செளந்தர்யலஹரி 79 & 80


நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ
நமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா
ஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே


பெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே!, இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது. அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும். அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி, ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார். இதனை அபிராமி அந்தாதியில் 'சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்' என்று கூறியிருக்கிறார் பட்டர்.

நாரீதிலக - பெண்ணினத்தின் திலகமான; சைலதநயே - மலையரசன் மகளே; நிஸர்க்க க்ஷீணஸ்ய - ஸ்வபாவமாகவே மெலிந்த; ஸ்தந-தட-பரேண - நகில்களின் பாரத்தால்; க்லம ஜுஷ: - சிரமத்துடன்; நமந்மூர்த்தே: - (பாரத்தால்) வளைந்த ரூபத்துடன்; சநகை: - மெல்ல மெல்ல; த்ருட்யத இவ - ஒடிந்து போவது போல; த்ருடித - இடிந்த; தடிநீ தீர - நதிக்கரையிலுள்ள; தருணா - மரம்; ஸ்மாவஸ்தா - சமமான நிலையில்; ஸ்தேம்ன: இருக்கும்; தே மத்யஸ்ய - உன்னுடைய இடுப்பிற்கு; குசலம் - க்ஷேமமானது; சிரம் - நீண்ட காலம்; பவது - உண்டாகட்டும்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தரைம டந்தை பரவு மங்கை
தனத டம்பொ றாதுநின்
திரும ருங்கு லறவ ளைந்து
சிறுகி மூவி ரேகையாய்
வரைபி ளந்தொ ரிடிக ரைக்குள்
வாழ்ம ரத்தொ டொத்ததால்
உரைக டந்து விடுமுன்
மற்றொ ருறுதி தேட நாடுமே

----------------------------------------------------------------------------------------


குசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள
கஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா
தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ

தாயே!, உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது, அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது.

அன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர். அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால் ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

த்ரிவளி என்னும் மூன்று மடிப்புக்கள் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு அந்த த்ரிவளியானது இடுப்பு முறிந்திடாது காப்பதற்காகப் போடப்பட்ட கட்டுப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் 'ஸ்தன-பார-தலன் - மத்ய பட்ட பந்த-வலித்ரயா' என்பதும் இந்தப் பொருளையே குறிப்பிடுகிறது.

ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரெள - வேர்வையால் உடலில் ஒட்டிய கச்சையைக்; தோர்மூலே கஷந்தெள - கைகளின் அடிப்பாகத்தில் இருக்கும்; கநக கலசாபெள - தங்க கலசங்களொத்த; குசெள - உன் ஸ்தநங்கள்; கலயதா - செய்த; தநுபுவா - மன்மதன்; வலக்நம் - இடுப்பு;பங்காத் அலம் இதி - முழுவதும் ஒடிந்திடாது; த்ராதும் - காக்கும்; த்ரிவளி தவ வலக்நம் மூன்று வரிகளை/மடிப்புகளையுடைய உன்னுடைய இடுப்பு; லவலீவல்லிபி: - வள்ளிக் கொடிகளால்; த்ரிதா நத்தம் இவ மூன்று சுற்றுக்கள் சுற்றப்பட்டது போல இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

வம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திளகி
வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக்களிற் றினையனைய உனதுமுலை
கொடிதுகொடி தென்று வெருவா
அம்பொற் றனிக்கமல இறைபொறா திடையென
அழுத்துபூ ணென முனிவரோடு
உம்பர்க்கு முளமருள ஒளிகெழுமி ரேகைமூன்
றுலகமோ தெளிவ துமையே

செளந்தர்யலஹரி 77 & 78

யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்


மங்கள ஸ்வரூபியே! அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.

காளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.

சிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முளரி மாதுன் முலையி னோடு
முலைநெ ருக்க இடையில்வான்
வெளியில் நீல மோடி யுந்தி
வியன்மு ழைக்குள் நுழையவெ
தெளியு நீரில் யமுனை நீவு
சிறுத ரங்க மனையபெ
ரொளியின் ஞால மருளு மீது
ரோம ரேகை யென்னவெ
---------------------------------------------------------------------------------------------

ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா
கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே

மலையரசன் பெண்ணே!, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா? இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா?, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா?, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது.

நாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது "நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.

நாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.

கிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தூய கங்கை நிலைப டைத்த
சுழித னத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆல வாலம் விரகவேள்
தீய ரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்க ணிடைவிடா
மேய கஞ்ச மடுவி னுந்தி
வேறு ரைத்தென் விமலையே.

செளந்தர்யலஹரி 75 & 76



தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!.

பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன்.

தரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெருகுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

தருண மங்கலை உனது சிந்தை
தழைந்த பாலமு தூறினால்
அருண கொங்கையி லதுபெ ருங்கவி
அலைநெ டுங்கட லாகுமே
வருன நன்குறு கவுணி யன்சிறு
மதலை அம்புயல் பருகியே
பொருள்ந யம்பெறு கவிதை யென்றொரு
புனித மாரிபொ ழிந்ததே.

--------------------------------------------------------------------------------------------

ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா
ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி

பார்வதி!, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.

உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.

அசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

மூல மேநின் மகிழ்நர் கோப
முதுக னற்பொ ருதுவேள்
கோல நாபி மடுவி னிற்கு
எரிப்ப வந்த வெம்மையான்
மேல வாவு தூம ரேகை
வேரே ழுங்கொ ழுந்தையோ
நீல ரோம ரேகை யென்று
நீள்நி லங்கு றிப்பதே.

செளந்தர்யலஹரி 73 & 74


அமூ தே வக்ஷோஜெள் அம்ருதரஸ மாணிக்ய குதுபெள
ந ஸந்தேஹ ஸ்பந்தெள நகபதிபதாகே மநஸி ந:
பிபந்தெள தெள யஸ்மத் அவிதித வதூஸங்க ரஸிகெள
குமாரெள அத்யாபி த்விரதவதந க்ரெளஞ்சதலநெள

அம்மா, உன்னுடைய மார்பிலிருப்பது பால் நிறைந்த ஸ்தனங்களல்ல, அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும்பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள். அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர். இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம்.

மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால் அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர். இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர். அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும்.

அமூ தே வக்ஷோஜெள - உன்னுடைய ஸ்தனங்கள்; அம்ருதரஸ மாணிக்ய குதுபெள - அம்ருத ரஸம் நிறம்பிய மாணிக்கத்தாலான குடுவைகள்; ந மநஸி - எங்கள் மனதில்; ந ஸந்தேஹ ஸ்பந்த: - ஸம்சயம் லவலேசமும்/சிறிதும் இல்லை; யஸ்மாத் - ஏனென்றால்; தெள பிபந்தெள - அவைகளை பானம் செய்கின்ற; த்விரத வதந க்ரெளஞ்ச தலநெள - கஜானனனும், க்ரெளஞ்சத்தைப் பிளந்த குமரனும்; அத்யாபி - இன்னமும்; அவிதித வதூஸங்க ரஸிகெள - ஸ்த்ரீ ஸங்கமத்தின் ரஸம் தெரியாத; குமாரெள - குழந்தைகளாக இருப்பது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முக்கணிறை வர்க்குமயல் முற்றஎழின் முற்றும்முலை
முட்டியசு ரப்பொ ழுகுபால்
மக்களிரு வர்க்கருள அக்களிறும் இக்குகனும்
மட்டிளமை முற்று கிலரால்
அக்கடலு தித்தஅமு தத்தனையெ டுத்ததில
டைத்திருகண் முத்தி ரையின் வாழ்
செக்கர்மணி மெய்க்கலச மத்தனையுன் வட்டமுலை
செப்பலம் லைப்பு தல்வியே

------------------------------------------------------------------------------------


வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே

தாயே! உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது. அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது. இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.

சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்என்று சொல்கிறார் தேதியூரார்.

குசா போக: - ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசம்; ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி: - கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உருவான; முதாமணிபி: - முத்து மணிகளால்; ஸமாரப்தாம் - நன்றாக சேர்க்கப்பட்ட; அமலாம் - தோஷமில்லாத; பிம்பாதர ருசிபி: - கோவைப் பழம்போல சிவந்த அதர காந்தியால்; அந்த: சபளிதாம் - உட்புறம் சித்ர வர்ணங்களோடு கூடியதாய்ச் செய்யப்பட்ட; ஹாரலதிகாம் - கொடிபோன்ற ஹாரத்தை; புரதமயிது: - புரங்களை அழித்தவரான ஈசனுடைய; ப்ரதாப வ்யாமிச்ராம் - பராக்ரமத்தோடு கலந்த; கீர்த்திமிவ - கீர்த்தியைப் போல; வஹதி - தரித்துக் கொண்டு.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

கொற்ற வாரண முகம கன்பொரு
குஞ்ச ரானன நிருதனார்
இற்ற கோடு திர் ஆர மாலிகை
இதழ்ம னிப்ரபை தழையவே
பெற்ற பாகபி னாக பாணிப்ரதாப
மோடணை புகழெனா
உற்ற தாயினும் உனது பொற்றனம்
உரைப டாநிறை செல்வியே.

செளந்தர்யலஹரி 71 & 72


நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம்

தாயே உமா!, புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான, அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?. மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம் ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம்.

அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை, அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர். புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல. அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை, ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இருப்பதாக வேண்டுமானால் கூறலாம் என்கிறார்.

நகானாம் - நகங்களுடைய; உத்யோதை: - காந்தி/ஒளியினால்; நவ நளிந ராகம் - அன்றலர்ந்த செந்தாமரையின் நிறத்தில்; விஹஸதாம் - ஏளனம் செய்யும்; தே - உன்னுடைய; கராணாம் - கைகளின்; காந்திம் - ஒளியை;கதம் - எவ்வாறு; கதயாம: - வருணிப்போம்?; கமலம் - செந்தாமரை; யதி - ஒருவேளை; க்ரீடத் லக்ஷ்மி-சரண-தல - தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில்; லாக்ஷாரஸ சணம் - செம்மையான நலங்கு என்னும் கால் அலங்காரம்;கயாசித்வா - எப்படியோ; கலயா - சிறிதளவு; ஸாம்யம் - ஒற்றுமை; பஜது - அடையலாம்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

திருமகள்தன் சீறடியால் துவண்டும் அதிற்
செம்பஞ்சாற் செங்கேழ் பெற்றும்
மருமுளரி எழில்படைத்த திதுவோநம்
இயற்கையெதிர் அலர்வ தென்றே
இருகரமு நகைத்தநகை ஒளியையுனது
எழிலுகிரேன் றிறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்ற ததிசயமோ
பேதமையோ அன்போ அம்மே
------------------------------------------------------------------------------------------


ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம்
யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி

தாயே!, உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும், அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள் எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும். அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார்.

தேவதேவர்களுக்கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும். அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்குஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.

ஸ்கந்த - கந்தன்/முருகன்; த்விபவதந - விநாயகப் பெருமான்; பீதம் - பால் அருந்தும்; ப்ரஸ்னுத-முகம் - பால் சுரக்கும் காம்புகளுடைய; ஸ்தனயுக - நகில்கள் இரண்டும்; ந: - எங்களுடைய; கேதம் - துன்பத்தை; ஸததம் - எப்போதும்; ஹரது - போக்கடிக்கட்டும்; யத் - அந்த நகில்களை; ஆலோக்ய - பார்த்து; ஆசங்கா - சந்தேகித்து; ஆகுலித - கலங்கிய; ஹ்ருதய - மனத்துடன்; ஹேரம்ப - வினாயகர்; ஹாஸ-ஜனக: - சிரிப்பு உண்டாகும்படியாக; ஸ்வகும்பெள - தனது தலையில் உள்ள இரு கும்பங்களை; ஜடிதி - அவசரமாக; ஹஸ்தேன - கைகளால்; பரிம்ருசதி - தடவிப் பார்க்கிறார்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

நித்தரொரு பக்கர்மயில் நிர்களிறுன் வட்டமுலை
நிற்குமெழி வில்த னதுசீர்
மத்தகமெ னத்தனில் யிர்த்தொருக ரத்தைமுடி
வைத்துறவு றத்த டவுமால்
முத்தமுலை செப்புவதெ னக்களிறு பிற்குமரன்
முற்புதல்வர் துய்த்த அமுதால்
அத்தலைமை பெற்றனர் அதில்திவலை கிட்டினுமென்
அற்பஉயிர் முத்தி பெறுமே.

செளந்தர்யலஹரி 69 & 70


கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே

ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!, உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும். உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.


இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார். விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது. அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார். ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம். அந்த த்ரிவளீ எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார். ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது, மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது. இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.

கதி-கமக-கீதைக நிபுணே - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே; தே களே - உன் கழுத்திலுள்ள; திஸ்ரோ ரேகா - மூன்று மடிப்புகள்/வரிகள்; விவாஹ வ்யாநத்த ப்ரகுண - விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;குண ஸங்க்யா ப்ரதி புவ: - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்; நாநாவித - பலவிதமான; மதுர ராகாகர புவாம் - இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற; த்ரயாணாம் க்ரமாணாம் - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு; ஸ்திதி நியம ஸீமாந இவ- இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல; விராஜந்தே - விளங்குகின்றது.


கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

செந்திருநின் திருமணத்திற் சேர்ந்தசர
மூன்றழுந்தித் திகழ்வ தென்கோ
மந்தரமத் திமதார மூவகைநா
தமுமெல்லை வகுத்த தென்கோ
கொந்திரையுந் துணர்பூகங் கொழுத்தபசுங்
கழுத்தின்வரைக் குறிகள் மூன்றும்
இந்திரையுஞ் சயமகளுங் கலைமாதும்
புகழ்வதல்லால் யானென் சொல்வேன்.

---------------------------------------------------------------------------------------------



ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா


அம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.



ம்ருணாளீ ம்ருத்வீனாம் - தாமரைத் தண்டு போன்ற ம்ருதுவான; தவ -உனது; சதஸ்ருணாம் புஜ லதானாம் - கொடிகள் போன்ற நான்கு புஜங்களை; ஸெளந்தர்யம் - அழகை; ஸரஸிஜபவ: ப்ரம்மா; ப்ரதமமதனாத் - தன்னுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த; அந்தகரிபோ: - பரமசிவன்;நகேப்ய: - நகங்களுக்கு; ஸம்த்ரஸ்யந் - பயந்துகொண்டு; ஸம-அபய - ஏக காலத்தில் அபயம்; சதுர்ணாம் சீர்ஷாணாம் - மீதமிருக்கும் நான்கு தலைகளுக்கும்; அபயஹஸ்தார்ப்பணதியா - அபயப்ரதானம் செய்வாயென்ற எண்ணத்தில்; சதுர்பிர் வதனை: - தனது நான்கு முகங்களாலும்; ஸ்தெளதி - ஸ்தோத்ரம் செய்கிறார்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


முன்னமொரு தலைசினவுன் முதல்வரால்
இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக் கேற்றபசுங் கழைமணித்தோள்
ஒருநான்கும் வழுந்து கின்றான்
இன்னமொரு சீற்றமெழுந் தரிமலையை
எனினுமிவள் தடமென் தோளைச்
சொன்னதலைக் கழிவிலையென் றதிற்றுணிந்த
துணிவன்றோ சுருதி வாழ்வே.

செளந்தர்யலஹரி 67 & 68


கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுல தயா
கரக்ராஹ்யம் சம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மெளபம்ய ரஹிதம்



தாயே!, உன்னிடம் வாத்ஸல்யமுள்ள ஹிமவானால் தன் கைவிரல்களின் நுனியில் தொடப்பட்டதும், உன்னுடைய அதரத்தைப் பானம் பண்ணுகிறதில் ஆசையுள்ள உன் புருஷனான பரமசிவனால் அடிக்கடி உயரே தூக்கப்பட்டதும், அவருடைய கைக்கு அடங்கியதும்,ஸமமாகச் சொல்லக்கூடியது ஏதும் இல்லாததும், உனது முகம் என்னும் கண்ணாடிக்குக் கைப்பிடிக் காம்பு போன்றதுமான உன்னுடைய முகவாய்க்கட்டையை நாங்கள் எப்படி வர்ணிக்க முடியும்?.

அன்பு/ப்ரியம் என்பது ஒவ்வொருவரது உறவின் மூலம் பல பெயர்களில் கூறப்படுகிறது. தாய்-தந்தை தனது குழந்தையிடம் கொண்டிருப்பது வாத்ஸல்யம் என்பர், இதே போல கணவன் தனது மனையாளிடம் கொண்டிருப்பது ப்ரேமை என்றும், சிஷ்யன் தனது குருவிடம் கொண்டிருப்பது பக்தியென்றும், குரு தமது சிஷ்யர்களிடம் கொண்டிருப்பது அனுக்ரஹமென்றும் கூறுவர். இந்த ஸ்லோகத்தில், பராம்பிக்கைக்கு ஹிமவான் தந்தையானதால் [பார்வதி அவதாரம்] வாத்ஸல்யமும், பரமசிவ பத்னி என்பதால் ஈஸ்வரனுக்கு அன்னையிடம் இருப்பது ப்ரேமை என்றும் ஆசார்யார் கூறுகிறார்.

இன்றும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் கைபிடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம். அது போலவே அன்னையின் முகமென்னும் கண்ணாடிக்கு கைப்பிடியாக இருக்கிறதாம் அன்னையின் முகவாய்க்கட்டை. 'அனாகலித ஸாத்ருச்ய சுபுகஸ்ரீவிரஜிதா' என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வருவதன் பொருளானது அம்பிகையின் முகவாய்கட்டுக்கு இணையாக வர்ணிக்க ஏதுமில்லை என்பதே.

துஹிந கிரிணா - உன் பிதாவான ஹிமவானால்; வத்ஸலதயா - குழந்தையிடத்து வாத்ஸல்யம்/அன்பு; கராக்ரேண - கை விரல் நுணியால்; ஸ்ப்ருஷ்டம் - தொடப்பட்டதும்; கிரிசேந - உன் புருஷனான பரமசிவனால்; அதர-பான-குலதயா - அதரபானம்பண்ணுவதிலேயே அதிக ப்ரேமையுடவரான; முஹு: - அடிக்கடி; உதஸ்தம் - உயரத் தூக்கப்பட்டதும்; சம்போ: - அவருடைய - பரமசிவனுடைய; கரக்ராஹ்யம் - கையால் பிடிக்கத் தகுந்ததும்; ஒளபம்ய ரஹிதம் - உபமானமில்லாத/நிகரற்ற;முக முகுர வ்ருந்தம் - முகமாகிற கண்ணாடிக்குக் காம்பு/பிடி போன்ற; தவ சுபுகம் - உன் முகவாய்க்கட்டையை; கதம்காரம் ப்ரூம: எப்படி வர்ணிப்போம்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


மகவாசை யாலிமைய மலையரையன்
மலர்க்கைதொட மனத்து ளன்பு
புகாஅசை யாலிறைவன் கரத்தேந்தப்
பொலிவுறுநின் சுபுகம் போற்றின்
முகவாசி அரன்படிமக் கலம்பார்க்க
விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சகவாழ்வை இகழ்ந்திதயந் தனித்தவர்தந்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே.







புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்
ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா


அம்பிகே!, பரமசிவன் உன்னை எப்போதும் ஆலிங்கனம் செய்வதினால் ஏற்படும் மயிர்க்கூச்சத்தால் உன் கழுத்துப் பகுதி முள்ளு-முள்ளாக இருக்கிறது. இவ்வாறான உனது கழுத்துப் பிரதேசம், உனது முகமாகிய தாமரைக்குத் தண்டு போன்று தோற்றம் தருகிறது.கழுத்தில் அணிந்திருக்கும் முத்து ஹாரம் வெண்மையானாலும், உனது கழுத்தில் பூசப்பட்டிருக்கும் கருத்த அகில் கலந்த சந்தனக் குழம்பின் மிகுதியால் சேற்றில் இருக்கும் தாமரைக் கொடியைப் போன்றதாக இருக்கிறது.

அன்னையின் முகத்தை தாமரைப் புஷ்பத்திற்கும், கழுத்தை தாமரைத் தண்டாகவும் சொல்லி தாமரைத் தண்டில் இருக்கும் சிறு முள்ளுகள் போல ஈசனது ஆலிங்கனத்தால் அன்னையின் கழுத்தில் உள்ள மயிர்கால்கள் கூச்செரிதலுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்.தாமரை, தண்டு ஆகியவற்றை அன்னையின் முகம், கழுத்துக்கு உவமையாக்கி, பின்னர் தாமரைக் கொடிக்கு உவமையாக அன்னையின் கழுத்தில் விளங்கும் முத்தாலான ஹாரத்தைச் சொல்கிறார். முத்து மாலை வெண்மை நிறமுடையது என்றாலும் அன்னையின்கழுத்தில் இருக்கும் அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பில் புரள்வதால் தனது வெண்மையை இழந்து தாமரைக் கொடி போல காணப்படுவதாகச் சொல்கிறார்.

தவ - உன்னுடைய; க்ரீவா - கழுத்து; புரதமயிது: - முப்புரமெரித்த சிவனது; புஜாச்லேஷாத் - புஜங்களின் தழுவுதலால்; நித்யம் - எப்போதும்; கண்டகவதீ - மயிர்க் கூச்செரிந்து முள்ளுகள் போல; முக-கமல-நால-ச்ரியம் - முகத்தாமரைக்குக் காம்புபோன்ற அழகை; தத்தே - அடைகிறது; யத் அத: - அதன் கீழே; ஹார-லதிகா - முத்து மாலை; ஸ்வத: - இயற்கையில்; ச்வேத: - வெண்மையாக; காலாகரு - கருமையான அகிலுடன் சேர்ந்த; பஹுல-ஜம்பால - சந்தன குழம்பினால்; மலினா - சேற்றில்;ம்ருணாலீ - தாமரைக் கொடியின்; லாலித்யம் - பொலிவை; வஹதி - கொண்டதாக இருக்கிறது.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

வயங்குறுநின் தரளவட மான்மதச்சே
றளையமது மத்தர் மேனி
முயங்குதொறும் எழுபுளக முட்பொதிந்த
பசுங்கழுத்து முகமுங் கண்டால்
இயங்குபுனற் கருஞ்சேற்றின் எழும்வலய
முள்ளரைத்தா ளீன்ற கஞ்சம்
பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப்
பசுமையொளி பழுத்த பொன்னே.