செளந்தர்யலஹரி 69 & 70


கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே

ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!, உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும். உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.


இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார். விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது. அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார். ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம். அந்த த்ரிவளீ எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார். ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது, மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது. இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.

கதி-கமக-கீதைக நிபுணே - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே; தே களே - உன் கழுத்திலுள்ள; திஸ்ரோ ரேகா - மூன்று மடிப்புகள்/வரிகள்; விவாஹ வ்யாநத்த ப்ரகுண - விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;குண ஸங்க்யா ப்ரதி புவ: - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்; நாநாவித - பலவிதமான; மதுர ராகாகர புவாம் - இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற; த்ரயாணாம் க்ரமாணாம் - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு; ஸ்திதி நியம ஸீமாந இவ- இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல; விராஜந்தே - விளங்குகின்றது.


கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

செந்திருநின் திருமணத்திற் சேர்ந்தசர
மூன்றழுந்தித் திகழ்வ தென்கோ
மந்தரமத் திமதார மூவகைநா
தமுமெல்லை வகுத்த தென்கோ
கொந்திரையுந் துணர்பூகங் கொழுத்தபசுங்
கழுத்தின்வரைக் குறிகள் மூன்றும்
இந்திரையுஞ் சயமகளுங் கலைமாதும்
புகழ்வதல்லால் யானென் சொல்வேன்.

---------------------------------------------------------------------------------------------



ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா


அம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.



ம்ருணாளீ ம்ருத்வீனாம் - தாமரைத் தண்டு போன்ற ம்ருதுவான; தவ -உனது; சதஸ்ருணாம் புஜ லதானாம் - கொடிகள் போன்ற நான்கு புஜங்களை; ஸெளந்தர்யம் - அழகை; ஸரஸிஜபவ: ப்ரம்மா; ப்ரதமமதனாத் - தன்னுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த; அந்தகரிபோ: - பரமசிவன்;நகேப்ய: - நகங்களுக்கு; ஸம்த்ரஸ்யந் - பயந்துகொண்டு; ஸம-அபய - ஏக காலத்தில் அபயம்; சதுர்ணாம் சீர்ஷாணாம் - மீதமிருக்கும் நான்கு தலைகளுக்கும்; அபயஹஸ்தார்ப்பணதியா - அபயப்ரதானம் செய்வாயென்ற எண்ணத்தில்; சதுர்பிர் வதனை: - தனது நான்கு முகங்களாலும்; ஸ்தெளதி - ஸ்தோத்ரம் செய்கிறார்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


முன்னமொரு தலைசினவுன் முதல்வரால்
இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக் கேற்றபசுங் கழைமணித்தோள்
ஒருநான்கும் வழுந்து கின்றான்
இன்னமொரு சீற்றமெழுந் தரிமலையை
எனினுமிவள் தடமென் தோளைச்
சொன்னதலைக் கழிவிலையென் றதிற்றுணிந்த
துணிவன்றோ சுருதி வாழ்வே.

செளந்தர்யலஹரி 67 & 68


கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுல தயா
கரக்ராஹ்யம் சம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மெளபம்ய ரஹிதம்



தாயே!, உன்னிடம் வாத்ஸல்யமுள்ள ஹிமவானால் தன் கைவிரல்களின் நுனியில் தொடப்பட்டதும், உன்னுடைய அதரத்தைப் பானம் பண்ணுகிறதில் ஆசையுள்ள உன் புருஷனான பரமசிவனால் அடிக்கடி உயரே தூக்கப்பட்டதும், அவருடைய கைக்கு அடங்கியதும்,ஸமமாகச் சொல்லக்கூடியது ஏதும் இல்லாததும், உனது முகம் என்னும் கண்ணாடிக்குக் கைப்பிடிக் காம்பு போன்றதுமான உன்னுடைய முகவாய்க்கட்டையை நாங்கள் எப்படி வர்ணிக்க முடியும்?.

அன்பு/ப்ரியம் என்பது ஒவ்வொருவரது உறவின் மூலம் பல பெயர்களில் கூறப்படுகிறது. தாய்-தந்தை தனது குழந்தையிடம் கொண்டிருப்பது வாத்ஸல்யம் என்பர், இதே போல கணவன் தனது மனையாளிடம் கொண்டிருப்பது ப்ரேமை என்றும், சிஷ்யன் தனது குருவிடம் கொண்டிருப்பது பக்தியென்றும், குரு தமது சிஷ்யர்களிடம் கொண்டிருப்பது அனுக்ரஹமென்றும் கூறுவர். இந்த ஸ்லோகத்தில், பராம்பிக்கைக்கு ஹிமவான் தந்தையானதால் [பார்வதி அவதாரம்] வாத்ஸல்யமும், பரமசிவ பத்னி என்பதால் ஈஸ்வரனுக்கு அன்னையிடம் இருப்பது ப்ரேமை என்றும் ஆசார்யார் கூறுகிறார்.

இன்றும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் கைபிடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம். அது போலவே அன்னையின் முகமென்னும் கண்ணாடிக்கு கைப்பிடியாக இருக்கிறதாம் அன்னையின் முகவாய்க்கட்டை. 'அனாகலித ஸாத்ருச்ய சுபுகஸ்ரீவிரஜிதா' என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வருவதன் பொருளானது அம்பிகையின் முகவாய்கட்டுக்கு இணையாக வர்ணிக்க ஏதுமில்லை என்பதே.

துஹிந கிரிணா - உன் பிதாவான ஹிமவானால்; வத்ஸலதயா - குழந்தையிடத்து வாத்ஸல்யம்/அன்பு; கராக்ரேண - கை விரல் நுணியால்; ஸ்ப்ருஷ்டம் - தொடப்பட்டதும்; கிரிசேந - உன் புருஷனான பரமசிவனால்; அதர-பான-குலதயா - அதரபானம்பண்ணுவதிலேயே அதிக ப்ரேமையுடவரான; முஹு: - அடிக்கடி; உதஸ்தம் - உயரத் தூக்கப்பட்டதும்; சம்போ: - அவருடைய - பரமசிவனுடைய; கரக்ராஹ்யம் - கையால் பிடிக்கத் தகுந்ததும்; ஒளபம்ய ரஹிதம் - உபமானமில்லாத/நிகரற்ற;முக முகுர வ்ருந்தம் - முகமாகிற கண்ணாடிக்குக் காம்பு/பிடி போன்ற; தவ சுபுகம் - உன் முகவாய்க்கட்டையை; கதம்காரம் ப்ரூம: எப்படி வர்ணிப்போம்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


மகவாசை யாலிமைய மலையரையன்
மலர்க்கைதொட மனத்து ளன்பு
புகாஅசை யாலிறைவன் கரத்தேந்தப்
பொலிவுறுநின் சுபுகம் போற்றின்
முகவாசி அரன்படிமக் கலம்பார்க்க
விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சகவாழ்வை இகழ்ந்திதயந் தனித்தவர்தந்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே.







புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்
ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா


அம்பிகே!, பரமசிவன் உன்னை எப்போதும் ஆலிங்கனம் செய்வதினால் ஏற்படும் மயிர்க்கூச்சத்தால் உன் கழுத்துப் பகுதி முள்ளு-முள்ளாக இருக்கிறது. இவ்வாறான உனது கழுத்துப் பிரதேசம், உனது முகமாகிய தாமரைக்குத் தண்டு போன்று தோற்றம் தருகிறது.கழுத்தில் அணிந்திருக்கும் முத்து ஹாரம் வெண்மையானாலும், உனது கழுத்தில் பூசப்பட்டிருக்கும் கருத்த அகில் கலந்த சந்தனக் குழம்பின் மிகுதியால் சேற்றில் இருக்கும் தாமரைக் கொடியைப் போன்றதாக இருக்கிறது.

அன்னையின் முகத்தை தாமரைப் புஷ்பத்திற்கும், கழுத்தை தாமரைத் தண்டாகவும் சொல்லி தாமரைத் தண்டில் இருக்கும் சிறு முள்ளுகள் போல ஈசனது ஆலிங்கனத்தால் அன்னையின் கழுத்தில் உள்ள மயிர்கால்கள் கூச்செரிதலுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்.தாமரை, தண்டு ஆகியவற்றை அன்னையின் முகம், கழுத்துக்கு உவமையாக்கி, பின்னர் தாமரைக் கொடிக்கு உவமையாக அன்னையின் கழுத்தில் விளங்கும் முத்தாலான ஹாரத்தைச் சொல்கிறார். முத்து மாலை வெண்மை நிறமுடையது என்றாலும் அன்னையின்கழுத்தில் இருக்கும் அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பில் புரள்வதால் தனது வெண்மையை இழந்து தாமரைக் கொடி போல காணப்படுவதாகச் சொல்கிறார்.

தவ - உன்னுடைய; க்ரீவா - கழுத்து; புரதமயிது: - முப்புரமெரித்த சிவனது; புஜாச்லேஷாத் - புஜங்களின் தழுவுதலால்; நித்யம் - எப்போதும்; கண்டகவதீ - மயிர்க் கூச்செரிந்து முள்ளுகள் போல; முக-கமல-நால-ச்ரியம் - முகத்தாமரைக்குக் காம்புபோன்ற அழகை; தத்தே - அடைகிறது; யத் அத: - அதன் கீழே; ஹார-லதிகா - முத்து மாலை; ஸ்வத: - இயற்கையில்; ச்வேத: - வெண்மையாக; காலாகரு - கருமையான அகிலுடன் சேர்ந்த; பஹுல-ஜம்பால - சந்தன குழம்பினால்; மலினா - சேற்றில்;ம்ருணாலீ - தாமரைக் கொடியின்; லாலித்யம் - பொலிவை; வஹதி - கொண்டதாக இருக்கிறது.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

வயங்குறுநின் தரளவட மான்மதச்சே
றளையமது மத்தர் மேனி
முயங்குதொறும் எழுபுளக முட்பொதிந்த
பசுங்கழுத்து முகமுங் கண்டால்
இயங்குபுனற் கருஞ்சேற்றின் எழும்வலய
முள்ளரைத்தா ளீன்ற கஞ்சம்
பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப்
பசுமையொளி பழுத்த பொன்னே.

செளந்தர்யலஹரி 65 & 66


ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விசாகேந்த்ரோ-பேந்த்ரை: சசிவிசத-கர்ப்பூரசகலா

விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா


தாயே!, அசுரர்களுடன் போரில் ஈடுபட்டு, அவர்களை வென்று திரும்பிய விசாகன் என்று சொல்லப்படும் தேவஸேனாபதியான ஸுப்ரமண்யரும், இந்த்ர, உப-இந்திரரும் தாங்கள் போரில் ஜெயம் அடைந்ததை உனக்குத் தெரிவிப்பதற்காக போர்களத்திலிருந்து நேராக உன்னிடம் வந்து தங்கள் கவசத்துடனும், தலைப்பாகையை கழற்றியவாறும் உன்னை நமஸ்கரிக்கின்றனர். இவர்கள் சண்டிகேஸ்வரனுடைய பாகமாகிய பரமசிவனது நிர்மால்யத்தில் நோக்கம் இல்லாதவர்களானாலும், சந்திரன் போன்ற நிறமுடைய பச்சைக் கர்பூரத்துடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்களை பிரஸாதமாகக் கொள்கின்றனர்.

சிவனுடைய நிர்மால்யம் (சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புஷ்பம், தாம்பூலம், மற்றும் உணவுப் பதார்த்தங்களில் அவர் எடுத்துக் கொண்டது போக மீதி) அவரது ப்ரமத கணங்களில் முதலாவதான சண்டன் என்பவனுக்குச்சொந்தமானது. இதனால்தான் சிவன் சொத்துக் குல நாசம் என்று கூறுகிறார்கள். சிவ பூஜையில் சண்டேஸ்வரருக்கு சிறப்பிடம் உண்டு. சண்டேசரது அனுமதி பெற்றே சிவ பிரஸாதம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறான சணடேசருக்குச்சொந்தமானதில் ஸுப்ரமண்யர், விஷ்ணு மற்றும் இந்திரன் விருப்பம் காண்பிக்கவில்லையாம். உபேந்திரர் என்பது மஹாவிஷ்ணுவின் பெயர். தேவர்களின் ஸேனாபதியாக விசாகன் இருப்பதால் அவரது பெயரை முதலில் சொல்லியிருக்கிறார்.

மாத: - தாயே!, ரணே - போரில்; தைத்யான் - அசுரர்கள்; ஜித்வா - வென்று; நிவ்ருத்தை: - திரும்பியவர்கள்; அபஹ்ருத-சிரஸ்த்ரை: - தலைப்பாகை இல்லாதவர்கள்; கவசிபி: - கவசமணிந்தவர்கள்; சண்டாம்ச - சண்டிகேஸ்வரனுடைய பாகமான; த்ரிபுரஹர நிர்மால்ய - பரமசிவனது நிர்மால்யம்; விமுகை: - விருப்பமின்மை; விசாக-இந்த்ர-உபேந்த்ர - விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ஸுப்ரமண்யன், இந்திரன், உபேந்திரன் என்று கூறப்படும் மஹாவிஷ்ணு; சசி விசத - சந்திரன் போன்ற வெண்மையான; கர்ப்பூரசகலா - பச்சைக் கர்பூரத்துடன் கூடிய; தவ - உன்னுடைய; வதன தாம்பூல கபலா - வாயில் மெல்லப்பட்ட தாம்பூல கவளங்கள்; விலீயந்தே - உட்கொள்ளுதல்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

அற்றையருட் கிவசேடஞ் சண்டனுண
அது பொறா தாவல் தீரக்
கற்றைமலர்க் குழலுமைநின் கருப்பூரச
கலமதிச் சகலம் போல
உற்றதிருத் தம்பலத்து னொருசகல
மேனுமினி துண்டு வாழப்
பெற்றிலரேல் அமரரெனும் பெயர்பெரவும்
இருந்தனரோ பிழைப்பில் விண்ணோர்.




விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதாநம் பசுபதேஸ்
வயாரப்தே வக்தும் சலிதசிரஸ ஸாது-வசனே
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதாம்


அம்மா, உன்னுடைய பதியான பரமசிவனது லீலா வினோதங்களை சரஸ்வதி வீணையில் பாடிக் கொண்டிருக்கும்போது அதனைக் கேட்டு சந்தோஷமடைந்து அதைப் பாராட்டுகையில், உனது குரலினிமையானது சரஸ்வதியின் யாழிசையைப்பழிக்கும் அளவு இனிமையாக இருந்ததால், சரஸ்வதி வெட்கமடைந்து தனது யாழை உறையிட்டு வெளியே தெரியாதபடி மூடிவிடுகிறாள்.

அம்பிகையின் குரலானது வாக்தேவதையின் வீணையிசையை விட இனிமையானது என்கிறார் பகவத்பாதர். தீந்தமிழிலும் 'யாழைப் பழித்த மொழியாள்' என்று அன்னையைப் போற்றும் பெயர் இருப்பதைக் காணலாம். அன்னைக்கு தனது பதியின்லீலைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் என்பதை 64ம் ஸ்லோகத்தில் பார்த்தோம். இதனை அறிந்த சரஸ்வதி தேவி ஈசனது லீலைகளான த்ரிபுரசம்ஹாரம், தக்ஷயாக த்வம்ஸனம், ஹாலாஹல தாரணம், கஜாசுர வதம் போன்றவற்றை தனதுவீணையிசையில் பாடியதாகச் சொல்லியிருக்கிறார்.

சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் "கச்சபீ" என்பது. சஹஸ்ரநாமத்தில், 'நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ' என்னும் நாமமும் கச்சபீ விணையின் நாதத்தை தோற்கடிக்கும் குரலினிமை உடையவள் என்றே சொல்கிறது.

பசுபதே: - பரமசிவனுடைய; விவிதம் அபதாநம் - நானாவிதமான லீலைகளை; விபஞ்ச்யா - வீணையால்; காயந்தீ - பாடிக் கொண்டிருக்கும்; வாணீ - சரஸ்வதி தேவி; சலித சிரஸா - மகிழ்ச்சியில் தலையசைத்த; த்வயா - உன்னால்ஸாது வசநே - ஏற்க்கும்படியான வார்த்தைகளை; லக்தும் ஆராப்தே - சொல்ல ஆரம்பிக்கும் போது; ததீயை: மாதுர்யை வாக்கின் இனிமையில்; அபலபித தந்த்ரீஇ கலரவாம் - பரிஹாஸம் ப்ண்ணப்பட்ட தந்திகளுடைய ஸ்வரத்தோடு கூடிய ;நிஜாம் வீணாம் - தன்னுடைய வீணையை; சோளேந - உறையில்; நிப்ருதம் - வெளியில் தெரியாது மறைத்து; நிசுளயதி - மூடி விடுதல்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

பசுத்தமலர்க் கொடிகருணை பழுத்தனைய
கொம்பேநின் பரமர் பொற்றோள்
விசைத்தொழிலைக் கலைவாணி தனிற்பாடிப்
பாடியவண் மெலிவ தல்லால்
அசைத்திலர்பொன் முடியுனது மதுரமொழிக்
கசைத்தனரென் றதற்கு நாணி
இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில்வீணை
உறையிலிட்டா ளேது செய்வாள்.