செளந்தர்யலஹரி 73 & 74


அமூ தே வக்ஷோஜெள் அம்ருதரஸ மாணிக்ய குதுபெள
ந ஸந்தேஹ ஸ்பந்தெள நகபதிபதாகே மநஸி ந:
பிபந்தெள தெள யஸ்மத் அவிதித வதூஸங்க ரஸிகெள
குமாரெள அத்யாபி த்விரதவதந க்ரெளஞ்சதலநெள

அம்மா, உன்னுடைய மார்பிலிருப்பது பால் நிறைந்த ஸ்தனங்களல்ல, அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும்பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள். அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர். இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம்.

மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால் அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர். இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர். அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும்.

அமூ தே வக்ஷோஜெள - உன்னுடைய ஸ்தனங்கள்; அம்ருதரஸ மாணிக்ய குதுபெள - அம்ருத ரஸம் நிறம்பிய மாணிக்கத்தாலான குடுவைகள்; ந மநஸி - எங்கள் மனதில்; ந ஸந்தேஹ ஸ்பந்த: - ஸம்சயம் லவலேசமும்/சிறிதும் இல்லை; யஸ்மாத் - ஏனென்றால்; தெள பிபந்தெள - அவைகளை பானம் செய்கின்ற; த்விரத வதந க்ரெளஞ்ச தலநெள - கஜானனனும், க்ரெளஞ்சத்தைப் பிளந்த குமரனும்; அத்யாபி - இன்னமும்; அவிதித வதூஸங்க ரஸிகெள - ஸ்த்ரீ ஸங்கமத்தின் ரஸம் தெரியாத; குமாரெள - குழந்தைகளாக இருப்பது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முக்கணிறை வர்க்குமயல் முற்றஎழின் முற்றும்முலை
முட்டியசு ரப்பொ ழுகுபால்
மக்களிரு வர்க்கருள அக்களிறும் இக்குகனும்
மட்டிளமை முற்று கிலரால்
அக்கடலு தித்தஅமு தத்தனையெ டுத்ததில
டைத்திருகண் முத்தி ரையின் வாழ்
செக்கர்மணி மெய்க்கலச மத்தனையுன் வட்டமுலை
செப்பலம் லைப்பு தல்வியே

------------------------------------------------------------------------------------


வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே

தாயே! உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது. அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது. இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.

சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்என்று சொல்கிறார் தேதியூரார்.

குசா போக: - ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசம்; ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி: - கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உருவான; முதாமணிபி: - முத்து மணிகளால்; ஸமாரப்தாம் - நன்றாக சேர்க்கப்பட்ட; அமலாம் - தோஷமில்லாத; பிம்பாதர ருசிபி: - கோவைப் பழம்போல சிவந்த அதர காந்தியால்; அந்த: சபளிதாம் - உட்புறம் சித்ர வர்ணங்களோடு கூடியதாய்ச் செய்யப்பட்ட; ஹாரலதிகாம் - கொடிபோன்ற ஹாரத்தை; புரதமயிது: - புரங்களை அழித்தவரான ஈசனுடைய; ப்ரதாப வ்யாமிச்ராம் - பராக்ரமத்தோடு கலந்த; கீர்த்திமிவ - கீர்த்தியைப் போல; வஹதி - தரித்துக் கொண்டு.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

கொற்ற வாரண முகம கன்பொரு
குஞ்ச ரானன நிருதனார்
இற்ற கோடு திர் ஆர மாலிகை
இதழ்ம னிப்ரபை தழையவே
பெற்ற பாகபி னாக பாணிப்ரதாப
மோடணை புகழெனா
உற்ற தாயினும் உனது பொற்றனம்
உரைப டாநிறை செல்வியே.

செளந்தர்யலஹரி 71 & 72


நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம்

தாயே உமா!, புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான, அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?. மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம் ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம்.

அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை, அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர். புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல. அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை, ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இருப்பதாக வேண்டுமானால் கூறலாம் என்கிறார்.

நகானாம் - நகங்களுடைய; உத்யோதை: - காந்தி/ஒளியினால்; நவ நளிந ராகம் - அன்றலர்ந்த செந்தாமரையின் நிறத்தில்; விஹஸதாம் - ஏளனம் செய்யும்; தே - உன்னுடைய; கராணாம் - கைகளின்; காந்திம் - ஒளியை;கதம் - எவ்வாறு; கதயாம: - வருணிப்போம்?; கமலம் - செந்தாமரை; யதி - ஒருவேளை; க்ரீடத் லக்ஷ்மி-சரண-தல - தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில்; லாக்ஷாரஸ சணம் - செம்மையான நலங்கு என்னும் கால் அலங்காரம்;கயாசித்வா - எப்படியோ; கலயா - சிறிதளவு; ஸாம்யம் - ஒற்றுமை; பஜது - அடையலாம்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

திருமகள்தன் சீறடியால் துவண்டும் அதிற்
செம்பஞ்சாற் செங்கேழ் பெற்றும்
மருமுளரி எழில்படைத்த திதுவோநம்
இயற்கையெதிர் அலர்வ தென்றே
இருகரமு நகைத்தநகை ஒளியையுனது
எழிலுகிரேன் றிறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்ற ததிசயமோ
பேதமையோ அன்போ அம்மே
------------------------------------------------------------------------------------------


ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம்
யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி

தாயே!, உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும், அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள் எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும். அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார்.

தேவதேவர்களுக்கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும். அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்குஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.

ஸ்கந்த - கந்தன்/முருகன்; த்விபவதந - விநாயகப் பெருமான்; பீதம் - பால் அருந்தும்; ப்ரஸ்னுத-முகம் - பால் சுரக்கும் காம்புகளுடைய; ஸ்தனயுக - நகில்கள் இரண்டும்; ந: - எங்களுடைய; கேதம் - துன்பத்தை; ஸததம் - எப்போதும்; ஹரது - போக்கடிக்கட்டும்; யத் - அந்த நகில்களை; ஆலோக்ய - பார்த்து; ஆசங்கா - சந்தேகித்து; ஆகுலித - கலங்கிய; ஹ்ருதய - மனத்துடன்; ஹேரம்ப - வினாயகர்; ஹாஸ-ஜனக: - சிரிப்பு உண்டாகும்படியாக; ஸ்வகும்பெள - தனது தலையில் உள்ள இரு கும்பங்களை; ஜடிதி - அவசரமாக; ஹஸ்தேன - கைகளால்; பரிம்ருசதி - தடவிப் பார்க்கிறார்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

நித்தரொரு பக்கர்மயில் நிர்களிறுன் வட்டமுலை
நிற்குமெழி வில்த னதுசீர்
மத்தகமெ னத்தனில் யிர்த்தொருக ரத்தைமுடி
வைத்துறவு றத்த டவுமால்
முத்தமுலை செப்புவதெ னக்களிறு பிற்குமரன்
முற்புதல்வர் துய்த்த அமுதால்
அத்தலைமை பெற்றனர் அதில்திவலை கிட்டினுமென்
அற்பஉயிர் முத்தி பெறுமே.

செளந்தர்யலஹரி 69 & 70


கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே

ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!, உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும். உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.


இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார். விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது. அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார். ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம். அந்த த்ரிவளீ எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார். ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது, மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது. இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.

கதி-கமக-கீதைக நிபுணே - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே; தே களே - உன் கழுத்திலுள்ள; திஸ்ரோ ரேகா - மூன்று மடிப்புகள்/வரிகள்; விவாஹ வ்யாநத்த ப்ரகுண - விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;குண ஸங்க்யா ப்ரதி புவ: - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்; நாநாவித - பலவிதமான; மதுர ராகாகர புவாம் - இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற; த்ரயாணாம் க்ரமாணாம் - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு; ஸ்திதி நியம ஸீமாந இவ- இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல; விராஜந்தே - விளங்குகின்றது.


கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

செந்திருநின் திருமணத்திற் சேர்ந்தசர
மூன்றழுந்தித் திகழ்வ தென்கோ
மந்தரமத் திமதார மூவகைநா
தமுமெல்லை வகுத்த தென்கோ
கொந்திரையுந் துணர்பூகங் கொழுத்தபசுங்
கழுத்தின்வரைக் குறிகள் மூன்றும்
இந்திரையுஞ் சயமகளுங் கலைமாதும்
புகழ்வதல்லால் யானென் சொல்வேன்.

---------------------------------------------------------------------------------------------



ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா


அம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.



ம்ருணாளீ ம்ருத்வீனாம் - தாமரைத் தண்டு போன்ற ம்ருதுவான; தவ -உனது; சதஸ்ருணாம் புஜ லதானாம் - கொடிகள் போன்ற நான்கு புஜங்களை; ஸெளந்தர்யம் - அழகை; ஸரஸிஜபவ: ப்ரம்மா; ப்ரதமமதனாத் - தன்னுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த; அந்தகரிபோ: - பரமசிவன்;நகேப்ய: - நகங்களுக்கு; ஸம்த்ரஸ்யந் - பயந்துகொண்டு; ஸம-அபய - ஏக காலத்தில் அபயம்; சதுர்ணாம் சீர்ஷாணாம் - மீதமிருக்கும் நான்கு தலைகளுக்கும்; அபயஹஸ்தார்ப்பணதியா - அபயப்ரதானம் செய்வாயென்ற எண்ணத்தில்; சதுர்பிர் வதனை: - தனது நான்கு முகங்களாலும்; ஸ்தெளதி - ஸ்தோத்ரம் செய்கிறார்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


முன்னமொரு தலைசினவுன் முதல்வரால்
இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக் கேற்றபசுங் கழைமணித்தோள்
ஒருநான்கும் வழுந்து கின்றான்
இன்னமொரு சீற்றமெழுந் தரிமலையை
எனினுமிவள் தடமென் தோளைச்
சொன்னதலைக் கழிவிலையென் றதிற்றுணிந்த
துணிவன்றோ சுருதி வாழ்வே.

செளந்தர்யலஹரி 67 & 68


கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுல தயா
கரக்ராஹ்யம் சம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மெளபம்ய ரஹிதம்



தாயே!, உன்னிடம் வாத்ஸல்யமுள்ள ஹிமவானால் தன் கைவிரல்களின் நுனியில் தொடப்பட்டதும், உன்னுடைய அதரத்தைப் பானம் பண்ணுகிறதில் ஆசையுள்ள உன் புருஷனான பரமசிவனால் அடிக்கடி உயரே தூக்கப்பட்டதும், அவருடைய கைக்கு அடங்கியதும்,ஸமமாகச் சொல்லக்கூடியது ஏதும் இல்லாததும், உனது முகம் என்னும் கண்ணாடிக்குக் கைப்பிடிக் காம்பு போன்றதுமான உன்னுடைய முகவாய்க்கட்டையை நாங்கள் எப்படி வர்ணிக்க முடியும்?.

அன்பு/ப்ரியம் என்பது ஒவ்வொருவரது உறவின் மூலம் பல பெயர்களில் கூறப்படுகிறது. தாய்-தந்தை தனது குழந்தையிடம் கொண்டிருப்பது வாத்ஸல்யம் என்பர், இதே போல கணவன் தனது மனையாளிடம் கொண்டிருப்பது ப்ரேமை என்றும், சிஷ்யன் தனது குருவிடம் கொண்டிருப்பது பக்தியென்றும், குரு தமது சிஷ்யர்களிடம் கொண்டிருப்பது அனுக்ரஹமென்றும் கூறுவர். இந்த ஸ்லோகத்தில், பராம்பிக்கைக்கு ஹிமவான் தந்தையானதால் [பார்வதி அவதாரம்] வாத்ஸல்யமும், பரமசிவ பத்னி என்பதால் ஈஸ்வரனுக்கு அன்னையிடம் இருப்பது ப்ரேமை என்றும் ஆசார்யார் கூறுகிறார்.

இன்றும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் கைபிடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம். அது போலவே அன்னையின் முகமென்னும் கண்ணாடிக்கு கைப்பிடியாக இருக்கிறதாம் அன்னையின் முகவாய்க்கட்டை. 'அனாகலித ஸாத்ருச்ய சுபுகஸ்ரீவிரஜிதா' என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வருவதன் பொருளானது அம்பிகையின் முகவாய்கட்டுக்கு இணையாக வர்ணிக்க ஏதுமில்லை என்பதே.

துஹிந கிரிணா - உன் பிதாவான ஹிமவானால்; வத்ஸலதயா - குழந்தையிடத்து வாத்ஸல்யம்/அன்பு; கராக்ரேண - கை விரல் நுணியால்; ஸ்ப்ருஷ்டம் - தொடப்பட்டதும்; கிரிசேந - உன் புருஷனான பரமசிவனால்; அதர-பான-குலதயா - அதரபானம்பண்ணுவதிலேயே அதிக ப்ரேமையுடவரான; முஹு: - அடிக்கடி; உதஸ்தம் - உயரத் தூக்கப்பட்டதும்; சம்போ: - அவருடைய - பரமசிவனுடைய; கரக்ராஹ்யம் - கையால் பிடிக்கத் தகுந்ததும்; ஒளபம்ய ரஹிதம் - உபமானமில்லாத/நிகரற்ற;முக முகுர வ்ருந்தம் - முகமாகிற கண்ணாடிக்குக் காம்பு/பிடி போன்ற; தவ சுபுகம் - உன் முகவாய்க்கட்டையை; கதம்காரம் ப்ரூம: எப்படி வர்ணிப்போம்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


மகவாசை யாலிமைய மலையரையன்
மலர்க்கைதொட மனத்து ளன்பு
புகாஅசை யாலிறைவன் கரத்தேந்தப்
பொலிவுறுநின் சுபுகம் போற்றின்
முகவாசி அரன்படிமக் கலம்பார்க்க
விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சகவாழ்வை இகழ்ந்திதயந் தனித்தவர்தந்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே.







புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்
ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா


அம்பிகே!, பரமசிவன் உன்னை எப்போதும் ஆலிங்கனம் செய்வதினால் ஏற்படும் மயிர்க்கூச்சத்தால் உன் கழுத்துப் பகுதி முள்ளு-முள்ளாக இருக்கிறது. இவ்வாறான உனது கழுத்துப் பிரதேசம், உனது முகமாகிய தாமரைக்குத் தண்டு போன்று தோற்றம் தருகிறது.கழுத்தில் அணிந்திருக்கும் முத்து ஹாரம் வெண்மையானாலும், உனது கழுத்தில் பூசப்பட்டிருக்கும் கருத்த அகில் கலந்த சந்தனக் குழம்பின் மிகுதியால் சேற்றில் இருக்கும் தாமரைக் கொடியைப் போன்றதாக இருக்கிறது.

அன்னையின் முகத்தை தாமரைப் புஷ்பத்திற்கும், கழுத்தை தாமரைத் தண்டாகவும் சொல்லி தாமரைத் தண்டில் இருக்கும் சிறு முள்ளுகள் போல ஈசனது ஆலிங்கனத்தால் அன்னையின் கழுத்தில் உள்ள மயிர்கால்கள் கூச்செரிதலுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்.தாமரை, தண்டு ஆகியவற்றை அன்னையின் முகம், கழுத்துக்கு உவமையாக்கி, பின்னர் தாமரைக் கொடிக்கு உவமையாக அன்னையின் கழுத்தில் விளங்கும் முத்தாலான ஹாரத்தைச் சொல்கிறார். முத்து மாலை வெண்மை நிறமுடையது என்றாலும் அன்னையின்கழுத்தில் இருக்கும் அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பில் புரள்வதால் தனது வெண்மையை இழந்து தாமரைக் கொடி போல காணப்படுவதாகச் சொல்கிறார்.

தவ - உன்னுடைய; க்ரீவா - கழுத்து; புரதமயிது: - முப்புரமெரித்த சிவனது; புஜாச்லேஷாத் - புஜங்களின் தழுவுதலால்; நித்யம் - எப்போதும்; கண்டகவதீ - மயிர்க் கூச்செரிந்து முள்ளுகள் போல; முக-கமல-நால-ச்ரியம் - முகத்தாமரைக்குக் காம்புபோன்ற அழகை; தத்தே - அடைகிறது; யத் அத: - அதன் கீழே; ஹார-லதிகா - முத்து மாலை; ஸ்வத: - இயற்கையில்; ச்வேத: - வெண்மையாக; காலாகரு - கருமையான அகிலுடன் சேர்ந்த; பஹுல-ஜம்பால - சந்தன குழம்பினால்; மலினா - சேற்றில்;ம்ருணாலீ - தாமரைக் கொடியின்; லாலித்யம் - பொலிவை; வஹதி - கொண்டதாக இருக்கிறது.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

வயங்குறுநின் தரளவட மான்மதச்சே
றளையமது மத்தர் மேனி
முயங்குதொறும் எழுபுளக முட்பொதிந்த
பசுங்கழுத்து முகமுங் கண்டால்
இயங்குபுனற் கருஞ்சேற்றின் எழும்வலய
முள்ளரைத்தா ளீன்ற கஞ்சம்
பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப்
பசுமையொளி பழுத்த பொன்னே.

செளந்தர்யலஹரி 65 & 66


ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விசாகேந்த்ரோ-பேந்த்ரை: சசிவிசத-கர்ப்பூரசகலா

விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா


தாயே!, அசுரர்களுடன் போரில் ஈடுபட்டு, அவர்களை வென்று திரும்பிய விசாகன் என்று சொல்லப்படும் தேவஸேனாபதியான ஸுப்ரமண்யரும், இந்த்ர, உப-இந்திரரும் தாங்கள் போரில் ஜெயம் அடைந்ததை உனக்குத் தெரிவிப்பதற்காக போர்களத்திலிருந்து நேராக உன்னிடம் வந்து தங்கள் கவசத்துடனும், தலைப்பாகையை கழற்றியவாறும் உன்னை நமஸ்கரிக்கின்றனர். இவர்கள் சண்டிகேஸ்வரனுடைய பாகமாகிய பரமசிவனது நிர்மால்யத்தில் நோக்கம் இல்லாதவர்களானாலும், சந்திரன் போன்ற நிறமுடைய பச்சைக் கர்பூரத்துடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்களை பிரஸாதமாகக் கொள்கின்றனர்.

சிவனுடைய நிர்மால்யம் (சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புஷ்பம், தாம்பூலம், மற்றும் உணவுப் பதார்த்தங்களில் அவர் எடுத்துக் கொண்டது போக மீதி) அவரது ப்ரமத கணங்களில் முதலாவதான சண்டன் என்பவனுக்குச்சொந்தமானது. இதனால்தான் சிவன் சொத்துக் குல நாசம் என்று கூறுகிறார்கள். சிவ பூஜையில் சண்டேஸ்வரருக்கு சிறப்பிடம் உண்டு. சண்டேசரது அனுமதி பெற்றே சிவ பிரஸாதம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறான சணடேசருக்குச்சொந்தமானதில் ஸுப்ரமண்யர், விஷ்ணு மற்றும் இந்திரன் விருப்பம் காண்பிக்கவில்லையாம். உபேந்திரர் என்பது மஹாவிஷ்ணுவின் பெயர். தேவர்களின் ஸேனாபதியாக விசாகன் இருப்பதால் அவரது பெயரை முதலில் சொல்லியிருக்கிறார்.

மாத: - தாயே!, ரணே - போரில்; தைத்யான் - அசுரர்கள்; ஜித்வா - வென்று; நிவ்ருத்தை: - திரும்பியவர்கள்; அபஹ்ருத-சிரஸ்த்ரை: - தலைப்பாகை இல்லாதவர்கள்; கவசிபி: - கவசமணிந்தவர்கள்; சண்டாம்ச - சண்டிகேஸ்வரனுடைய பாகமான; த்ரிபுரஹர நிர்மால்ய - பரமசிவனது நிர்மால்யம்; விமுகை: - விருப்பமின்மை; விசாக-இந்த்ர-உபேந்த்ர - விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ஸுப்ரமண்யன், இந்திரன், உபேந்திரன் என்று கூறப்படும் மஹாவிஷ்ணு; சசி விசத - சந்திரன் போன்ற வெண்மையான; கர்ப்பூரசகலா - பச்சைக் கர்பூரத்துடன் கூடிய; தவ - உன்னுடைய; வதன தாம்பூல கபலா - வாயில் மெல்லப்பட்ட தாம்பூல கவளங்கள்; விலீயந்தே - உட்கொள்ளுதல்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

அற்றையருட் கிவசேடஞ் சண்டனுண
அது பொறா தாவல் தீரக்
கற்றைமலர்க் குழலுமைநின் கருப்பூரச
கலமதிச் சகலம் போல
உற்றதிருத் தம்பலத்து னொருசகல
மேனுமினி துண்டு வாழப்
பெற்றிலரேல் அமரரெனும் பெயர்பெரவும்
இருந்தனரோ பிழைப்பில் விண்ணோர்.




விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதாநம் பசுபதேஸ்
வயாரப்தே வக்தும் சலிதசிரஸ ஸாது-வசனே
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதாம்


அம்மா, உன்னுடைய பதியான பரமசிவனது லீலா வினோதங்களை சரஸ்வதி வீணையில் பாடிக் கொண்டிருக்கும்போது அதனைக் கேட்டு சந்தோஷமடைந்து அதைப் பாராட்டுகையில், உனது குரலினிமையானது சரஸ்வதியின் யாழிசையைப்பழிக்கும் அளவு இனிமையாக இருந்ததால், சரஸ்வதி வெட்கமடைந்து தனது யாழை உறையிட்டு வெளியே தெரியாதபடி மூடிவிடுகிறாள்.

அம்பிகையின் குரலானது வாக்தேவதையின் வீணையிசையை விட இனிமையானது என்கிறார் பகவத்பாதர். தீந்தமிழிலும் 'யாழைப் பழித்த மொழியாள்' என்று அன்னையைப் போற்றும் பெயர் இருப்பதைக் காணலாம். அன்னைக்கு தனது பதியின்லீலைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் என்பதை 64ம் ஸ்லோகத்தில் பார்த்தோம். இதனை அறிந்த சரஸ்வதி தேவி ஈசனது லீலைகளான த்ரிபுரசம்ஹாரம், தக்ஷயாக த்வம்ஸனம், ஹாலாஹல தாரணம், கஜாசுர வதம் போன்றவற்றை தனதுவீணையிசையில் பாடியதாகச் சொல்லியிருக்கிறார்.

சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் "கச்சபீ" என்பது. சஹஸ்ரநாமத்தில், 'நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ' என்னும் நாமமும் கச்சபீ விணையின் நாதத்தை தோற்கடிக்கும் குரலினிமை உடையவள் என்றே சொல்கிறது.

பசுபதே: - பரமசிவனுடைய; விவிதம் அபதாநம் - நானாவிதமான லீலைகளை; விபஞ்ச்யா - வீணையால்; காயந்தீ - பாடிக் கொண்டிருக்கும்; வாணீ - சரஸ்வதி தேவி; சலித சிரஸா - மகிழ்ச்சியில் தலையசைத்த; த்வயா - உன்னால்ஸாது வசநே - ஏற்க்கும்படியான வார்த்தைகளை; லக்தும் ஆராப்தே - சொல்ல ஆரம்பிக்கும் போது; ததீயை: மாதுர்யை வாக்கின் இனிமையில்; அபலபித தந்த்ரீஇ கலரவாம் - பரிஹாஸம் ப்ண்ணப்பட்ட தந்திகளுடைய ஸ்வரத்தோடு கூடிய ;நிஜாம் வீணாம் - தன்னுடைய வீணையை; சோளேந - உறையில்; நிப்ருதம் - வெளியில் தெரியாது மறைத்து; நிசுளயதி - மூடி விடுதல்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

பசுத்தமலர்க் கொடிகருணை பழுத்தனைய
கொம்பேநின் பரமர் பொற்றோள்
விசைத்தொழிலைக் கலைவாணி தனிற்பாடிப்
பாடியவண் மெலிவ தல்லால்
அசைத்திலர்பொன் முடியுனது மதுரமொழிக்
கசைத்தனரென் றதற்கு நாணி
இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில்வீணை
உறையிலிட்டா ளேது செய்வாள்.

செளந்தர்யலஹரி 63 & 64


ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா
அதஸ்தே சீதாம்சோ: அம்ருதலஹரீம் ஆம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்ஜிகதியா

நீ, புன்சிரிப்புடன் இருக்கும் சமயம் உன்னுடைய வதன சந்திரனிடமிருந்து பெருகும் நிலவைப் போன்ற கிரணங்களை அதிகமாகச் சாப்பிட்ட சகோர பக்ஷிகளுக்கு அதன் இனிமையில் மூக்குத் திகட்டி மறத்துப் போனது. அவ்வாறு மறத்துப் போனதை மாற்றிக் கொள்ள அவை சந்திரனது அம்ருதமயமான கிரணங்களைப் புளித்த கஞ்சியாக நினைத்து அதை இரவுகளில் வேண்டிய அளவு குடிக்கின்றன.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் புன்சிரிப்பினைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஸ்மிதம் என்றாலேயே புன்சிரிப்பு என்று பொருள். அம்பிகையின் புன்சிரிப்பானது இன்னொரு சந்திரன் போன்று தோற்றம் தருகிறதாம். சகோர பக்ஷிகள் சந்திரனுடைய நிலாவையே பானம் பண்ணுவதாகச் சொல்வர். இதே சகோர பக்ஷியை "இங்கேயும்" பகவத் பாதர் உபயோகம் பண்ணியிருக்கிறார். அதாவது அன்னையின் ஸ்மிதமான வதனமானது சந்திரனைவிட அதிக மதுரமாக இருக்கிறது என்றும், அம்பிகையின் வதனாரவிந்தமாகிய சந்திரனுடன் ஒப்பிடும் போது, சந்திரன் புளித்த கஞ்சி மாதிரி இருப்பதாக ஒப்பீடு செய்கிறார்.


தவ வதந சந்த்ரஸ்ய - உன்னுடைய முகமாகிற சந்த்ரனுடைய; ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் - புன்சிரிப்பாகிய நிலவுக் கூட்டத்தை; பிபதாம் - குடிக்கிற; சகோராணாம் - சகோர பக்ஷிகளுக்கு; அதிரஸதயா - அதிக இனிமையாக இருப்பதால்; சஞ்சு ஜடிமா ஆஸீத் - மூக்கு திகட்டி மறத்துப் போதல்; அத: ஆகவே; தே - அவை; ஆம்லருசய: - புளிப்பில் ஆசையுடையதாக; சீதாம்சோ: சந்திரனுடைய; அம்ருத லஹரீம் - கிரணங்களாகிய அம்ருத கலையை; காஞ்ஜிகதியா - கஞ்சி என்றெண்ணி; ஸ்வச்சந்தம் - யதேஷ்டமாக; நிசி நிசி - ஒவ்வொரு இரவிலும்; ப்ருசம் பிபந்தி - நிறையக் குடிக்கின்றன.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:

அன்பு முற்றிவடி வாய அம்மைநின்
தான னத்துமதி நகைநிலா
நன்பு றத்தமுத மொழுகு மாமதுர
நறைகொள் சீதளம யின்றவாய்
இன்பு ளிப்பலது உவட்டு றாதினியெ
நத்தெ விட்டியச கோரம்வான்
முன்ப ரப்புநில வுண்ணு மாலுனது
மூர லுக்குநிகர் மூரலே.


-----------------------------------------------------------------------------------------




அவிச்ராந்தம் பத்யு: குணகண கதாம்ரேடநஜபாஜபா
புஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷதச்சச்சவிமயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா

தாயே!, பதிவிரதையான நீ, உன் புருஷனுடைய லீலைகளை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் உனது நாக்கானது செம்பரத்தைப் புஷ்பம் போன்று சிவப்பாக இருக்கிறது. அவ்வாறான உனது நாக்கில் குடிகொண்டிருக்கும் சரஸ்வதி தேவியின் சுத்த ஸ்படிக நிறமானது உனது நாவில் இருக்கும் சிவப்பின் காரணமாக பத்மராகக் கல்லின் காந்தியோடு கூடினதாக மாறியிருக்கிறது.

அன்னையின் நாக்கில் சரஸ்வதி தேவி எப்போதும் இருப்பதாகச் சொல்வது வழக்கம். அவளுடைய நிறம் ஸ்படிகம் போன்ற வெளுப்பு. அப்படியிருந்தாலும் அவள் வாசம் செய்யும் அன்னையின் நாக்கு ரக்த வரணமாக இருப்பதால் சரஸ்வதி தேவியும் நிறம் மாறி பத்மராகக் கல்லின் ஒளியுடன் இருப்பதாகச் சொல்கிறார். அன்னை எப்போதும் தனது புருஷனது லீலைகளைப் பேசிக்கொண்டே இருப்பதாகச் சொல்லி அவளது நாக்கைச் சிறப்பித்துக் கூறும்போதே அவளது பாதிவிரந்தத்தையும் விசேஷமாகச் சொல்கிறார்.

தவ ஸா ஜிஹ்வா - உன் நாக்கானது; அவிச்ராந்தம் - எப்போதும்/இடைவிடாது; பத்யு: - உன் புருஷனான பரமசிவத்திடம்; குணகண கதாம்ரேடந ஜபா - ஈசனின் கல்யாண குணங்களைச் சொல்லும் கதைகளை மீண்டும் மீண்டும் மந்திர ஜபம் போல; ஜபா புஷ்ப - செம்பரத்தைப் பூ; சாயா -
நிறத்துடன்; ஜயதி - விளங்குகிறது; யதக்ராஸீநாயா - யத் அக்ராஸீனாயா: - எந்த நாக்கின் நுணியில்; ஸரஸ்வதியா - சரஸ்வதி தேவியின்; ஸ்படிக- த்ருஷத்-அச்சவிமயீ - ஸ்படிகம் போன்ற வெண்மையான ஒளியுடைய; மூர்த்தி: - ரூபமானது; மாணிக்க வபுஷா - பத்மராகத்தின் ரூபமாக; பரிணமதி - மாறுதல் ஆகிறதோ?.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:

விள்ள நாவுரை எழுந்தொ றுந்தலைவர்
வீரமும் புகழும் அழகுமே
தெள்ளு பாடல்மது ரம்ப ழுத்தனைய
செய்ய கேழொளிவ னப்பினால்
அள்ளல் மாமலரை விட்டு வாணியுனது
அருண நாவுறைய வெள்ளையாய்
உள்ள மேனியுமே னம்மை நீயருள
உன்நி றம்பெறுவ தொத்ததே.

செளந்தர்யலஹரி 61 & 62


அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்

ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:


அம்மா!, முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்) நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும். அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.

மூங்கிலரிசி என்பது மூங்கில் கணுக்களிடையே இருப்பதாகப் படித்த நினைவு. மூங்கில் உள்ளே முத்துக்கள் இருப்பதாகச் சொல்லப்படுமாம். இங்கே ஆசார்யார் அன்னையின் மூக்கை மூங்கில் போன்று இருப்பதாகக் கூறுகிறார். மேலும், மூங்கில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போல அன்னையின் மூக்கினுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அன்னை ஸ்வாசத்தை வெளிவிடும் போது உள்ளிருக்கும் முத்தானது வெளிவந்துநமக்குத் மூக்குத்தியாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.


துஹிந கிர்வம்சத்வஜபடி - ஹிமவான் வம்சத்துத்திற்கு த்வஜத்தின் கொடி போன்றவளே; த்வதீய: அஸெள - உன்னுடைய நாசதண்டமானது; அஸ்மாகம் - எங்களுக்கு; உசிதம் - தகுந்தது; நேதீய: - சீக்கிரம் கிடைக்க; பலம் பலது - (உன் நாச தண்டமானது) பலத்தை தரட்டும்; அந்த: தன்னுள்; முக்தா: வஹதி - முத்துக்களை கொண்டுள்ள; யத்: எதனால்; தாஸாம் ஸம்ருத்யா - நிறைந்துள்ள; பஹிரபி ச - வெளியிலும் கூட; சிசிரகர நிச்வாஸகளிதம் - வாம நாடி என்று கூறப்படும் இடது பக்கத்து மூக்கு துவாரம்(சாதாரணமாக மூச்சினை வெளிவிடும் பகுதி); மூக்தா மணிதர - முத்து மூக்குத்தி (புல்லாக்கு?) அணிந்திருக்கிறதோ?

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

இமய மன்னன் மரபில் வெற்றி
இடுப தாகை அனையஎன்
அமலை யுன்றன் வதம துண்ட
அணிசி றந்த மணியையோ
விமலு மன்னு கவிஞர் முத்தை
வெற்பில் வல்லி யலர்வதோர்
கமல மன்னு குமிழ ளித்தல்
கண்ட தல்ல என்பதே

-------------------------------------------------------------------------------------



ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா


அம்பிகே!, இயற்கையாகவே சிவந்த் உன்னுடைய அதரங்களுக்கு சமமாக ஒரு பொருள் ஏதாவது இருக்குமானால், அது பவழக்கொடியில் பழுத்த பழமாக இருக்கலாம். கோவைப் பழமோ உன்னிடௌய அதரத்தினது ஒளியால் உண்டான சிவப்பு நிறமுடையதாக இருப்பதால், அது உனது அதரகாந்தியின் முன் வெட்கப்படும்படியாக இருக்கிறது.

பவழக்கொடிக்கு பழம் கிடையாது, ஆகையால் அம்பாளுடைய அதரங்களுக்கு இணை ஏதுமில்லை என்று கூறுகிறார். கவிஞர்கள் சாதாரணமாக பெண்களின் அதரத்திற்குச் சமமாகக் கோவைப்பழத்தையும், பவழத்தையும் சொல்வது வழக்கம். கோவைப் பழத்திற்கு சம்ஸ்கிருதத்தில் பிம்ப-பலம் என்று பெயர். அன்னையின் அதர பிம்பத்தின் சிகப்பு நிறமானது கோவைக்கனியில் பிரதிபலிப்பதாலேயே அப்பழம் அந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார். ஆக, பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர். இதுவே சஹஸ்ரநாமத்தில், "நவவித்ரும பிம்ப ஸ்ரீந்யக்கார் தசனச்சதா" என்று கூறப்படுகிறது.

ஸுததி - அழகிய பல்வரிசை உடையவளே; ப்ரக்ருத்யா - இயற்கையாக; ஆரக்தாயா: - சிவந்திருக்கும்; தவ - உன்னுடைய; தந்தச் சதருசே: அதரத்தின் அழகானது; ஸாத்ருச்யம் -உபமானமாகும்; ப்ரவ்க்ஷ்யே - சொல்லுகிறேன்; வித்ருமலதா - பவழக்கொடி; பலம் - பழம்; ஜயநது - உண்டாக்கும்; பிம்ப பலம் - கோவைப் பழம்; தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் - உதட்டின் பிரதி பிம்பத்தால் ஏற்பட்ட நிறத்தில்; அருணிதம் - சிவப்பாக; கலயா - சிறிதளவு; துலாம் - சமமாக இருக்கும் தன்மை; அத்யாரோடும் - அடைவதற்கு; கதம் ந விலஜ்ஜேந - ஏன் வெட்கப்படாது?

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


இறைவி நின் இதழ் சிவப்பு
இயற்கை ஒத்து இணைச்சொன்னால்
நிறைகொள் கொவ்வை இந்த நிறத்தின்
நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும் மற்றோர்
உவமை இல்லை உண்டென்றால்
அறைகடல் துகிர்ப்ப ழுக்கின்
அன்று சொல்வன் அளியனே.