Showing posts with label Moolatharam. Show all posts
Showing posts with label Moolatharam. Show all posts

ஆனந்த லஹரி - 41

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மாநம் மந்யே நவரஸமஹாதாண்டவநடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதயவிதிமுத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

தாயே!, லாஸ்யத்தில் ப்ரியமுடைய மஹா பைரவியாகிய உன்னுடன் நவரஸங்களுடன் கூடிய மஹாதாண்டவத்தைச் செய்யும் நவாத்மகனான ஆனந்த பைரவராகிய ஸதாசிவனை என்னுடைய மூலாதார சக்ரத்தில் வைத்து தியானித்து நமஸ்கரிக்கிறேன். ப்ரளயகாலத்தில் நாசமடைந்த லோகங்களை உஜ்ஜீவிக்க வேண்டும் என்ற கருணையுடன் நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவம் செய்வதால் இந்த உலகானது உங்களிருவரையும் மாதா-பிதாவாக கொண்டது.

ஷட்சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஆஜ்ஞா வரையிகிருப்பதை சொல்வது க்ரமம், ஆனால் இங்கே கடந்த ஆறு ஸ்லோகங்களில் அவற்றைச் சொல்கையில் ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஆரம்பித்து மூலாதாரத்தில் முடித்ததன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்த சக்ரங்களின் தத்வங்கள் ஆஜ்ஞாவில் ஆரம்பித்துச் சொல்லுகையில் மனஸ், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருதிவி என்று வரிசை வருகிறது. இந்த வரிசையானது "ஆத்மன ஆகாஸ் ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவி" என்ற ச்ருதி வாக்கியத்தை ஒட்டி வருகிறது என்பர். அதாவது ப்ருதிவியானது ஜலத்திலிருந்தும், ஜலமானது அக்னியிலிருந்தும், அக்னி வாயுவிலிருந்தும், வாயு ஆகாசத்திலிருந்தும், ஆகாசம் ஆத்ம தத்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பஞ்சவிம்சதிகள் ப்ருதிவியிருந்து செல்கையில் ஸ்தூலமாகவும் பின்னர் ஸுக்ஷ்மத்திலும் மாறுகிறது. இதனால்தான் மயிம் மூலாதாரே என்ற 9ஆம் ஸ்லோகத்திலும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் மூலாதாரத்தில் அம்பிகையை பரமசிவனுடன் சேர்த்து உபாசிக்கும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. அம்மூலாதாரத்தில் இருக்கும் சக்திக்கு குண்டலினீ என்று பெயர். அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும். இவை முறையே ஸமயமார்க்கம், கெளல மார்க்கம் என்றும் வழங்கப்படுகிறது. கெளல மார்க்கத்தில் பூர்வ கெளலம், உத்தர கெளலம் என்று இருமுறைகள் உண்டு. அம்பாளது பூஜையானது அந்தர்முகமாகவே செய்யப்பட வேண்டும் என்றும், அதிலும் அம்பாளை சஹஸ்ராரகமலத்துக்கு அழைத்து வந்து அங்கே பூஜிக்க வேண்டும் என்றும் ஸமயிகள் கூறுவர். இவ்வாறு செய்ய இயலாதோர், பஹிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றில் பாவனையாக பூஜிப்பர்.

கெளல மார்க்கத்தில் ஸ்ரீசக்ரத்தில் த்ரிகோணத்தை மட்டுமே பூஜிப்பர். கெளல மார்கத்தவர் மூலாதாரத்தில் இருக்கும் த்ரிகோணத்தையே பிந்து ஸ்தானமாக பூஜிப்பதால் அங்கிருக்கும் குண்டலினீ சக்தியே ப்ராதான்யம், இதனால்தான் இச்சக்திக்கு கெளலினீ என்றொரு பெயர். குண்டலினீ தனது நித்திரையை விட்டு எழும்பினாலே கெளலர்களுக்கு முக்தி. இதிலிருக்கும் பூர்வ-உத்தர கெளலம் பற்றி பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.

இவை எல்லாமே ஸ்ரீவித்யை என்று சொல்லப்பட்டாலும் இதனை உணர்ந்து, உபாசித்து உயர்வினை எய்தியவர்கள் 12 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் மஹிமை வாய்ந்த இவ்வித்யை வேதங்களின் வேவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து உபாசித்துள்ளதால் இவ்வித்யை 12 மந்த்ர த்ரஷ்டாகளால்/ரிஷிகளால் வழங்கப்படுகிறது. அவர்கள் அகஸ்தியர், லோபாமுத்ரா, துர்வாசர், மனு, சந்திரன், மன்மதன், குபேரன், அக்னி, சூர்யன், இந்திரன், ஸ்கந்தன், சிவன் ஆகியவர்கள். இவர்கள் சொல்லிய வித்தைகள் இதுவரை வந்த ஸ்லோகங்களில் (32 முதல்) ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னர் சொல்லியபடி இதுவரையில் சொல்லப்பட்ட 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் இனி வரும் 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் சொல்லப்பட்டது மந்த்ர சாஸ்திரம், உபாசனா-க்ரமம் போன்றவற்றைச் சொல்லியது. இனி வருவது அம்பாளின் விசேஷ செளந்தர்யத்தை அழகாகச் சொல்லும். இந்த க்ரந்தத்திற்கு செளந்தர்ய லஹரி என்ற பெயர் இனிவரும் பகுதியாலேயே எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் (59 ஸ்லோகங்கள்) தான் ஆதிசங்கர பகவத் பாதாள் பண்ணினது. இந்த பகுதியினை நவராத்திரியில் ஆரம்பிக்கலாம்.