்கும் சொல் நயங்கள் எப்படி வராது போகும்?.


இந்த பாடலில் தேவியின் (சரஸ்வதி ரூபம்) சுத்த சத்வ வடிவினைப் பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர். சரத்-ஜ்யோத்ஸ்னா சுத்தாம் - ரஜோ மற்றும் தமோகுணம் அற்ற சுத்த ஸ்த்வத்தை குறிக்கும் நிறம் வெண்மை. இதனால் தான் சரஸ்வதிக்கு ஏற்ற நிறமாக வெள்ளை சொல்லப்பட்டு இருக்கிறது. சசியுத ஜடாஜுட மகுடாம் - சந்திர கலையினை முடியில் சூட்டியிருப்பதால் பராசக்தியின் வடிவிலிருந்து இது வேறு அல்ல என்பது தெரிகிறது. இது மஹா சரஸ்வதியின் வடிவம். வர-த்ராஸ-த்ராண - அபய, வரத முத்திரைகள்; ஸ்படிக-குடிகா - ஸ்படிகமணி மாலை; ஸக்ருத் - ஒரு முறை; நத்வா - நமஸ்கரித்தல்; பணிதய: - சொற்றோடர்கள்; கதமிவ - எப்படி; ஸ்ந்நித ததே - சித்திக்காமல் போகும்?.



அன்னை லலிதா மாஹா த்ரிபுர சுந்தரி தன்னிலிருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள். அவை முறையே மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி. இந்த மூன்று வடிவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு வடிவங்கள் தோன்றியதாம். மஹாலஷ்மியிடமிருந்து ப்ரம்மாவும், லஷ்மியும் (சிவப்பு வர்ணம்), மஹாசரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் (நீல வர்ணம், இப்போது தெரிகிறதா விஷ்ணுவும், பார்வதியும் ஏன் சகோதர-சகோதரி பாவம் என்று?), மஹாகாளியிடமிருந்து சிவனும் சரஸ்வதியும் (வெண்மை நிறம்) கொண்டு தோன்றினர் என்று தேவீ மஹாத்மீயம் கூறுகிறது. 'ஸர்வ வர்ணாத்மிகே'ன்னு காளிதாசர் ச்யாமளா தண்டகத்தில் சொல்வது இதனால்தான்.



லக்ஷ்மி அஷ்டோத்திரமாகட்டும், சரஸ்வதி அஷ்டோத்திரமாகட்டும், 'ப்ரம்ம-விஷ்ணு சிவாத்மிகாயை'என்று ஒரு நாமாவளி வருவதை கவனித்து இருக்கலாம். அன்னை லலிதாவே ப்ரம்ம ரூபமாக ஸ்ருஷ்டி கார்த்தாவாகவும், விஷ்ணு ரூபமாக கோப்த்ரியாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹார மூர்த்தியாகவும் விளங்குகிறாள். இதனால்தான் ப்ரம்ம-விஷ்ணு-சிவாத்மிகா.




கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ


அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும்
எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யெளவன சிருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள்.


முந்தைய ஸ்லோகத்தில் வெண்மை நிறத்தினளாக அன்னையை கூறிய ஆச்சார்யார், இங்கு சிவப்பு நிறத்தவள் என்கிறார். அதுவும் எப்படி அருணோதய சூர்யன் போன்ற, அதாவது சூரியன் உதிக்கும் போது வரும் சிவந்த நிறமாம். இதைத்தான் 'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' என்கிறார் அபிராமி பட்டர். வெண்மை எப்படி சத்வ குணமோ அது போல சிவப்பு ரஜோ குணத்தை குறிப்பது. ஏன் சிவப்பு என்பது இங்கு ரஜோ குணத்தை குறிக்க வேண்டும்?. ஏனென்றால் பின்வரும் வரியில் அன்னை சிருங்கார ரஸத்தை தருவதாக கூறுவதால். சிருங்கார ரஸம் என்பதும் ரஜோகுணத்தை குறிப்பதுதான். 'அருணாம் கருணா-தரங்கிதாஷாம்' என்றுதான் அன்னையின் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கிறது.



ஆமாம்! இப்படி லலிதையின் வர்ணமான சிவப்பினை கூறி, உடனேயே விரிஞ்சி-ப்ரேயாஸ் என்று சரஸ்வதியை குறிக்க காரணம்?. அருண சரஸ்வதி
என்று அன்னைக்கு ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தில் அன்னை காமாக்ஷி போல பாசாங்குசமும், தனுர்-பாணமும் நான்கு கைகளில் ஏந்தி, இன்னும் நாலு கைகளில் ஸரஸ்வதிக்கு உரிய அஷமாலை, புஸ்தகம், வர-அபயம் கொண்டும் இருக்கிறாளாம். அந்த ரூபத்தையே இங்கு மறை பொருளாக சொல்லியிருக்கிறார்.



கவீந்த்ராணாம் - கவியரசர்களின்; சேத: கமல வன-பால ஆதப ருசிம் - சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியனாய் பிரகாப்பதால்; அருணாம் ஏவ (அருணா மேவ) - அருணா என்று பெயர் பெற்றவளும்; பவதீம் - உன்னை; பஜந்தே - பூஜிக்கிறவர்கள்; விரிஞ்சி ப்ரேயஸ்யா: - ப்ரம்ம பத்னியான சரஸ்வதியின்; தருண-தர - செழிப்பான; ச்ருங்கார லஹரி - சிருங்கார ரஸ பிரவாஹம்; கபீராபி: - கம்பீரமான; வாக்பீ - வாக்குகளால்; ரஞ்ஜனம் - மகிழ்ச்சி; விதததி - அளித்தல்

10 comments:

jeevagv said...

சக்தியர் மூவரில் அதிகம் எல்லோராலும் அறியப்படாதா(!) சரஸ்வதி தேவியைப் பற்றி படித்ததில் மிக்க மகிழ்ச்சி!

Geetha Sambasivam said...

//அன்னை லலிதா மாஹா த்ரிபுர சுந்தரி தன்னிலிருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள். அவை முறையே மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி. இந்த மூன்று வடிவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு வடிவங்கள் தோன்றியதாம். மஹாலஷ்மியிடமிருந்து ப்ரம்மாவும், லஷ்மியும் (சிவப்பு வர்ணம்), மஹாசரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் (நீல வர்ணம், இப்போது தெரிகிறதா விஷ்ணுவும், பார்வதியும் ஏன் சகோதர-சகோதரி பாவம் என்று?), மஹாகாளியிடமிருந்து சிவனும் சரஸ்வதியும் (வெண்மை நிறம்) கொண்டு தோன்றினர் என்று தேவீ மஹாத்மீயம் கூறுகிறது. 'ஸர்வ வர்ணாத்மிகே'ன்னு காளிதாசர் ச்யாமளா தண்டகத்தில் சொல்வது இதனால்தான்.//

அருமையா இருக்கு, எனக்கு இப்படி எல்லாம் எழுத முடியலையெனும் இருக்கு. நல்லா எழுதிட்டு வரீங்க!
,

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
அடியேனுக்கு நெடுநாளைய ஐயம்!
இங்கு கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! அறியும் விழைவால் வினவுகிறேன்!

பிரம்ம பதவி என்று தானே சொல்லுகிறார்கள்! சதுர் யுகங்களுக்கு பிரம்மா மாறும் போது, அன்னை சரஸ்வதியின் நிலை என்ன?

(பிரசுரத்துக்கு ஏற்றதாக இல்லையாயின் நிராகரித்து விடவும்!)

மெளலி (மதுரையம்பதி) said...

KRS,

நீங்க கேட்ட கேள்வி அப்படி ஒன்றும் அபசாரமானதல்ல.

ஓவ்வொரு சதுர் யுகத்தின் ஆரம்பத்திலும் ஆதி சக்தியிலிருந்து மூன்று சக்திகள் (மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி) பிரிந்து அவை முறையே இரு வடிவங்களை எடுக்கிறது என்றே சொல்லப் பட்டிருக்கிறது.

எப்படி சதுர்யுக முடிவில் எல்லாம் இணைக்கிறது, அதே போல சரஸ்வதியும் ஆதார சக்தியில் ஐக்கியம் ஆகிவிடுவாள். பின்னர் அடுத்த சதுர் யுகம் ஆரம்பிக்கையில் இந்த சக்திகள் மீண்டும் பர்ராசக்தியிலிருந்து பிரிகிறது.

கீதாம்மா தன் பின்னூட்டத்தில் அந்த பகுதியினை கட்-பேஸ்ட் பண்ணியிருக்காங்க பாருங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா!...நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ஜிவா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விளங்காததை விளக்கிய வித்தகர் மெளலி அண்ணாவுக்கு நன்றி! :-)
கலைவாணி நின் கருணை தேன்மழையே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by a blog administrator.
மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்....உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லிவிட போகிறேன்....ஏதோ என்னை ஆழம் பார்த்திருக்கிறீர்கள்....போகட்டும். :)

குமரன் (Kumaran) said...

சுத்த சத்வ ரூபமான தாயின் தரிசனத்தை இந்தப் பாடல் மிகவும் நன்றாகத் தருகிறது மௌலி.

பெருமாளும் பார்வதியும் உடன்பிறந்தோர் என்பதற்கான தேவி மஹாத்மிக காரணத்தை சொல்லியிருக்கிறீர்கள். பிரம்மதேவர் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்தவர் என்பது உலகில் பிரசித்தம். விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மி தேவியிடமிருந்து பிரம்மன் பிறந்தார் என்பதும் பொருத்தமாகத் தான் இருக்கிறது.

மஹாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி, மஹாகாளி இவர்களுக்குத் தரப்பட்ட நிறங்கள் தான் கொஞ்சம் வேறுபாடாகத் தோன்றுகிறது. மஹாசரஸ்வதி சுத்த சத்வ வடிவமாக வெள்ளையாகச் சொல்லப்படுபவள்; அவளிடமிருந்து தமோ ரூபமான நீலநிறம்/கருநிறம் கொண்டு விஷ்ணுவும் பார்வதியும் தோன்றுகிறார்கள். இது வேறுபாடாகத் தோன்றுகிறது. மஹாலக்ஷ்மி ரஜோ குண வடிவமாக சிவந்த நிறத்துடன் சொல்லப்படுபவள். அவளிடமிருந்து ரஜோ குண உருவத்தினரான பிரம்மனும், லக்ஷ்மியும் தோன்றுகிறார்கள் - இங்கு பொருத்தமாகத் தோன்றுகிறது. மஹாகாளி தமோ குண வடிவமாக கருநிறத்துடன் சொல்லப்படுபவள். அவளிடமிருந்து சத்வ ரூபமான வெள்ளை நிறத்துடன் சிவனும் சரஸ்வதியும் தோன்றினார்கள் என்பது வேறுபாடாக இருக்கிறது.

ப்ரஹம விஷ்ணு சிவாத்மிகாயை என்ற நாமாவளியைப் படித்திருக்கிறேன்.

***

அன்னையின் அருண சரஸ்வதி திருவுருவத்தைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன் மௌலி. மிக்க நன்றி.