செளந்தர்யலஹரி 93 & 94



அராளா கேசேஷு ப்ரக்ருதி ஸரளா மந்த ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா


அம்பிகே!, பரமசிவனுடௌய மனதுக்கும் வாக்குக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்றழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய். கருணா சக்தியானது உனது கூந்தலில் சுருளாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும் மனதில் வாகைப் பூவைப் போல மிருதுத்தன்மையானதாகவும், நிகில்களில்கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினத்தைப் போன்ற கடுமையானதாகவும், இடையில் மிகுந்த மெலினமாகவும், மார்பும், நிதம்பமும் பருமனாகவும் விளங்குகிறது.

'காருண்ய விக்ரஹா' என்னும் த்ரிசதியில் வரும் நாமத்தை நினைவுபடுத்துவதாக இந்த ஸ்லோகம் இருக்கிறது.கருணாரஸத்தை அருணவர்ணமாகச் சொல்லுவது வழக்கம் என்றும், அந்த கருணையானது மூர்த்தியாக வந்திருப்பது போல சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் தேதியூரார்.

கேசேக்ஷு அராளா - கூந்தலில் சுருளாகவும்; மந்த ஹஸிதே - மந்தஹாசமான சிரிப்பில்; ப்ரக்ருதி ஸரளா - ஸ்வபாவமான ஸெளகுமார்யத்தோடும்; சித்தே - மனதில்; சிரீஷாபா - சிரீஷ குஸுமம் (வாகை மலர்)போல ம்ருதுவாகவும்; குசதடே - ஸ்தன ப்ரதேசத்தில்; த்ருஷதுபலசோபா - கருங்கல் போல கடினமாகவும்; மத்யே - மத்ய ப்ரதேசத்தில் (இடுப்பில்),ப்ருசம் தந்வீ - மிகவும் மெலிந்ததாகவும்; ரஸிஜாரோஹ - ஸ்தன ப்ரதேசத்திலும், நிதம்ப ப்ரதேசத்திலும்; ப்ருது: - பருத்ததாகவும்; அருணா - சரீரம் முழுவதும் சிவந்ததாகவுள்ள; சம்போ: - பரமேஸ்வரனுடைய; காசிக் கருணா - அழகுடைய கருணாமூர்த்தியான; ஜகத் த்ராதும் - லோகங்களைக் காப்பாற்றுவதற்காக; விஜயதே - வெற்றிகரமாக விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

ஒதியிருள் மூரலொளி உற்றகுழை வாக
மோதுமுலை யற்பஇடை முற்றுமு னிதம்பம்
ஆதிபர னின்னருள் திரண்டருண மாகு
மாதுநின்ம லர்ப்பதம னத்தெழுதி வைத்தேன்.

******************************************************************************



களங்க: கஸ்தூரி ரஜநிகரபிம்பம் ஜலமயம்
களாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்
அதஸ்த்வத் போகேந ப்ரதிதிநமிதம் ரிக்த குஹரம்
விதிர் பூயோபூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே

தாயே!, சந்த்ர மண்டலமானது களங்கமாகிற கஸ்தூரியுடனும், சந்த்ர பிம்பம் தோற்றுவிக்கும் கலைகள் பச்சைக்கருபூரப் பொடிகளோடு நிரம்பிய மரகதச் சிமிழாக இருக்கிறது. இப்படி உன்னுடைய ஸ்நானத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் சாமக்கிரியைகளை நீ தினமும் உபயோகம் செய்வதால் காலியாகும் இந்தச் சிமிழை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிரப்பி வைக்கிறார்.

கஸ்தூரி, பன்னீர், பச்சைக்கர்ப்பூரப்பொடி போன்றவை அம்பிகையின் ஸ்நான திரவியங்கள். இவைகளுடைய பெட்டியானது சந்திர மண்டலமாகவும், கஸ்தூரி கருப்பாகவும், பன்னீர் தளதளவென்றும், சந்திர கிரணங்கள் கர்பூரப்பொடிகளாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளன. சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும், மற்றொரு பக்ஷத்தில் வளர்ந்தும் வருவது அன்னையின் ஸ்நானத்திற்கான திரவியங்கள் குறைவதற்கும், பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறப்புவதற்கும் உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

களங்க: சந்திர மண்டலத்தில் அழுக்குப் போன்று களங்கம் தெரிவது; கஸ்தூரீ - கஸ்தூரீ திரவியம்; ரஜநிகர பிம்பம் - சந்திர பிம்பம் போல தோன்றுவது; ஜலமயம் - பன்னீர்; களாபி: - கலைகள்; கர்பூரை: - பச்சைக் கர்பூரப் பொடிகளோடும்; நிபிடிதம் - நிரம்பிய; மரகத கரண்டம் - மரகதத்தால் செய்யப்பட்ட சிமிழ்; அத: - அக்காரணத்தால்; ப்ரதிதினம் - தினமும்;த்வத் போகேந - உன்னுடைய உபயோகத்தால்; ரிக்த குஹரம் - காலியாகும் சிமிழை; விதி: - பிரம்மா; பூயோபூயோ: மீண்டும் மீண்டும்; தவ க்ருதே - உனக்காக; நிபிடயதி - நிரப்பி வைக்கின்றார்; நூநம் - நிஜமே.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

தூயமதி மரகதச்செப் பொளிர்கலையுங்
களங்கமுநேர் சொல்லுங் காலைக்
காயுமதி தவளகருப் பூரசக
லத்தொடுகத் தூரி போலும்
நீ அருந்த அருந்தவவை குறைதொறுமவ்
விரண்டும் அயன் நிறைத்தல் போலும்
தேயுமது வளருமது திங்களொளி
தோவுனது செல்வ மம்மே.

செளந்தர்யலஹரி 91 & 92


பதந்யாஸக்ரீடா பரிசயமிவாரப்து மநஸ:
ஸ்கலந்தஸ்தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணிமஞ்ஜீர ரணிதச்
சலாத் ஆசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே

அம்பிகே!, உன் இல்லத்திலிருக்கும் அன்னபக்ஷிகள் உன்னுடைய அழகிய நடையைக் கண்டு அம்மாதிரி தாமும் நடக்க கற்றுக்கொள்ளூம் எண்ணத்துடன் உன்னைப் பின்பற்றி நடக்கப் பழகுகின்றன. அவ்வாறு அவை உனது நடையழகைப் பின்பற்ற முயற்சிக்கையில் நீ அணிந்திருக்கும் பாதரசமணிகளின் இனிய சப்தமானது அந்த பக்ஷிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.

கவிஞர்கள் அன்னபக்ஷியின் நடையை அழகிய பெண்களது நடைக்கு ஒப்பாகச் சொல்வது வழக்கம். இப்பாடலில் அன்னபக்ஷிகளே அன்னையிடத்தில் நடக்கக் கற்றுக் கொள்ளுவதாகக் கூறுவதன் மூலம் அன்னையின் நடையழகை சிறப்பாகக் கூறுகிறார். அன்னை காலில் அணிந்திருக்கும் தண்டை மற்றும் கொலுசுகளின் மூலம் ஏற்படும் சுநாதமானது அன்னையது நடையழகை பக்ஷிகளுக்கு கற்றுத்தருவது போல இருக்கிறதாம்.

இங்கே 42ஆம் ஸ்லோகத்தில் அன்னையின் க்ரீடம் பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது. இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும்.

சாரு சரிதே - அழகிய சரித்திரத்தை உடையவளே!, தே பவந கலஹம்ஸா: உன் வீட்டிலிருக்கும் அன்ன பக்ஷிகள்; பதந்யாஸ க்ரீடா பரிசயம் - பாதங்களை அழகாக வைத்து நடக்க முயல்வதாக; ஆரப்து மநஸ: - ஆரம்பிப்பதாக நினைத்து;ஸ்கலந்த: - தடுமாறியபடி; தே கேலம் - உன்னைப் பின் தொடர்தலை; ந ஜஹதி - விடுவதில்லை; சரணகமலம் - பாதாரவிந்தங்கள்; ஸுபக மணி மஞ்ஜீர ரணிதச்சலாத் - அழகிய பாதரஸ மணிகளின் இனிய சப்தத்தின் மூலமாக; தேஷாம் சிக்ஷாம் - அந்த அன்னபக்ஷிகளுக்குச் சொல்லிக் கொடுப்பது; ஆசக்ஷாணம் இவ - சொல்வது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!

நாடியுன தற்புத நடைத்தொழில்ப டிக்கும்
பேடைமட அன்னமொடு பேதநடை கூறும்
ஆடகம ணிப்பரிபு ரத்தரவம் அம்மே
ஏடவிழ்ம லர்ப்பதமி ரைக்குமறை போலும்.

********************************************************************************

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி ருத்ரேச்வரப்ருத:
சிவஸ் ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலந ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்


தாயே!, லோகாதிகார புருஷர்களான ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்கள் உனது சிம்மாசனத்தின் கால்களாக இருக்கிறார்கள். அந்த சிம்மாசனத்தில் மேல் விரிப்பாக வெண்மையான ஒளியுடைய ஸதாசிவன் இருந்தாலும் உன்னுடைய சிருங்காரமான சிகப்பான ஒளியின் காரணமாக அவரும் சிவப்பாகத் தோற்றமளித்து உனது கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறார்.


பிரம்மா முதலிய நால்வரும் லோகதத்தின் அதிகார புருஷர்களாக இருந்தாலும், அம்பிகையின் சமீபத்தில் இருந்து ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசையில் அவளது கட்டில்கால்களாகவாவது இருக்க விரும்பி அவ்வாறு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சதாசிவனுடைய மடியில் அன்னை வீற்றிருக்கிறதையே 'பஞ்சப்ரேதாசனா' கோலமாகச் சொல்கையில் மேல் விரிப்பாக சதாசிவன் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 'சிவாகாரே மஞ்சே', 'பரமசிவ பர்யங்க நிலயாம்' என்பதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட கோலத்தை அடிப்படையாகக் கொண்டதே.


த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத: - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈசானன் ஆகிய லோகாதிகார புருஷர்கள் உன்னுடைய மஞ்சத்தின் கால்களாக: கதா: ஆகிவிட்டார்கள்; சிவ: ஸதாசிவனார்; ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சத பட: மேல்விரிப்பு என்கிற வெண்மையான ரூபத்தில்; த்வதீயானாம் - உன்னுடைய; பாஸாம் - சிகப்பான ஒளி; ப்ரதிபலநராகா ருணதயா - ப்ரதிபலனாக சிகப்பாக மாறியது; சரீரீ - உருவமெடுத்த; ச்ருங்காரோ ரஸ இவ - ச்ருங்கார ரஸம் போல்; த்ருசாம் - உன் கண்களுக்கு; குதுகம் - ஆனந்தம்; தோக்தி - கொடுக்கிறார்.


வீரை கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!

மூவர்ம கேசன் முடிகொளு மஞ்சத் தொழிலாயும்
மேவிய படிகத் தனதொளி வெளிசூழ் திரையாயும்
ஓவறு செங்கேழ் விம்பம தின்பத் துருவாயும்
பாவைநி னகலா இறையொடு நின்னைப் பணிவாமே

செளந்தர்யலஹரி 89 & 90


நகைர் நாகத்ரீணாம் கரகமலஸங்கோச சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணெள
பலாநி ஸ்வஸ்த்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமநிசம் அன்ஹாய தததெள

சண்டிகே!, தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருக்ஷங்கள்/மரங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன. உன்னுடைய பாதங்களோ தரித்ரர்களுக்கும் சிறந்த ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இதனாதானோ உன்னுடைய பாதங்களில் இருக்கும் நகங்களது ஒளி தேவ-தாருக்களைப் பரிஹாசிப்பது போன்று தெரிகிறது?. உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபோல தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்த்ரீகளது தாமரைப் பூ போன்ற கரங்கள், (சந்திரன் கண்ட தாமரை கூம்பிக் கொள்வது போல) உனது பாதம் கண்டதும் கூப்பிய கைகளுடன் வணங்குன்றனர்?.

அன்னை சண்ட-முண்டர்களை வதைத்த சண்டி ரூபமாக விளிக்கிறார் இப்பாடலில். அவளது சரணங்களை ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் கல்பக விருக்ஷத்திற்கு (கேட்டவற்றை எல்லாம் கொடுக்குமாம் கற்பகமரம்) ஒப்பாகச் சொல்லி, அந்த கற்பக மரமாவது தேவர்களுக்கு மட்டுமே எல்லாம் தரும், ஆனால் அன்னையின் சரணங்கள், சாதாரணர்கள் கேட்பதை விட அதிகமாக எல்லாம் தரும் என்கிறார். இவ்வாறு அன்னையின் சரணங்கள் கற்பக மரங்களைவிட சிறப்பாக இருப்பதால் அம்மரங்களை அன்னையில் பாதங்களில் இருக்கும் நகங்கள் பரிஹாசம் செய்கிறதாம்.

கிஸலய - துளிர்களாகிய; கராக்ரேண - கை நுனிகளால்; ஸ்வஸ்த்தேப்ய: - ஸ்வர்கத்தில் வசிக்கும் தேவர்களுக்கு; பலாநி தததாம் - பலன்களைக் கொடுக்கும்; திவ்யானாம் தரூணாம் - தேவலோகத்தில் இருக்கும் சிறந்த மரங்கள் (கற்பகம் போன்றவை); தரித்ரேப்ய: - தரித்திரர்களுக்கும் கூட; பத்ராம் ச்ரியம் - சிறப்பான ஐச்வர்யத்தை; அநிசம் - எப்போதும்; அந்ஹாய - சீக்ரமாக;தததெள - கொடுக்கிற; தே சரணெள - உன் பாதங்கள்; நாகஸ்த்ரீணாம் - தேவலோக ஸ்த்ரீகளுடைய; கரகமல - கைகளாகிய தாமரைப் பூக்களை; ஸங்கோச சசிபி: - சந்திர ஒளியால் கூப்பிய; நகை: - நகங்களால்; ஹஸத: இவ - பரிஹாசம் செய்வது போல.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அற்ற வர்க்கருள் செய்யும் மம்மைநின்
அற்பு தப்பத மம்பொன்நாடு
உற்ற வர்க்கருள் பொற்ற ருத்தர
ஊட நிந்தில மென்னவே
முற்று பொற்பர மாதர் கைத்தல
முண்ட கங்குவி வெண்நிலா
நற்றிற் றத்தொடு நாடி நாடிந
கைக்க வாளுகி ரென்பரே.
*******************************************************************************

ததானே தீநேப்ய: ச்ரியமநிசம் ஆசாநுஸத்ருசீம்
அமந்தம் ஸெளந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தாரஸ்தபமஸுபதே யாது சரணே
நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

தாயே!, எளியவர்களுக்கும்கூட ஆசைப்ப்பட்ட அளவு ஸம்பத்தை/செல்வத்தை எப்போதும் கொடுப்பதும், லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.

மகரந்தம் நிறைந்த மலர்களை வண்டுகள் சுற்றிவருவது சகஜம். அம்பிகையின் பாதங்களானது தேவலோக மலர்க் கொத்துப் போல இருப்பதாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசார்யார். வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருப்பதால் அதை 'ஷட்-சரணம்' என்று கூறுவார்கள். இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்களை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் + மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார்.

தீநேப்ய: - எளியவர்கள்; ஆசானு ஸத்ருசீம் - அவர்கள் கோரியபடி; ச்ரியம் - செல்வத்தை; அநிசம் ததாநே - எப்போதும் கொடுப்பது; அமந்தம் - அதிகமான; ஸெளந்தர்ய ப்ரகரமகரந்தம் - லாவண்யமான/அழகான மகரந்தம்; விகிரதி - இறைக்கிறதும்; மந்தாரஸ்தபக ஸுபகே - கற்பக மரத்துப் மலர்களின் கொத்துப் போன்று அழகான; அஸ்மிந் தவ சரணே - உன்னுடைய இந்த பாத கமலங்களில்;நிமஜ்ஜந் - நன்கு மூழ்கினதான; கர சரண: - கரணங்களே கால்களாக உடைய; ஷட் சரணதாம் வண்டாக இருக்கும் தன்மையை; மஜ்ஜீவ: - என்னுடைய ஆத்மா; யாது - அடையட்டும்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அன்பினர்இ ரப்பதின் இரட்டியருள் செய்யும்
நின்பதத ருத்துணர்நி றைந்தொளிர்வ னப்பாம்
இன்பமுறு தேன்முழுகு மென்னியத வண்டின்
தன்புளக மெய்க்களி தழைக்கவருள் தாயே.

செளந்தர்யலஹரி 87 & 88


ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரெள
நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதெள
வரம் லக்ஷ்மீபாத்ரம் ச்ரியமதைஸ்ருஜந்தெள ஸமயீனாம்
ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரமிஹ கிம்


தாயே!, பனிமலையிலேயே இருக்கக்கூடியவையும், இரவு, பகல், ஸந்த்யாகாலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும், ஸமயாசாரமுடைய பக்தர்களுக்கு லக்ஷ்மியைக் கொடுக்கக்கூடியதுமான உனது பாதங்கள், பனியில் நாசமடைந்தும், இரவில் உறங்கியும், லக்ஷ்மி விரும்புகிற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜயித்து இருப்பதில் வியப்பில்லை.

அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி. தாமரைப்பூ அதிக பனியில் கருகிவிடுமாம். சூரியனது கதிர் கண்டே மலரக்கூடியது தாமரை. தாமரைப் பூவில் லக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்வர். லக்ஷ்மியும் எப்போதும் தாமரையில் இருப்பதில்லையாம், தனக்கு இஷ்டமிருக்கையில்மட்டுமே வந்து அமர்கிறாளாம். இவ்வாறாக இரவில் மலராதும், பனியில் கருகியும், எப்போதாவது மஹா-லக்ஷ்மி அமரும் தாமரைப் பூவைவிட, அன்னையின் பாதங்கள் சிறப்பாக பனிமலையிலும், ஒருநாளின் எல்லா காலங்களிலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தருவதுமான தாமரை என்று ஒப்பு நோக்கிக் கூறியிருக்கிறார்.

ஹிமகிரி - பனிமலை; நிவஸைக சதுரெள - இருப்பிடத்தில் ஸாமர்த்தியமாகவும்; நிசி - இரவில்; சரமபாகே ச - அடுத்த ஸந்த்யா காலங்களிலும், பகலிலும்; விசதெள - மலர்ந்திருப்பதும், ஸமயினாம் - ஸமயாசாரமுள்ள பக்தர்களுக்கு; ச்ரியம் - லக்ஷ்மிகரத்தை; அதி ஸ்ருஜந்தெள - உண்டாக்குகிற; த்வத் பாதெள - உன் பாதங்கள்; ஹிமாநி ஹந்தவ்யம் - பனியில் நாசமாகிற; நிசாயாம் - இரவில்; நித்ராணாம் - உறங்குகின்ற; வரம் லக்ஷ்மி பாத்ரம் - லக்ஷ்மிக்கு விருப்பமான இடமான; ஸரோஜம் - தாமரைப் புஷ்பத்தை; ஜயத: - ஜயிக்கின்றது; இஹ சித்ரம் கிம் - ஆச்சர்யமென்ன?.

கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!

இமநெ டுங்கிரி உலவி யுங்கவின்
எழுநி ரந்தர மலருமேல்
அமர்பெ ருந்திரு அருளு நின்பத
அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலை யின்திரு மனையெ னும்பெயர்
விளவ தொன்றல முதல்வியே.
*********************************************************************************

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபதம் அபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிநகமடீ கர்பர துலாம்
கதம் வா பாஹுப்யாம் உபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா

தாயே!, கீர்த்தி/புகழுக்கு உரியதாகவும், ஆபத்துக்கள் அணுகமுடியாததாகவுமுள்ள உனது பாதங்களை, கடினமான ஆமையின் முதுகு ஓட்டிற்கு ஸமமானதாக கவிஞர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ?. பரம-தயவுடைய சிவனுக்கு உன்னுடனான விவாஹ காலத்தில் அதி-மிருதுவான உனது பாதங்களைகளை எடுத்து பாராங்கல்லான அம்மியில் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ?.

அம்பிகையின் பாதங்கள் பக்தர்களுக்கு புகழையும் அளித்து அவர்களுக்கு ஏற்படும் சகலவிதமான ஆபத்துக்களையும் போக்கவல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில், 'கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபாதன் விதா' என்று அம்பிகையின் அழகிய வளைந்த பாதங்களை ஆமையின் மேலிருக்கும் ஓட்டுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதைச் சொல்கிறார். கல்யாணங்களில் சப்தபதியின் போது பெண்ணின் பாதத்தை தனது கைகளால் எடுத்து அம்மியின் மேல் வைத்து மந்திரங்கள் உச்சரிப்பர். அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ என்று கேட்பதன் மூலமாக அன்னையின் பாதங்களது மென்மையை சிறப்பாகக் கூறுகிறார் ஆசார்யார்.

தேவி - அம்மா; கீர்த்தானாம் பதம் - கீர்த்திக்கு இடமான; விபதாம் அபதம் - ஆபத்துக்களுக்கு இடமில்லாத; தே - உன்; ப்ரபதம் - பாதத்தின் முன்பகுதி; ஸத்பி: - ஸாதுக்களால்/கவிஞர்களால்; கடின - கடினமான; கமடீகர்பர துலாம் - ஆமையின் மேல் இருக்கும் ஓடு; கதம் நீதம் - ஸமமாக எப்படிச் சொல்லப்பட்டது; தயமாநேந மநஸா - தயவோடு கூடிய மனசுள்ள;புரபிதா - பரமசிவனால்; உபயமநகாலே - உன்னுடைய விவாஹ/திருமண காலத்தில்; யத் - எந்தப் பாதங்களை; பஹுப்யாம் ஆதாய - கைகளால் எடுத்து; த்ருஷதி - அம்மியில்; கதம் வா ந்யஸ்தம் - எப்படித்தான் வைத்தாரோ?.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பஞ்ச ழுத்தினும் வாடு நின்பத
பங்க யத்தினை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வம்பு றக்கம
டத்தை வீணில் வியப்பராம்
அஞ்ச னப்புயல் தங்கெ நின்வரர்
அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்ச கக்கொடு நெஞ்ச ரத்தனை
வல்ல ரல்லர் நினைக்கினே.

செளந்தர்யலஹரி 85 & 86


நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே
அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே
பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே


தாயே!, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.

உத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அரியமென் காவில் நீபுக்கு
அசோகினிற் பாத மேற்ற
உரியநம் பதத்தை யீதோ
உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும்
இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளமினி தினிது மாதே.

*********************************************************************************


ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா
துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா

அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.

அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.

ம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - பிறந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

மறும டந்தையை மொழிய நின்பத
மலர்வெ குண்டர னுதலிலோர்மு
றைய றைந்திட விழியி னும்பட
முத்ப ழம்பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன்
எனமு ழங்கிய குரலெனாது
அறைசி லம்பெழும் அரவ மென்பதன்
அருண மங்கல கமலையே.

செளந்தர்யலஹரி 83 & 84


பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே
நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ
நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:

அம்மா!, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.

மன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், "இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.

கிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி
ஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்
செம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி
சேர்த்தன்றோ சிவன்பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத் தளித்தனையின் றன்று போல
ஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ
வம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்
மனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே

*********************************************************************************




ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:

தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக.

அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.

மாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உளமகிழ் மகிழ்நர் சென்னி
உறுநதி விளக்க மாயோன்
கிளர்முடிப் பதும ராகத்
கேழொளி செம்பஞ் சேய்க்கும்
முளரிநின் பதங்கள் வேத
முடியுறப் பதித்த தவ்வாறு
எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.

செளந்தர்யலஹரி 81 & 82



குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச


தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.


பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

கொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்
குலமலைப் பக்க மெனவாழ்
அத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்
அடையவுன்நி தம்ப விடையே
எத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை
இதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற
வருத்தவோ மதுர அமுதே.


******************************************************************************



கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி


அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.

அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.

பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்
புழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து
மணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே
நிற்கடின கோபமம ராமை கண்டோ
நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்
பிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.
பெற்றதிது என்னுமிந்தப் பெருமை கண்டோ.